Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

பெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்

பெரியாரின் பெயரில் ஆணாதிக்கம். பெரியார் பெண்ணை சுய உணர்வுள்ள மனிதனாக முன்னிறுத்தியவர். பெண் ஆணின் அடிமையுமல்ல, ஆணின் காமப் பொருளுமல்ல என்றவர் பெரியார். சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள பெண்ணாக (மனிதனாக), தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் பெரியார். இதனால் தான் தமிழகம் பெரியாரின் மண்.

இப்படி அறிமுகம் செய்த பெண்ணை உடலாக, பாலியல் பண்டமாக, ஆபாசப் பொருளாக, ஆணிண் பாலியல் தேவைக்கு ஏற்ற சரக்காக முன்னிறுத்திய ஒரு பொறுக்கி தான் வைரமுத்து. தமிழைக் கொண்டு பெண் குறித்த பெரியாரின் கருத்தை தமிழகமெங்கும் குழிதோண்டி புதைத்ததுடன், பெண்களை இழிவுபடுத்தியவன். பார்ப்பனிய சிந்தனையானது ஒரு பெண்ணை எப்படி பார்க்கின்றதோ, அதை தமிழ் மொழியைக் கொண்டு முன்னிறுத்தியவன் வைரமுத்து.

பெரியாரிஸ்ட்டுக்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும், தமிழை முன்னிறுத்தி பெரியாரை தோற்கடித்த அந்தப் பார்ப்பனிய ஆணாதிக்கத் தமிழை, "தமிழுக்கு செய்த" தொண்டு என்று  போற்றுகின்றனர். தமிழனாக முன்னிறுத்தும் பெரியாரிஸ்டுகளும், இனவெறி பிடித்த தமிழ் பாசிட்டுகளும் கூடி, பெரியாரை அவர் போராடிய மண்ணில் தூக்கி எறிவது நடந்தேறுகின்றது.

எந்தப் பெரியாரை தமிழகத்தில் தோற்கடிக்க பார்ப்பனியம் போராடுகின்றதோ – அதை பெரியாரிஸ்ட்டுகள் என்று கூறிக்கொள்வோர் மூலம் செய்திருக்கின்றது. அதை தமிழ் என்று முழங்கும், இனவெறியர்கள் மூலம் செய்திருக்கின்றது. சின்மயி பெரியார் முன்வைத்த பெண்ணாக மாறி, தமிழகத்தின் போலி ஆணாதிக்க முகத்தை கிழித்தெறியும் பெரியாரியப் பெண்ணாக காட்சியளிக்கின்றார்.

சின்மயியின் தன் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குரல், போலி பெரியாரிஸ்ட்டுகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும், ஆணாதிக்கவாதிகளும் எதிரானதாக பரிணாமடைந்திருக்கின்றது.

 

சின்மயி என்ன சாதி என்று ஆராய்ந்து கருத்து கூறுமளவுக்கு, போலி பெரியாரியம் பார்ப்பனியமயமாகி இருக்கின்றது. பிறப்பைக் கொண்டு மனிதனையும், அவனின் சிந்தனையையும் அளவிடும் முறைதான் பார்ப்பனியம்;. அந்த அருவருக்கத்தக்க சாதிய அளவீட்டைக் கொண்டு, சின்மயியை அளந்ததென்பது பெரியாhரியம் கிடையாது. பா.ஜ.க என்ன சொல்கின்றது என்பதில் இருந்து, சின்மயி விவகாரத்தை அணுகியது என்பது, பெரியாரின் பகுத்தறிவுக்கு முரணானது. இது அடிப்படையில் பார்ப்பனியச் சிந்தனை முறையாகும்.

சின்மயியின் குற்றச்சாட்டும், அது கொண்டிருந்த உள்ளடக்கமும் பார்ப்பனியச் சிந்தனையல்ல, மாறாக அதற்கு எதிரானது. சொல்லப்போனால் பெண்கள் குறித்த பார்ப்பனிய ஆணாதிக்க மதிப்பீட்டுக்கு எதிரானது. வைரமுத்து முன்வைக்கும் பார்ப்பனிய பெண்ணியப் பார்வைக்கே முரணானது.

