Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

கொரோனா (SARS-CoV-2 – Corona Virus Disease 2019) வதந்திகளும் - வாந்திகளும் - அரசியலும்

தாங்கள் பேசுகின்ற விடையங்கள் குறித்தும், பரப்பும் விடையங்கள் குறித்தும் தன்னளவில் தான், சமூக பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். நஞ்சுகளைப் பரப்புவது வலதுசாரிகளால் மட்டுமல்ல - இடதுசாரியத்தின் பெயரிலும் நடந்தேறுகின்றது. கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மடடு;ம் பரவவில்லை, மனிதனின் பகுத்தறிவை அழிக்கும் வதந்திகளும் - வாந்திகளுமே பரப்பப்பட்டு மனிதனின் பகுத்தறியும் தன்மையை கொன்று வருகின்றது.

கொரோனா (SARS-CoV-2) வரலாறு திரிக்கப்படுவதில் இருந்தே, அனைத்து தகவல்களும் - பித்தலாட்டங்களும் மூளைக்குள் திணிக்கப்படுகின்றது. கொரோனா குறித்து பெற்றுக்கொண்ட புனைவுகள், கற்பனைகள்– அது உருவாக்கும் அரசியல் கேடுகெட்ட மனிதவிரோதக் கூறாக பரிணமிக்கின்றது. இதை கேள்விக்குள்ளாகி – பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்.

….

சீன மருத்துவர் டாக்டர் லீயை முன்னிறுத்தியே, கொரோனா குறித்த அனைத்து கற்பனைகளும் - புனைவுகளும் அறிவாக கட்டமைக்கப்படுகின்றது.

தனிமனித கருத்துச் சுதந்திரம், அரசின் ஜனநாயகத் தன்மை, வைரஸ் பரவல், மரண விகிதம் … என்று, பலவிதமான கருத்துகளும் அதன் மூலம் அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது.

30.12.2019 டாக்டர் லீ முதன்முதலாக வைரஸ் தொற்றுக் குறித்து தனது தனிப்பட்ட சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர் சார்ஸ் (SARS-CoV-1) வைரஸ்சாக இருக்கும் என்று கூறுகின்றார். இந்தத் தகவல்களை சீன அரச மூடி மறைத்ததாகவும் - வைரஸ் பரவ அனுமதித்ததாகவும், இதனால் தான் உலகின் இன்றைய அவலம் என்ற கருத்தைக் கட்டமைக்கின்றனர். இது உண்மையா எனின் இல்லை.

31.12.2019 சீன அரசாங்கம் உலகச் சுகாதார அமைப்புக்கு, இனம் காண முடியாத வைரஸ் தொற்றுக்குள்ளான 41 பேர் தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிவித்திருக்கின்றது. அதாவது டாக்டர் லீ சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையாகவும் - பொறுப்பற்ற விதத்திலும் அறிவித்த மறுநாளே சீன அரசு உலக சுகாதார அமைப்புக்கு அறிவித்திருக்கின்றது. இங்கு சீன அரசு தவறு இழைக்கவில்லை, எதையும் மூடிமறைக்கவுமில்லை. அரசு மிகத் தீவிரமாக அக்கறை எடுத்து உலகுக்கு அறிவித்த தகவலை, சக மருத்துவர் மூலம் பெற்ற டாக்டர் லீ (இவர் ஒரு கண் மருத்துவர்) அதை சமூக வலைத்தளத்தில் முன்வைக்கின்றார்.

01.01.2020 வைரஸ் தொற்றை அடிப்படையாகக் கொண்டு, சீன அரசு வூஹான் கடல் சார்ந்த விற்பனை மய்யத்தை மூடுகின்றது. இது அரசு வைரஸ்சுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியதை குறிக்கின்றது.

01.01.2020 டாக்டர் லீ விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றார். அரசு சார்ஸ் (SARS-CoV-1) தொற்று என்று அறிவிக்காத ஒன்றைப் பற்றிய விசாரணை.

