புலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்.......
- Details
- Category: கங்கா
-
13 Apr 2012
- Hits: 5769
நரபலியாடிய நாட்களின் துயரொடு
நொருக்கிய கனவுகள்
கருக்கிய உயிர்களின் சாம்பலில்
முளைத்த காட்டாட்சி அரசு
மனிதம் அலறிட அமைதியான உலகில்
மானுடம் மறுமுறை செத்தது
பொறியிடு நகர்வாய் புலத்தவன் வீழ்த்தினான்
வறுகிய செல்வம் வாய்த்தும் அடங்குமா.....
பதறிய உயிர்களும் சிதறிய உடல்களுமாய்
குறுகிய பரப்பினுள் அலறிய வாழ்வு
உலகப் பந்தில் எங்கள் குருதியுமானது
படைக்கல கொடையினில் வல்ல தேசங்கள்
எங்கள் தசைகளை
மீண்டும் ஒருமுறை தின்று கொழுத்தது
எவனும் வெல்லவுமில்லை
மக்கள் தோற்றதுமில்லை
தேற்ற முடியாச் சோகம் கனலாகும்
வலி சுமந்த வாழ்வு புயலாகும்
ஈன உலகில் இழந்த உறவுகளை நெஞ்சிருத்தி
இன இணைவிற்கு உழைப்போம்
வெறியர் ஏறிய அரியணை வீழணும்
நெறி முறையோடு தமிழினம் நிமிரணும்
குறியது தப்பாக் கொள்கையில் வளரணும்
வறியவர் படையணி பேரிகை அதிரணும்..........