இப்படி இருக்க பெரியாரை முன்னிறுத்தி, பெரியாரை கேலிப்பொருளாக்கும் அவலம், தமிழக மண்ணில் அரங்கேறி இருக்கின்றது. எல்லாவற்றையும் கேள்வி கேட்கக் கோரும் பெரியாரிஸ்டுக்கள், சின்மயியை விசாரணை செய்யும் ஆணாதிக்க ஊடகவியலின் ஆணாதிக்க நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. பார்ப்பனிய பா.ஜ.க வானது  பெரியாரிஸ்டுக்களை பகுத்தறிவற்ற சாதி வெறிக்குள் நகர்த்தி சென்றதை, கண்டுகொள்ள முடியாத அளவுக்கு, ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் அளவுக்கு, பெரியாரிஸ்டுக்கள் என்று கூறிக் கொண்ட பலர் தம்மை தாம் தாழ்த்திக் கொண்டனர்.

பெரியாரை முன்னிறுத்தி தமிழகம் எங்கும் முழங்கும் முக்கிய பேச்சாளர்கள், பிறப்பை முன்னிறுத்திய சாதியை அளவீடாகக் கொண்டு கருத்துரைத்ததன் மூலம், ஒட்டுமொத்த பெண்களையும் ஒடுக்க துணைபோனார்கள்.

தமிழகமே சாதி - ஆணாதிக்க கண்ணோட்டத்தால் தடுமாறுகின்றது

இந்தியாவில் தமிழகமே பார்ப்பனியத்துக்கு எதிரான முற்போக்கான சமூக பாத்திரத்தை கொண்டு இருக்கின்றது என்பது பொய்யாகும் வண்ணம், வைரமுத்துவால் தமிழகம் தடுமாறுகின்றது. பெரியாரியம் - அம்பேத்கரியம் - மார்க்சியத்தை... முன்னிறுத்தும் சமூக இயக்கங்கள், குறைந்தது பெரியாரிய அடிப்படையில் கருத்தை முன்வைத்து சின்மயியின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாதளவுக்கு தடுமாறி இருக்கின்றது. இதன் மூலம் ஆணாதிக்க கருத்து பலம்பெற்று இருக்கின்றது.

பொதுவாக ஒட்டுமொத்த பெண்கள் சின்மயியுடன் நிற்க, ஆண்கள் வைரமுத்துவை ஆதரிக்கும் அளவுக்கு, ஆண் மேலாதிக்க சமூகம் சின்மயியைக் கொச்சைப்படுத்தி காட்டுவதன் மூலம் தங்கள் அழிவை தற்காக்க முனைகின்றது. காலாகாலமாக ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் ஊடகங்கள், சின்மயி மீது தொடர் கேள்விகளைக் குவித்து, வைரமுத்துவை பாதுகாக்க முனைகின்றது. ஆணாதிக்க ஊடகங்கள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் மையமாக இருக்கின்ற பொதுப் பின்னணியில், சின்மயி தொடர்ந்து குற்றவாளியாக்கப்படுகின்றார். பெரியாரிய பெண் கருத்தாளர்கள் நழுவி தப்பிக்கின்ற வகையில், ஆணாதிக்க சார்பு விவாதங்களை பொதுவாக நடத்தி இருக்கின்றனர். பெரியாரிஸ்டுகள் என்று கூறிக்கொள்வோர் அங்குமிங்குமாக பம்முகின்றனர்.