அதேநேரம் 04.01.2020 டாக்டர் லீ தொடர்ந்து மருத்துவப் பணியில் ஈடுபடுகின்றார். அரசு தன்னிடத்தில் இருந்து இரண்டையும் செய்கின்றது.

05.01.2020 சீன அரசு வைரஸ் தொற்று புதிய சார்ஸ் வைரஸ்சாக இருக்கக் கூடும் என்று பொது வெளியில் அறிவிக்கின்றது.

07.01.2020 சீன அரசும் - உலக சுகாதார அமைப்பும் வைரஸ்சை புதிய 2019 கொரோனா (SARS-CoV-2) என்று அறிவிக்கின்றது.

31.12.2019 முதல் உலக சுகாதார அமைப்பு சீனாவுடன் இணைந்து செயல்பட்டதால் தான், உலக சுகாதார அமைப்பால் இது புதிய வகை (SARS-CoV-2) கொரோனாவென அங்கீகரிக்க முடிந்தது. உலக சுகாதார அமைப்பு (மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே அங்கீகரித்த) இந்த புதிய கொரோனாவை (SARS-CoV-2) – சீனாவின் எடுபிடி தான் உலக சுகாதார அமைப்பு என்று கூறும் "அறிவியல்" மரமண்டைகளும் - மயிர் புடுங்கும் அறிவுப் பன்னாடைகளும், இது புதிய கொரோனாவா இல்லையா என்ற கேள்விக்கு உள்ளாக்க கூட முடியவில்லை.

10.01.2020 திகதி உலக சுகாதார அமைப்பு கொரோனாவை உலகளவில் அடையாளப்படுத்தியதுடன், உலகிற்கான பொது எச்சரிக்கையை விடுக்கின்றது.

11.01.2020 முதலாவது கொரோனோ மரணம் சீனாவில் நிகழ்கின்றது.

இரண்டாவது மரணம் 17.01.2020 நிகழ்கின்றது.

13.01.2020 சீனாவுக்கு வெளியில் முதலாவது (SARS-CoV-2) கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தாய்லாந்தில் அடையாளம் காணப்படுகின்றார்.

16.01.2020 சீனாவில் உள்ள வூஹான் சென்ற யப்பான் சுகாதார அமைச்சார், (SARS-CoV-2) புதிய கொரோனாவை உறுதி செய்கின்றார்.

17.01.2020 சீனா வூஹானை விட்டு வெளியேறும் அனைவரையும் - நோய் தொற்று உண்டா என்பதைக் கண்டறிய - விமான நிலையங்களில் சோதனைக் கருவிகளை நிறுவி சோதிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, நேபாளம், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இதை உறுதி செய்து - அங்கீகரித்தன.

20.01.2020 வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் இறக்க, வூஹான் வெளியில், அதாவது சீனாவில் பிற பகுதிகளில் பீக்கிங், சங்காய், சென்சென்.. 200 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

20.01.2020 மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவுகின்றது என்பதையும், அது எப்படி எந்த வடிவில் மனிதனுக்கு பரவுகின்றது என்பதை சீனா கண்டறிந்ததுடன் - அதை உலகுக்கு அறிவிக்கின்றது. ஆசியாவின் பல பகுதிகளின் கண்காணிப்பை அதிகரித்ததுடன் - சீனாவின் ஆபத்தான வைரஸ் தொற்று பகுதிகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கத் தொடங்கியது.

22.01.2020 கொரோனா மரணம் 17 ஆக மாற, 550 பேர் தொற்றுக்குள்ளாகினர்.

24.01.2020 26 பேர் கொரோனாவால் கொல்லப்பட 830 பேர் தொற்றுக்குள்ளானார்கள். இதையடுத்து வூஹான் 41 மில்லியன் (4.1 கோடி மக்கள்) முற்றாக முடக்கப்படுகின்றனர். பிற இடங்கள் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாகின்றது. சீனா முழுக்க மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்படுகின்றது.

