Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

போதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை

ஆணாதிக்க சமூகமும் - வக்கிரம் பிடித்த ஆணாதிக்கவாதியும் செய்த கொலையை மூடிமறைக்க – "தேசியத்தின்" கொலையாக திரித்துக் காட்டுவது நடக்கின்றது. ஓடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய புலித் தேசியத்தினதும்;, புலிக்குப் பிந்தைய போலித் தேசியத்தினதும் ஒரு பிரதிநிதியாக இருந்த செந்தூரனின் நடத்தையை முன்னிறுத்தி, "தேசியமே" இந்த தற்கொலைக்கு காரணமாகக் காட்டிவிட முனைகின்றனர். இதன் மூலம் இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை மறுப்பதற்கு, போதநாயகியை மறுபடியும் கொன்று விடுகின்றனர். இதன் மூலம் ஆணாதிக்கத்தையும் - இனவொடுக்குமுறையையும் பாதுகாக்க முனைகின்றனர். இதற்கு மாறானதே உண்மை.

ஆணாதிக்க வன்முறையானது போதநாயகியை தற்கொலைக்குத் தூண்டி - கொலை செய்திருக்கின்றது. போராடி வாழ வேண்டிய பெண்ணின் துயரமான வாழ்வுக்கு, ஆணாதிக்க சமூகமே பொறுப்பேற்க வேண்டும்;. சமூகத்தில் உள்ள பிற்போக்கான சமூகக் கூறுகளின் துணையுடன் - குரூரமான ஆணாதிக்க நடத்தைகளைக் கொண்டு பெண்ணை ஒடுக்கும் போது - தனிமைப்படுத்தப்படுகின்ற ஒரு பெண்; தற்கொலையை தேர்ந்தெடுக்கின்ற அளவுக்கு, சமூகம் பொறுப்பற்றதாகி இருக்கின்றது.

இது போன்று இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்ற உணர்வுடன் - ஆணாதிக்கத்துக்கு  எதிராக நாம் போராட வேண்டும். இதுதான் போதநாயகிக்கு கொடுக்கும் கவுரவமாகும். இதற்கு மாறாக இதை "தேசியத்தின்" வக்கிரமாக திரித்துக்காட்டி, ஆணாதிக்கத்தை கண்டுகொள்ளாத சமூகமும், மனித அவலத்தை கொசிப்பாக்கி செய்தியாக்கும் வக்கிரங்களே அரங்கேறுகின்றது.

ஆணாதிக்க வக்கிரத்தையும் - வன்முறையையுமே போதநாயகி எதிர்கொண்டாளே ஓழிய அவன் முன்வைத்த "தேசியம்" சார்ந்த ஒடுக்குமுறையையல்ல. இப்படி இருக்க "தேசியமே" காரணம் என்று, போலி இடதுசாரியமும் - போலிப் பெண்ணியமும் ஓப்பாரி வைப்பது நடக்கின்றது. எதிர் எதிரான போலி "தேசியவாதங்கள்" தங்கள் சொந்த ஆணாதிக்கத்தை மூடிமறைக்க, விதவிதமாக கதைகள் மூலம் வக்கிரமடைய வைக்கின்றனர்.

 

இங்கு "தேசியம்" தான் ஆணாதிக்கத்தை உருவாக்கி தற்கொலை நடக்கக் காரணம் என்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. நடந்தது தேசியத்தின் தனிக் குணமென்றும் - இனம் கடந்து பெண் என்ற பொது அடையாளத்தில் இருந்து "தேசியத்தை" இனம் காண வேண்டும் என்று, போலிப் "பெண்ணியம்" பேசுகின்றளவுக்கு, ஒடுக்கப்பட்ட தேசியத்தையும் - அதில் பெண்களின் பங்கையும் மறுதளிக்கின்றனர். ஆணாதிக்கமே போதநாயகியின் மரணத்துக்கு காரணமாக இருக்க – ஓடுக்கப்பட்ட தேசியம் திட்டமிட்டு பந்தாடப்படுகின்றது.

