கொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...!
மனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று தன் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது
எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்!
என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் - கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.
இயங்கியலற்ற மார்க்சிய சிந்தனைமுறையில் கொரோனா
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தனக்கும், தன் வீட்டுக்குள்ளும் வாரது, மரணம் தன்னை சுற்றி நிகழாது என்ற சுய கற்பனையில் - சுய அறியாமையில் இருந்து கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், தங்கள் கருத்துக்கு இடதுசாரிய முலாம் பூசுகின்றனர்.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மையப்படுத்தாத, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அணுகுகின்ற பார்வை - முதலாளித்துவ சிந்தனைமுறை. உனக்கு வைரஸ் தொற்று வந்தால், உன்னைச் சுற்றி மரணம் நிகழ்ந்தால் இதை எப்படி நீ பார்ப்பாய்? முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா? இல்லையென்றால் மக்களுக்கு என்ன கூறுவாய்?
இடதுசாரியத்தின் பெயரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அணுகுகின்ற எல்லாப் பார்வையும், இயங்கியலற்ற வரட்டுத்தனமாகும். தன்னை மையப்படுத்தி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தனியுடமைவாதக் கண்ணோட்டம். இதுதான் தனிமனிதர்களுக்குள் இயங்கும் முதலாளித்துவச் சிந்தனைமுறை.
இப்படிப்பட்ட சிந்தனைமுறைகள் வழி மார்க்சியத்தையும், முதலாளித்துவத்தையும் கிளிப்பிள்ளைகள் போல் உளறுவதை அறிவாக்க முனைகின்றனர். தமக்கு தெரிந்ததை வைத்து மீண்டும் அரைக்கின்றதைத் தாண்டி - இயங்கியல் முறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சமகால விடையம் மீது இயங்கியலற்று புலம்பவது நடக்கின்றது. முதலாளித்துவம் அப்படித்தான் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் முழங்க முடியும். மக்களை அறிவூட்ட முடியாது.
கொரோனா குறித்து!? : பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சியம் மீதான கேள்வி
உலக முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகி திணறுகின்றது. சமூக வலைத்தளங்களே பாரிய கருத்துருவாக்கத்தை கட்டமைக்கின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் கட்டமைக்கும் தகவல்களையும் - சிந்தனைகளையும் அவை காவி வருகின்றன. மறுபக்கத்தில் உதிரித்தனமான நம்பிக்கைகள், கற்பனைகள், பரபரப்பான தனிமனித அற்பத்தனங்கள், அறியாமைகள்… முதல் மதம் - இனம் - சாதி - நிறம் சார்ந்த குறுகிய வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் - சிந்தனைகள்.. எல்லாம் அறிவியல் மூலம் பூசி - மனித சமூகத்தையே திசை தெரிய முடியாத வகையில் திணறடிக்கின்றது.
மக்களைச் சார்ந்த உண்மைகளையும் - அறிவியலையும் - நடைமுறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும், சமூக இயக்கங்களைக் காண முடிவதில்லை. அநேகமாக வெறும் சொற்களுக்குள் - எதிர்தரப்பை திட்டுகின்ற மொழிக்குள் முடங்கிவிடுகின்றதையே காணமுடிகின்றது. தன்னியல்பின் பின்னால் வால் பிடிப்பதையே காண முடிகின்றது. முகமூடி போட்ட போலி அறிவியலை - அறிவென்று நம்பி பரப்புகின்றது. பகுத்தறிவு கொண்டு அணுகவும், அனைத்தையும் சந்தேகக் கண்ணுடன் அணுகிப் பார்க்க முடியாத தத்துவ வறுமைக்குள் முடங்கி விடுகின்றது. இதனால் மக்களை அறிவூட்டக் கூடிய வகையில், மக்களை அணிதிரட்டக் கூடிய வகையில் சிந்தனைகளையும் - செயற்பாடுகளையும் காண முடிவதில்லை. சமூக இயக்கங்கள் செயலற்று தேங்கி விடுகின்றது. அறிவொளியில் இயங்குகின்ற இயங்கியல் தன்மையை சமூகம் இழந்து நிற்கின்றது.
