வடகிழக்கில் 600 ஏக்கர் நிலத்தில் பாரிய ராணுவ முகாம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
27 Feb 2014
- Hits: 2103
அரசாங்கம் 600 ஏக்கர் நிலத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்க்காக வடக்கு கிழக்கில் தகுந்த இடம் ஒன்றினை தெரிவு செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
“2009 இல் பிரிவினைவாதிகளின் யுத்தத்தினை வெற்றி கொண்டு நாட்டில் பாலும் தேனும் ஓட விட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கில் வசந்தத்தை உருவாக்கியுள்ளதாக” கூறும் மகிந்த அரசு ஏன் தொடர்ந்தும் வடக்கு கிழக்கை ராணுவ மயப்படுத்துவதுடன், தெற்கில் மக்களின் போராட்டங்களை ராணுவம் கொண்டு அடக்குகின்றது?
வடக்கு கிழக்கினை அந்நிய நாடுகளிடம் தாரை வார்த்து கொடுத்து விட்டது இன்றைய அரசு முன்னெடுக்கின்ற நவ தாராளமய பொருளாதார மயமாக்கல். எமது மக்களின் நிலங்கள், காடுகள், கடல் பிரதேசங்கள் அனைத்தையும் அந்நிய நாடுகள் தமது ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டுள்ளன. இதன் விளைவினை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் போராட்டங்களை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கும் உள்படுவார்கள். அந்நிய வல்லாதிக்க நாடுகள் பல பில்லியன் கணக்கான பணத்தை முதலீடு செய்து விட்டு லாபத்தை காணாமல் மக்கள் எதிர்ப்பை கண்டு பின்வாங்காது.
எனவே அந்நிய முதலீடுகளை பாதுகாக்கவும், அவற்றிற்கு எதிராக எழுகின்ற மக்கள் போராட்டங்களை அடக்கவும், இன ரீதியாக சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கி சிங்கள மக்களின் பாதுகாவலன் என்ற பிம்பத்தை தொடர்ந்தும் உருவாக்கவே யுத்தம் முடிவுற்ற பின்னரும் பாதுகாப்பு செலவுக்கான நிதி தொடர்ச்சியாக ஒவ்வொரு நிதியாண்டும் அதிகளவு ஒதுக்கப்படுவதும், ராணுவமுகாம்கள் விஸ்தரிக்கப்படுவதும், புதிது புதிதாக அமைக்கப்படுவதும், ராணுவதற்கு ஆள் சேர்ப்பது என ராணுவ மயமாக்கல் தீவிரமாக்கியுள்ளது மகிந்தா பாசிச அரசு.