புலித் தேசியத்தையும் காட்டி - ஒடுக்கப்பட்ட தேசியத்தை மறுக்கின்றனர். இதன் மூலம் பேரினவாத ஒடுக்கும் தேசியத்தை முன்னிறுத்தியும் - புலியெதிர்ப்பு அரசியலை கொண்டு,  போதநாயகி மரணத்தை கொச்சைப்படுத்துகின்றனர். ஓடுக்கப்பட்ட தேசியம் என்பது சாராம்சத்தில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதை மறுப்பதுடன், ஓடுக்கும் புலித் தேசியத்தை "தேசியமாக" முன்னிறுத்துகின்றனர்.

பெண்ணியத்தின் அனைத்து இனப்பெண்களையும் முன்னிறுத்தும் பெண்ணியத்தைக் கொண்டு, தேசியத்தை பெண்ணியத்துக்கு எதிரானது என்று புரட்டுவது, போலிப் பெண்ணியமாகும்;. ஓடுக்கப்பட்ட தேசியம் என்பது, எல்லாவகையான அக ஓடுக்குமுறைக்கும் எதிரானது என்பதுடன், தேசிய இனவொடுக்குமுறையானது பெண்கள் மேலான தனித்துவமான ஒடுக்குமுறைகளைக் கொண்டதை போலிப் "பெண்ணியம்" மறுதளிக்கின்றது.

ஆணாதிக்கம் எல்லாப் போலித்தனத்தையும் பயன்படுத்தும்

போலித் தமிழ் "தேசியத்தை" முன்னிறுத்தி பிழைத்த செந்தூரனே இந்த தற்கொலைக்கு காரணம் என்பது வெளிவர முன்பு, போலித் "தேசியவாதமானது" போதநாயகியின் மரணத்தின் பின் பிற இனங்கள் இருப்பதான போலிப் பிரச்சாரத்தை முன்தள்ளினர். இந்த போலி "தேசியவாதக்" கொசிப்புகள் அம்பலமாகிய பின், தற்கொலைக்கு காரணமாக இருந்த செந்தூரனின் கண்ணீரைக் காட்டி, போலி "தேசியவாதத்தை" மீள பூச்சூட்டுவது அரங்கேறுகிறியது. இப்படி இதற்குள் இன்னும் இன்னும் செய்திகளும் - கருத்துகளும்.

ஓரே செய்திக்குள் விதவிதமான கற்பனைகளையும் புகுத்தி பரபரப்புத் தலைப்புகளைப் போட்டு, ஓன்றுக்கொன்று முரணாக உள்ளடக்கத்தைப் போட்டும் காசு பண்ணும் ஊடக "மாமாக்கள்", போலி தகவல்கள் கொண்ட திருகுதாளங்களை தங்கள் தொழிலாக்குகின்றனர். இதையும், தங்கள் சொந்தக் கற்பனைகளையும் தூக்கிக் கொண்டு, பேஸ்புக் லைக்குகளுக்காக நீதிபதிகளாகி விடுகின்றவர்களின் சுயவக்கிரங்களால்- மனித அறத்தையே சாகடிக்க விடுகின்றனர்.

பிறரின் மரணங்கள், துன்பங்கள் அனைத்தும் தங்களின் பொழுதுபோக்கும், சுய மகிழ்ச்சிக்குரியதாகவும் குறுக்கி விடுகின்றனர். சக மனிதனுக்கான நீதியை மறுக்கும் வண்ணம், சமூக அறத்தை மறுதளிக்கும் வண்ணம், மனித அவலங்களை கொசிப்பாக்கி விடுகின்னறனர்.