கொரோனா (SARS-CoV-2 – Corona Virus Disease 2019) வதந்திகளும் - வாந்திகளும் - அரசியலும்
தாங்கள் பேசுகின்ற விடையங்கள் குறித்தும், பரப்பும் விடையங்கள் குறித்தும் தன்னளவில் தான், சமூக பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். நஞ்சுகளைப் பரப்புவது வலதுசாரிகளால் மட்டுமல்ல - இடதுசாரியத்தின் பெயரிலும் நடந்தேறுகின்றது. கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மடடு;ம் பரவவில்லை, மனிதனின் பகுத்தறிவை அழிக்கும் வதந்திகளும் - வாந்திகளுமே பரப்பப்பட்டு மனிதனின் பகுத்தறியும் தன்மையை கொன்று வருகின்றது.
கொரோனா (SARS-CoV-2) வரலாறு திரிக்கப்படுவதில் இருந்தே, அனைத்து தகவல்களும் - பித்தலாட்டங்களும் மூளைக்குள் திணிக்கப்படுகின்றது. கொரோனா குறித்து பெற்றுக்கொண்ட புனைவுகள், கற்பனைகள்– அது உருவாக்கும் அரசியல் கேடுகெட்ட மனிதவிரோதக் கூறாக பரிணமிக்கின்றது. இதை கேள்விக்குள்ளாகி – பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்.
….
சீன மருத்துவர் டாக்டர் லீயை முன்னிறுத்தியே, கொரோனா குறித்த அனைத்து கற்பனைகளும் - புனைவுகளும் அறிவாக கட்டமைக்கப்படுகின்றது.
தனிமனித கருத்துச் சுதந்திரம், அரசின் ஜனநாயகத் தன்மை, வைரஸ் பரவல், மரண விகிதம் … என்று, பலவிதமான கருத்துகளும் அதன் மூலம் அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது.
30.12.2019 டாக்டர் லீ முதன்முதலாக வைரஸ் தொற்றுக் குறித்து தனது தனிப்பட்ட சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர் சார்ஸ் (SARS-CoV-1) வைரஸ்சாக இருக்கும் என்று கூறுகின்றார். இந்தத் தகவல்களை சீன அரச மூடி மறைத்ததாகவும் - வைரஸ் பரவ அனுமதித்ததாகவும், இதனால் தான் உலகின் இன்றைய அவலம் என்ற கருத்தைக் கட்டமைக்கின்றனர். இது உண்மையா எனின் இல்லை.
31.12.2019 சீன அரசாங்கம் உலகச் சுகாதார அமைப்புக்கு, இனம் காண முடியாத வைரஸ் தொற்றுக்குள்ளான 41 பேர் தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிவித்திருக்கின்றது. அதாவது டாக்டர் லீ சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையாகவும் - பொறுப்பற்ற விதத்திலும் அறிவித்த மறுநாளே சீன அரசு உலக சுகாதார அமைப்புக்கு அறிவித்திருக்கின்றது. இங்கு சீன அரசு தவறு இழைக்கவில்லை, எதையும் மூடிமறைக்கவுமில்லை. அரசு மிகத் தீவிரமாக அக்கறை எடுத்து உலகுக்கு அறிவித்த தகவலை, சக மருத்துவர் மூலம் பெற்ற டாக்டர் லீ (இவர் ஒரு கண் மருத்துவர்) அதை சமூக வலைத்தளத்தில் முன்வைக்கின்றார்.