25.01.2020 முற்றாக முடக்கப்படுகின்ற எல்லை அதிகரிக்கப்பட்டு, 56 மில்லியன் (5.6 கோடி) மக்கள் முற்றாக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

10.01.2020 திகதியே உலக சுகாதார அமைப்பு கொரோனாவை (SARS-CoV-2) உலகளவில் அடையாளப்படுத்தியது. வைரஸ்சை ஒவ்வொரு நாட்டிலும் உத்தியோகபூர்வமாக உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்த தொடங்கியது, சீனா ஜனவரி 10 ம் திகதி, தாய்லாந்து ஜனவரி 12, தென்கொரியா ஜனவரி 19, இத்தாலி ஜனவரி 29, அமெரிக்கா ஜனவரி 20, பிரான்ஸ் ஜனவரி 23, ஸ்பெயின் ஜனவரி 30, ஜெர்மனி ஜனவரி 26, பிரிட்டன் ஜனவரி 30, இந்தியா ஜனவரி 29, இலங்கை ஜனவரி 26…. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உலக சுகாதார அமைப்பு, நோய்த் தொற்றை அடையாளப்படுத்தத் தொடங்கியது.

இந்த அடிப்படைத் தரவுகளிலிருந்து தான், ஒவ்வொரு நாட்டின் நடவடிக்கை முதல் மரணங்கள் வரை ஆராய வேண்டும். இதை ஆராய முன் சீனாவை விளங்கிக் கொள்வது அவசியமாகின்றது. சீனாவைக் குறித்த இடது - வலது திரிபுகள், ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் ஒன்றை ஆதரிக்கின்றது.

சீனாவின் எந்த முடிவும் மக்கள் நலனின் இருந்து எடுக்கப்பட்டவையல்ல. மாறாக முதலாளிகளின் நலன் - ஏகாதிபத்திய நலன் அடிப்படையில் இருந்து எடுக்கப்பட்டவையே.

சீனா ஒரு முதலாளித்துவ நாடு. உலக பன்நாட்டு மூலதனத்தின் மையம். உலக மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்தியங்களுடன் போட்டி போடும் நாடு. மேற்கு ஏகாதிபத்தியம் போல், சீனாவும் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது.

இப்படிப்பட்ட முதலாளித்துவ சீனாவை கம்யூனிச நாடு என்ற கூறுகின்ற போதே – அந்தப் பொய்யில் இருந்து தங்கள் கருத்துத் திரிபை தொடங்குகின்றனர். சீன அரசு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான மக்கள் அரசு அல்ல. மக்களைச் சுரண்டும் முதலாளித்துவ ஆட்சி, உலக பன்நாட்டு முதலாளித்துவம் சீன மக்களை சுரண்டவும், தாங்களே பன்நாட்டு மூலதனத்தைக் குவித்துக் கொண்டு, உலக மக்களை சுரண்டுகின்ற மக்கள் விரோத அரசு. எல்லா ஏகாதிபத்தியங்கள் போல் மக்களை ஒடுக்குகின்ற அரசு. இதுபோல் கியூபா, வெனிசுலா, வடகொரியா என்று எங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்சியே கிடையாது.

இங்கு மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்த நாடுகளை கம்யூனிச அல்லது மக்கள் அரசு என்று கூறுகின்ற "இடதுசாரியம்" எவ்வளவுக்கு அரசியலற்ற புரடடுத்தனமானதாக இருக்கின்றதோ, அந்தளவுக்கு வலதுசாரியமும் இவற்றைக் கம்யூனிச நாடுகளாகக் காட்டித் தான், தங்கள் மக்கள் விரோத கருத்துகளை உற்பத்தி செய்கின்றனர்.