அண்மையில் போதநாயகியின் தற்கொலை. ரஜனி திரணகமவின் படுகொலை, தீலிபனின் உண்ணாவிரதம்.. குறித்த செய்திகளும், பேஸ்புக் தீர்ப்புகள் … எல்லாம், மானிட சமூகத்தை அடிமைப்படுத்தி சவாரி செய்வதைத் தாண்டி, அதில்; சமூக சிந்தனையையும் - நடைமுறையையும் காணமுடியாது. இவை பகுத்தறிவற்றதாகவும், ஓடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதற்கு துணை போவதாகவும் இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை ஏமாற்றி வாழும் பொறுக்கிகளும் - போலி தமிழ் "தேசியத்தை" காட்டி ஒடுக்குமுறையை ஆதரிக்கும் போலி "இடதுசாரிகளும்", அனைத்துக்கும் போலியான கருத்துகளை பரப்புகின்றனர். போலித் தேசியத்தை அம்பலப்படுத்துவதற்கு பதில், ஒடுக்குமுறையை ஆதரிக்கின்றனர். ஆணாதிக்கமானது போலிகள் அனைத்தையும் பயன்படுத்துவதைக் கண்டுகொள்வதில்லை. மாறாக மறைமுகமாக ஆதரிக்கின்றனர்.

ஆணாதிக்கமானது தன் தேவைக்கு ஏற்ப "தேசியத்தைப்" பயன்படுத்துவது, ஓடுக்கப்பட்ட தேசியத்திற்கு எதிரான மனிதவிரோத குற்றமாகும். 1948 முதல் இன்று வரை போலித் தமிழ் "தேசியத்தை" முன்வைத்து, வாக்கைப் பெற்று சொகுசாக வாழ்வதே தேர்தல் அரசியலாக  இருக்கின்றது. ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் மக்களை ஒடுக்கும் பாசிட்டுகளாக மாறி, ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கினர். பாசிசப் புலிகள் தங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக காட்டி சேர்த்த பணம், இன்று தனிநபர்களின் சொத்தாகி உள்ளது. இதன் பின் சீமான், செந்தூரன் வகையறாக்கள் உணர்ச்சிகரமான உசுப்பேற்றும் போலி "தேசிய" உரைகள் மூலம், பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக சுரண்டுவதும் - பணத்தைக் கறப்பதும் தொடருகின்றது. பணம், பெண், சொத்து .. என்று, போலித் தமிழ் "தேசியம்" மூலம், மக்களை ஏமாற்றி பிழைப்பது எங்கும் தொடருகின்றது.

இவை யாவும் ஓடுக்கப்பட்ட மக்களை ஓடுக்குகின்ற போலித் "தேசியவாதத்தின்" உள்ளடக்கமாக உள்ளது. இதனால் ஓடுக்கப்பட்ட இனங்களின் போராட்டம் தவறானதாகிவிடாது. இங்கு ஓடுக்குமுறைக்கு எதிராக ஓடுக்கப்பட்டவன் போராடும் போது, அனைத்து ஓடுக்குமுறைக்கும் எதிராக போராடுகின்றான். அந்த வகையில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுவது இயல்பானது. இதற்கு மாறாக ஓடுக்குபவன் தலைமை தாங்கும் போது - அது போலித் தமிழ் "தேசியமாகவும் - பிற ஓடுக்குமுறைகளை பாதுகாக்கும் போலித் "தேசியமாக" வும் இருக்கின்றது. இதனால் அது ஆணாதிக்கமாகவும் இருக்கின்றது.

ஓடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது என்பது இயற்கையானது. இதை பயன்படுத்தி ஓட்டுமொத்த சமூகத்திற்கு எதிராக பிழைப்பது  என்பது, அன்று முதல் இன்று வரை நடந்து வருகின்றது. போலி தமிழ் "தேசியத்தை" இனம் கண்டு அம்பலப்படுத்துவதும், ஓடுக்கப்பட்ட தேசியத்தை உயர்த்தி பிடிப்பதன் மூலமே -  போதநாயகியை கொன்ற ஆணாதிக்கத்தை இனம்கண்டு போராடுவோம்.