சீனா, தென்கொரிய வழிமுறைகளும் - மேற்கின் தடுமாற்றங்களும்
உலக முதலாளித்துவமானது கொரோனாவுக்கு எதிராக ஒரே திசையில் பயணிக்க மறுப்பதன் மூலம், கொரோனா தொடர்ந்து பரவும் அதேநேரம் வைரஸ் தொற்று முடிவுக்கு வராது. கொரோனா வைரஸ்சை எதிர்கொள்வதில் உலக முதலாளித்துவமானது பிரிந்து நிற்கின்றது. ஏகாதிபத்தியங்கள், வரையறுக்கப்பட்ட அரச முதலாளித்துவம், வலதுசாரிய இன, நிறவாத … அரசு கொள்கைகளால் முரண்பட்டே கொரோனாவை அணுகுகின்றனர். இந்த வேறுபாட்டையும், மக்கள் விரோதக் கூறுகளையும் கண்டுகொள்ளாத கொரோனாவுக்கு எதிராக மக்களை முன்னிறுத்தும் சிந்தனை முறையானது, தெளிவற்ற குறுகிய அணுகுமுறையால் மனித பகுத்தறிவையே அரித்து வருகின்றது.
அரசுகள் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கின்றதுக்கு முரணாக எதிர்மறையில் கொரோனா நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவை பற்றி பேசுவதற்குள் - கொரோனா அரசியலை குறுக்கி விடுகின்றனர். வைரஸ்சுக்கு எதிரான அரசுகளின் கொள்கைகள் சரியானதா என்பது குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை. இதன் பொருள் அரசுகள் கொரோனாவுக்கு எதிராக சரியான அரசியலில் மக்களை வழிநடத்துவதாகவும் - பொருளாதாரரீதியாக மட்டுமே தவறாக இருப்பதான பொதுப் பிரமைக்குள் - மனிதர்களை வழிநடத்தி விடுகின்றனர்.
அரசுகள் கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, வைரஸ் பரவலை அனுமதிக்கின்ற வகையில் மேற்கு முதலாளிகளிள் இலாபத்துக்கான (தேவைக்கானதல்ல) உற்பத்தியை மீள தொடங்கவுள்ளது. இதையே மூன்றாம் உலக நாடுகளும்; பின்தொடரும்.
கொரோனாவைப் புரிந்து கொள்ளாத இடதுசாரியம்
கொரோனாவைக் கண்டு பயந்த மக்கள், மந்தைகள் போல் தப்பித்து ஓடுகின்றனர். பணமுள்ள தரப்பினர் விடுமுறையாக மாற்றி கும்மாளம் குத்துகின்றனர். அன்றாடம் கஞ்சிக்கு உழைக்கும் உதிரி உழைப்பாள வர்க்கம் கூட்டம் கூட்டமாக அலைகின்றது. இளைஞர்கள் தம்மை கொரோனா பாதிக்காது என, கூறி ஊர் சுற்றுகின்றனர். மதவாதிகள் கடவுள் கொரோனாவை எம்மிடம் அண்ட விடமாட்டார் என்று கூறி, கூடிக் கும்மி அடிக்கின்றது. இப்படி ஆயிரம் விதமாக, அறிவிழந்த மனிதச் செயற்பாடுகள். இது உருவாக்கும் சிந்தனைகள். சமூக வலைத்தளங்களில் வைரஸ்சாகி வருவதால், அறிவிழந்து போன மனித நடத்தைகளால் வைரஸ் சுதந்திரமாக பரவுகின்றது.
இடதுசாரியம் எதைக் கற்றுக் கொண்டுள்ளது? எதைக் கற்றுக் கொடுக்கின்றது? இடதுசாரியம் இதை வால் பிடிக்கின்றது. தன்னியல்பு இன்றி பின்னால் ஓடுகின்றது. தன் அரசியல் நடத்தையை சமூக சேவையாக மட்டும் குறுக்கி விடுகின்றது. முன்னோக்கி மக்களை அறிவியல் ரீதியாக வழிநடத்த வேண்டிய அரசியல் பாத்திரத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள், கொரோனா குறித்து புரிதலேயின்றி - முதலாளித்துவத்தின் கால் தடங்களின் பின்னால் ஓடுகின்றது.