இங்கு நாம் அணுகவேண்டியது முதலாளித்துவ அரசுகள் கையாளும் வேறுபாடுகள், அது உருவாவதற்கான வரலாற்றுப் பின்னணி, இன்று மக்கள் தப்பிப் பிழைக்கும் எதார்த்தத்தை எப்படி தீர்மானிக்கின்றது என்பதை விளக்குவதன் மூலம், எதை உருவாக்கவேண்டும் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுப்பது தான்.

உதாரணத்துக்கு சீனா ஒப்பீட்டளவில் அதிக மனித இழப்பின்றி மீண்டதற்கு காரணம் சோசலிசத்தின் எச்சங்களும் - சார்ஸ்சுக்கு (2002-2003) (SARS-CoV-1) எதிரான அதன் அனுபவமுமாகும். சீனாவை விடவும் அதிக இழப்புக் குறைந்த நாடாக ஜெர்மனி இருக்கக் காரணம், இரண்டாம் உலக யுத்தத்தில் அதிக அளவில் தேவைப்பட்ட மருத்துவ அடித்தளங்கள் எஞ்சி இருப்பதும் - சோசலிச கிழக்கு ஜெர்மனி விட்டுச் சென்ற மருத்துவ அடிப்படைகளுமே. இப்படி இருக்க அதிக மனித இழப்புகள் ஏற்படும் நாடுகளுக்குள், அதற்கான காரணத்தை தலைவர்கள், அரசின் அணுகுமுறைகள் - மருத்துவ அடிக்கட்டுமானங்கள் என்று விரிவாக எடுத்து ஆராய முடியும். அனைத்தையும் அறிவுபூர்வமாக ஆராய வேண்டும். பரபரப்பு தகவல்கள் மூலமல்ல.

இங்கு சீனா ஒருகட்சி சர்வாதிகாரத்தைக் கொண்டு மக்களை ஒடுக்கியாள, மேற்கு பல கட்சி சர்வாதிகாரத்தை கொண்டு மக்களை ஒடுக்கி வருகின்றது. இதன் பொருள் இரண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான - முதலாளிகளின் வர்க்க நலனை முன்வைக்கும் வர்க்க சர்வாதிகாரங்கள் தான். இந்த வர்க்க சர்வாதிகாரத்தை தெரிந்தெடுக்கும் போது, மக்கள் பல கட்சிக்கு - ஒரு கட்சிக்கு வாக்களிப்பது என்ற முறை மட்டும் தான் வேறுபடுகின்றது.

சீனா தகவலை மக்களுக்கு மறைப்பது போல், பல கட்சி முறையிலான அரசுகளும் உண்மைகளை மக்களுக்கு மறைக்கின்றது. மேற்கை எடுத்தால், ஊடகங்கள் அரசினதும் - முதலாளிகளினதும் கைத்தடிகள். உலகெங்குமான ஊடகங்கள், பன்நாட்டு முதலாளிகளின் தனியுடமை. சீனாவிலோ பெரும்பாலான ஊடகங்கள் அரசுடமை. அவ்வளவு தான் வித்தியாசம்.

உலகளவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்களின் தலைகீழான முடிவுகளின் பின் மறைக்கப்படும் உண்மைகள், எடுக்கப்பட்ட முடிவுகளின் பின்னால் உள்ள வேறுபட்ட வக்கிரங்கள், வேறுபடும் மரண விகிதங்கள், முரண்பட்ட நிவாரணங்கள் முதல் அதை மறுதளிக்கும் அரசுகளின் பின்னாலான மனித விரோதங்கள் - இப்படி எத்தனை உண்மைகள் புதைக்கப்படுகின்றது. சீனா மட்டுமல்ல உலகமே மக்கள் நலன் அரசுகளல்ல என்பதால், மக்களுக்கு உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன. தனிமனித சுதந்திரத்தை சீனா மறுத்தது என்று பொங்கி வழிகின்றவர்கள் - மேற்கில் தனிமனித ஜனநாயகம் எந்த உண்மையை மக்களுக்கு தந்திருக்கின்றது என்பதை சொல்ல அவர்களிடம் எதுவுமில்லை.