பலர் ஆச்சரியமளிக்கும் வகையில் தடுமாறுகின்றனர். மீ.ரூவை தவறாக பயன்படுத்த முடியும் என்று விவாதிக்கும் அளவுக்கு சென்று, ஆணாதிக்கத்துக்கு மறைமுகமாக வக்காளத்து வாங்குகின்றனர். உதாரணமாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வன்கொடுமைச் சட்டத்தை கொண்டு வந்த போது, இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்று கூறி, சட்டத்தைக் கொண்டு வர கூடாது என்றார்கள். இதே அடிப்படையில் மீ.ரூவை அணுகுகின்ற அளவுக்கு,   பெரியாரிஸ்டுகள் என்று கூறிக் கொள்வோர் விவாதம் நடத்துகின்றனர். ஆணாதிக்க ஊடகங்கள் ஆணைப் பாதுகாக்க முனையும் வக்கிரங்களின் பின் இவை ஊடகங்களில்; அரங்கேறுகின்றது.

இன்று இதே காரணத்தை முன்வைத்து, வன்கொடுமைச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது நீதிமன்றம். வேடிக்கை என்னவென்றால் சட்டங்கள் முதல் அனைத்திலும் பொய்க் குற்றச்சாட்டை முன்வைக்க முடியும் என்ற பொது உண்மை இருக்க, மீ.ரூக்கு எதிராக அதைக் கொண்டு வந்து விவாதிப்பது எதை பாதுகாக்க? சட்டத்தை பிழையாக பயன்படுத்துவார்கள் என்பதால்,  சட்டம் இருக்க கூடாது என்று விவாதிக்க முடியாது. மீ.ரூவை தவறாக பயன்படுத்த முடியும் என்று விவாதிப்பது, குற்றச்சாட்டை நீர்த்துப் போகச்செய்;வது தான்.

அரசியலில் பழிவாங்குவதற்கு திட்டமிட்டு மீ.ரூ வை பயன்படுத்த முடியும் என்ற வாதம்;. இது கூட ஆணாதிக்க குற்றத்தை பாதுகாக்கும் பூசி மெழுகும் வாதம். ஒடுக்கப்பட்ட பெண்களினதும், ஒடுக்கப்பட்ட சாதிகளினதும் போராட்டங்கள், உரிமைகள், சட்ட பாதுகாப்புகள் தவறாக பயன்படுத்தப்படும் என்ற வாதம், ஒடுக்குபவனின் வாதமாக மட்டுமே இருக்க முடியும்;. மக்களை ஒடுக்கும் சட்டங்களே ஜனநாயகமாக இருக்க, ஒடுக்கபட்டவர்களுக்கு சார்பானதை மட்டும் கேள்விக்குள்ளாக்குவதும்,  மீ.ரூ விவாதத்தில் அதை எழுப்புவதும் –  பெரியாரிஸ்டுகள் என்று கூறிக்கொள்வோர் வலிந்து இதை முன்வைப்பதும் என அனைத்தம் - ஒடுக்கும் ஆணாதிக்க அர்ப்பத்தனத்தாலானது.

சின்மயியின் குற்றச்சாட்டானது, பார்ப்பனியத்துக்கு எதிரான தமிழக அரசியல் சூழலை திசைதிருப்பும் சதியாகக் காட்டுவது என்பது. பிறப்பை முன்னிறுத்தி முன்வைக்கும் சதிக் கோட்பாடாகும். இது போலி பெரியாரிஸ்ட்டுகளின் பார்ப்பனியமாகவும், தமிழ் இனவாதத்தை முன்னிறுத்தும் பாசிசமாகவும் பரிணமிக்கின்றது.

ஆணாதிக்க ஊடகவியல், பாலியல் வன்முறை செய்த வைரமுத்துவின் ஆணாதிக்கப் பக்கம் நின்று, சின்மயிக்கு எதிராக கருத்துரைக்கும் அளவுக்கு -  ஆணாதிக்க பொறுக்கிகளின் வக்கிரங்களை கேள்வியாக மாற்றி விவாதிக்கின்றனர். தங்கள் நிறுவனத்தில் இது போன்ற குற்றங்களை மூடிமறைக்க, சின்மயி விவகாரத்தினை சவப்பெட்டியில் அடித்தாக வேண்டும் என்ற குறிக்கோளோடு தான், ஆணாதிக்க சமூகம் எதிரான பிரச்சனையாக மடைமாற்றுகின்றது.