கொரோனா குறித்து முதலாளித்துவம் தடுமாறிய அணுகுமுறைகளின் பின்னுள்ள அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. முதலாளித்துவமானது பொருளாதார கண்ணோட்டத்தில் கொரோனாவை அணுகி அலட்சியப்படுத்தியது போன்று, இடதுசாரியமும் அதே பொருளாதார அடிப்படையின் கீழ் இருந்து அணுகுவதன் மூலம் - மக்களை வழிநடத்தத் தவறிவிட்டனர்.
வைரஸ்சுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டுமா!?
அரசு அதிகாரம் மூலம் மக்களைப் பாதுகாத்தீர்களா, பாதுகாக்கின்றீர்களா என்பதை அரசுகளிடம் கேட்கத் தவறுகின்றவர்கள், குவியும் அரசு அதிகாரம் ஆபத்தானது என்று அரசியல் வகுப்பு எடுக்கின்றனர். சமூகமாக தன்னைத்தான் உணராத தனிமனித சுயநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் பொதுநடத்தையைக் கேள்வி கேட்பதற்கு பதில், தனிமனித சுதந்திரங்கள் குறித்த பாடம் எடுக்க முனைகின்றனர். என்ன முரண். இதுதான் திரிபு.
மக்களை எதார்த்தத்தின் மீது சிந்திக்கவிடாது, நாளை குறித்த கற்பனை உலகிற்குள் நகர்த்துவது. ஆழ்ந்து புரிந்துகொள்ள விடாது, அடுத்தடுத்து புதிய விடையத்துக்குள் நகர்த்துவது. புதிய அதிகாரங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழைய அதிகாரம் இழைத்துக் கொண்டிருக்கும் குற்றத்தை கண்டுகொள்ளாது இருப்பது - மறைப்பது.
என்ன நடக்கின்றது, தனிமனித சுதந்திரங்களே வைரஸ்சை பரப்புகின்ற சமூகக் கூறாக மாறி நிற்க, சமூகத்தின் சுதந்திரம் குறித்து சிந்திக்கின்றவர்கள் வைரஸ் பரவுவதை தடுக்க முனைகின்றனர். அரசு தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூலதனத்தைப் பாதுகாக்க, மக்களை பலியாடாக்கி இருக்கின்றது. இது தான் எங்கும் தளுவிய உண்மை.
இப்படி இன்று வைரஸ்சுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து, அது அதிகாரத்தை மய்யப்படுத்தவும், மக்களை ஒடுக்கவும், மக்களை கண்காணிக்கவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவும்.. கூறி எதிர்க்கின்ற சமூகப் பொறுப்பின்மையை இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றனர். வேறு சிலர் ஒன்றுமில்லாத ஒன்றை ஊடகங்களும், அரசுகளும் ஊதிப் பெருக்கியதாக கூறி, கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையை அலட்சியப்படுத்துவதன் மூலம், அரசுகளின் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றனர்.
கொரோனா (கோவிட் 19) மீட்பு நிதி எங்கிருந்து வருகின்றது!?
மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லையென்றும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியும், அரசு உடமைகளை தனியாருக்கு விற்று வந்த அரசுகள் தான், திடீரென கொரோனா தாக்கத்தில் இருந்து மூலதனத்தை மீட்க பெரும் நிதியை கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ஐp-20 நாடுகள் 5 ரில்லியன் (500 000) கோடி டொலரை இறக்கி இருக்கின்றது. கொரோனா தாக்குதலில இருந்து மக்கள் தப்பிப்பிழைக்க உதவும் மருத்துவ அடிப்படைக் கட்டுமானங்களின்றி உயிர் இழக்கின்ற சூழலில், மக்களை மீட்க முயற்சி எடுக்காமல், மூலதனத்தை மீட்க தாராளமாக அள்ளிக் கொடுக்;கப்படுகின்றது. எங்கிருந்து இந்தப் பணம் வருகின்றது?
கோரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக உற்பத்தியில் 70 முதல் 50 சதவீத உழைப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு மாதங்கள் உழைப்பை முடக்குவதன் மூலமே, மக்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவியல் முடிவுக்கு அமைய உற்பத்திகள் சடுதியாக நின்று போய் இருக்கின்றது. அதேநேரம் முடங்கிய உற்பத்தி மீள முடுக்கிவிடும் போது, ஏற்படும் மந்த நிலையில் இருந்து மீள, மேலதிகமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவை என்று முதலாளித்துவம் கருதுகின்றது. இதற்கான பாரிய நிதித் திட்டங்களை அரசுகள் அறிவித்து வருகின்றது.
இந்த நிதி எங்கிருந்து வருகின்றது? அந்த நிதியை எப்படி, எந்த வடிவத்தில் பகிரத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை, கிடைக்கும் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.
நிதி, அரசின் வரவு செலவில் இருந்து வரவில்லை. மக்களிடம் இருந்து திரட்டப்படவில்லை. உலகின் முழு நிதி மூலதனத்தையும் குவித்து வைத்துள்ள செல்வந்தர்கள் கொடுக்கவில்லை. செல்வந்தர்களின் நிதி மூலதனத்தை அரசுடமையாக்கவில்லை. அப்படியாயின் எப்படி?
இயற்கையை மறுதளித்து சுயநல மருத்துவம் கொரொனாவுக்கு முண்டு கொடுக்கின்றது
கொரோனா உலகெங்கும் பரவிய வடிவம், செல்வ அடுக்குகளின் மேல் இருந்தவர்கள் மூலம் நடந்தேறியது. செல்வ மேல் அடுக்கில் இருந்து கீழாக பயணிக்க தொடங்கிய கொரோனா லைரஸ்சுக்கு தெரியாது, மருத்துவம் பணம் உள்ளவனுக்கு மட்டும்தான் இருந்தது என்ற உண்மை. அனைவருக்கும் மருத்துவமில்லை என்ற எதார்த்தம், பணமுள்ளவனின் மருத்துவ அடித்தளத்தையே தகர்த்துவிட்டது. பணம் உள்ளவன், இல்லாதவன் என்று எந்தப் பாகுபாடுமின்றி, மருத்துவ உலகை புரட்டிப்போட்டு இருக்கின்றது.
அந்தளவுக்கு இயற்கை பணத்துக்கு கட்டுப்பட்டதோ, உட்பட்டதே அல்ல. ஆனால் உலகமயமாதல் அனைத்தையும் பணத்துக்கு உட்பட்டதாக்கியதன் விளைவு, இன்றைய பொது அவலமாக வருகின்றது. இயற்கையில் உருவான வைரஸ்சை சமூகமாக போராடித்தான் எதிர்கொள்ள முடியும், தனிமனிதனாக அல்ல. இயற்கை அந்தளவுக்கு வீரியம் மிக்கது.
இயற்கையில் உருவான ஒரு மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தமோ ஒரு நாளில் 27,03,69,792 கிலோ மீற்றர் பயணம் செய்கிறது. 70,00,000 மூளைச் செல்கள் தொடர்ந்து கற்றுக் கொள்கின்றது. 438 கன அடி காற்றை உள்ளே இழுக்கிறது. 23,000 தடவை சுவாசிக்க முடிகின்றது. 750 தசைகளை அசைக்க முடிகின்றது. இந்த இயற்கையின் ஆற்றல் மேலான மனிதக் குரங்கின் பரிணாமமும், உழைப்பின் ஆற்றல் மனிதனாக பரிணாமமடைந்த போது, உயிரியல் ரீதியாக தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையின் ஆற்றல். இயற்கை தொடர்ந்து இயங்கிக் கொண்டும், தன்னை மாற்றிக் கொண்டும் இருப்பது போல், இந்த இயற்கையில் மனிதனும் தன்னை தகமைத்துக் கொண்டு இருக்கின்றான். இவை அனைத்தும் இயற்கையின் போக்கில் நிகழ்கின்றது.