இனி டாக்டர் லீ கூறியது தனிமனித சுதந்திரத்திற்குட்பட்ட உரிமையா!? அமெரிக்க ஜனாதிபதி கொரோனாவுக்கு இந்தா மருந்து என்று காட்டி அறிவித்த கேலிக்கூத்து கூட தனிமனித சுதந்திரம் தான். மாட்டு மூத்திரம், சித்த மருத்துவம் தொடங்கி எத்தனை மருந்துகள், நம்பிக்கைகள், விளக்கங்கள், அறிவுரைகள் .. சமூக வலைத்தளங்களில் நிரம்பி – அவை மக்களை தவறாக வழிநடத்துகின்றது. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் சமூகத்திற்கு முன்வைக்கும் போது, அதற்கான அறிவியல் அடிப்படையையும் - தனிமனிதப் பொறுப்பையும் ஏற்றாக வேண்டும். இங்கு சீன அரசு ஒன்றையும் மறைக்கவில்லை, எதையும் உறுதி செய்யாமல் வதந்தியாக மாற்றுவதை ஒரு அரசு செய்ய முடியாது.

டாக்டர் லீ, சார்ஸ் (SARS-CoV-1) என தன்னிச்சையாக – ஊகத்தின் அடிப்படையில் - பிற மருத்துவர்களின் சந்தேகத்தை பொது வெளியில் கூறியது போன்று, அரசு அப்படி செயற்பட முடியாது. தன்னிச்சையாக உறுதிப்படுத்தாத ஒன்றை மக்களுக்கு கூறும் போது அதை விசாரிக்க வேண்டும். ஒரு அரசு விசாரிக்கா விட்டால் அதுவும் குற்றம் தான். வதந்திகள், நம்பிக்கை அடிப்படையில் மருந்துகள் உண்டு என்று கூறுகின்றவர்கள், பரப்புகின்றவர்கள் அனைவரும் மக்களை தவறாக வழிநடத்தியதற்காக தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள்.

சீனாவைப் பொறுத்தவரையில் சார்ஸ் புதிதல்ல. சார்ஸ் வைரஸ் (SARS-CoV-1) 2002 - 2003 சீனாவில் வந்த போது, 37198 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் 811 பேர் மரணித்தார்கள். தீவிர ஒழிப்பின் பின் காணாமல் போன ஒன்றை, இது தான் அது என்று பொது வெளியில் அரசு மருத்துவ ஊழியர் கூறுவது எந்தளவுக்கு மருத்துவரீதியாக பொருத்தமானது? சீனா முதலாளித்துவ நலனில் இருந்து அணுகினாலும், அரசு என்ற வகையில் மக்களுக்கு சரிவர பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் இருக்கின்றது.

மரண எண்ணிக்கை வேறுபாட்டை விளக்க - சீனா வெளிப்படையற்ற, உண்மையை (சரியான எண்ணிக்கையை) மறைக்கின்றது என்று கூறி, எதையோ தாங்கள் மூடிமறைக்க முனைகின்றனர். தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் குறித்து சதா புலம்பும் நீங்கள், நாம் கேட்கும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். சீனாவுக்கு வெளியில், மற்ற நாடுகளில் ஏன் இந்த மரண விகிதங்கள் பாரிய அளவில் வேறுபடுகின்றது? இந் நாடுகளில் நோய் தொற்றில் மரணமானோருக்கும், தொற்று ஏற்பட்டு அதில் இருந்து விடுபட்டவர்களுக்குமான விகிதமும் பாரியளவில் ஏடாகூடமாக வேறுபடக் காரணமென்ன?

இதற்குப் பதில் முதலாளித்துவத்தின் ஆன்மா எந்தளவுக்கு தாராளவாத சுதந்திரத்தையும் - ஜனநாயகத்தையும் கொண்டு இருந்ததோ, அதேபோல் விரைந்தெடுக்க வேண்டிய முடிவுகள் தாமதமாகி அரைகுறைப் பிரசவமானது. இங்கு மருத்துவ அடிக்கட்டுமானம் வெறுமையாகி – பணமுள்ளவனுக்கு மருத்துவம் - இது தான் முதலாளித்துவ அறமாகியது. இங்கு தான் மரண விகிதமும், உயிர் பிழைப்பவர்களின் எண்ணிக்கைக்கும் மரணமடைவோரின் எண்ணிக்கைக்கும் இடையில் இடைவெளிகள் குறைந்தும், அதாவது மரணிப்பவர்கள் உயிர் பிழைத்தவர்களை விட அதிகமாகும் அளவுக்கு - முதலாளித்துவ வக்கிரங்கள் அரங்கேறுகின்றன.

இந்த அடிப்படையில் தனிமைப்படுத்தலை காலம் தாழ்த்தினர். வைரஸ்சை உறுதி செய்யும் மருத்துவ உபகரணங்களில்லை. போதிய வைத்திய ஊழியர்கள் இல்லை. இரண்டு மாத இடைவெளி இருந்தும் எதையும் தயார் செய்யவில்லை. இப்படி எதையும் தயார் செய்யவும் இல்லை, எதுவுமில்லை என்று தெரிந்தும் தொற்று பரவாது தடுக்க முன்கூட்டியே தனிமைப்படுத்தவுமில்லை. பிரிட்டன் பிரதமரின் உளறல்கள், பிரேசில் ஜனாதிபதியின் தலைக்கனம், அமெரிக்க ஜனாதிபதியின் சேட்டைகள் மனித உயிர்களை பொருட்டாகவே மதிக்கவில்லை. இங்கு சீனாவை குற்றஞ்சாட்ட என்ன அடிப்படை இருக்கின்றது? சீனாதான் இவர்களின் பொறுப்பற்ற மக்கள் விரோத தனத்தை மூடிமறைக்க - மருத்துவ பொருட்களை எல்லா நாடுகளுக்கும் இடைவிடாது வழங்கி வருகின்றது. சீனா இதை கொடுக்காவிட்டால் கற்பனை செய்து பாருங்கள், நிலைமை என்ன என்பதை.

இந்த வைரஸ் அமெரிக்கத் தயாரிப்பு என்று கூறும் அபத்தம் போல் சீனா தயாரிப்பு என்று கூறுகின்ற எதிர்த்தரப்பு வாதங்கள், அறிவியல்பூர்வமானதல்ல. வெறும் நம்பிக்கைகள், கற்பனைகள், தங்கள் சார்பு அரசியல், சாதி, இன, நிற நிலைப்பாடுகள். பரபரப்பைப் பரப்பும் பொறுப்பற்ற தனிமனித விகாரங்கள், வதந்திகளை உண்மையாக்கும் அலுக்கோசுத்தனங்கள் -இதன் பின் பகுத்தறிவை இழந்து நிற்கும் காட்டுமிராண்டித்தனம். இதை விற்கும் ஊடகங்கள், இணைய ஊடகங்கள் ..

சீனா, அமெரிக்கா, ரசியா, ஐரோப்பா .. சிரியா வரை, உயிரியல் ஆயுதங்களை உருவாக்கினர், உருவாக்கி வைத்துள்ளனர். மக்கள் மேல் உயிரியல் ஆயுதங்களைப் பாவிப்பதற்கு தயாராகவே இருக்கின்றனர். இன்றைய சூழலில் இதை கேள்விக்கு உள்ளாக்காது இருக்கும் நீங்கள் யார்? அதேநேரம் ஒரு நாட்டின் மீது குற்றம் சாட்டுவதாக இருந்தால் - உயிரியல் ரீதியான ஆதாரம் வேண்டும்.

வைரஸ் தொற்றை இனம் காணுதல், இது எந்த வகையான வைரஸ், அதன் உயிரியல் கட்டமைப்பு, அதன் தொடர்பு வழி, அது பரவும் விதம்.. என்று ஒரு தொடர்ச்சியான உயிரியல் இயங்கியல் கூறு மீது தான் வைரஸ் அடையாளம் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் கொரோனா (SARS-CoV-2) அடையாளம் காணப்பட்டது. இது அதுவல்ல என்று, அவதூறு பரப்பும் கூட்டம் கேள்விக்குள்ளாக்கவில்லை.

உலகில் உயிரியல் விஞ்ஞான கூடங்கள் கொரோனாவை (SARS-CoV-2) ஆய்வுக்குள்ளாகி வருகின்றது. இதன் மூலம் அதன் புரதக் கூறுகள் வரை அடையாளம் காணப்பட்டதன் மூலம் தான், மருந்தை உருவாக்க முனைகின்றனர்.

இப்படிப்பட்ட உண்மைகள் தவறு என்றால், மிருகத்தின் கொரொனாவுக்கு இது முரணானது என்றால், அதை உயிரியல் அடிப்படையில் நிறுவ வேண்டும். இது கொரோனா (SARS-CoV-2) அல்ல என்று மறுக்க வேண்டி வரும். இப்படி எதுவுமில்லாமல் முன்வைப்பது, அது தான் இது என்று புரட்டுவது என்பது, அறிவு - நேர்மை – சமூகப் பொறுப்பு – அறம் எதுவுமற்ற பித்தலாட்ட பேர்வழிகளாலாலேயே முடியும். இதைப் பரப்புகின்றவர்கள், அறிவற்ற முண்டங்களாக, மந்தைகள் போல் மேய்பவர்களால் மட்டும் செய்ய முடியும்.

இதைப் பணமாக்கும் கூட்டம் தான் சமூக வலைத்தளத்தில் இப்படி உற்பத்தி செய்கின்றனர். தங்களை அறிவியல்வாதியாக, மக்கள் நலனை முன்வைப்பவர்களாக, பெரியாரிஸ்டுகளாக, அம்பேத்கரியவாதிகளாக, கம்யூனிஸ்டுகளாக, ஜனநாயகவாதிகளாக, ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகளாக, இன பண்பாட்டுக் கூறுகளை பாதுகாப்பவராக காட்டிக் கொண்டு, தங்கள் கூட்டுக் கலவைகளை எல்லாம் கரைத்து பருக்க முனைகின்றனர். இதை மந்தைகள் போல், கூட்டம் கூட்டமாக பகுத்தறிவின்றி பரப்பித் திரிகின்றனர். இணையத் தொலைக்காட்சிகள் பணம் சம்பாதிக்கும் தங்கள் தொழிலுக்கு ஏற்ப, மக்களை திசைதிருப்பும் அறிவை உற்பத்தி செய்கின்றனர். பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரியர்கள், கம்யூனிஸ்டுகள்.. என்று தங்களை கூறிக் கொள்ளக் கூடியவர்கள், அப்படித் தம்மை முன்னிறுத்துகின்றவர்கள், அறிவுரீதியாக எதையும் முன்வைக்க முடியாது - பிறரின் காவியாக மாறி இருப்பது ஏன்?, இது தான் சமூகத்தின் துயரம்.


1. SARS - CoV-1– Severe Acute Respiratory Syndrome Corona Virus -1
2. SARS –CoV-2 தற்போது பரவும் புதிய கொரானா வைரஸ்
3. COVID -19 – Corona Virus Disease 2019 என்பதன் சுருக்கம். புதிய கொரானா வைரஸ் SARS-CoV-2 இனால் பரவிவரும் நோய்க்குரிய குறியீடு.