பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த நினைவுக் கல்வெட்டு" - சோபாசக்தி
"ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத்தொடங்குவாய் "கருப்பு..."
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ - என்னைக் கவனிக்காமலேயே, பேசிக்கொண்டிருப்பாய்,
"ஆமாம், இந்தச் சகோதரனை..."
மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளறிக்கொண்டிருப்பாய் "புரட்சி இருக்கிறதே...?"
உனது கையை என் வயிற்றில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போல நீ தொடர்ந்து கொண்டிருப்பாய்
"இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை...?"
உனது கையால் எனது உடலை வருடிக்கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஸ்கியை உருவி எடுப்பேன்
அப்போது நீ சொல்வாய்
"உண்மையில் நமக்கு இப்போது தேவைப்படுவது என்னவென்றால்..."
இப்போது நாவால் உனது கையை வருடிக் கொண்டிருப்பேன்
நீ "நான் அதை எப்படிப் பார்கிறேன் என்றால், இனி நாம்..."
உனது காற்சட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்
"சரி அந்த நிலையில் எப்படி..."
உனது உள்ளாடையை உருவி எடுப்பேன்
அப்போது உனது நிர்வாண நிலை
உனக்கு உறைக்கும்
உன்னை உனக்குத் தெரியும்
நீ வெறுமனே இப்படிச் சொல்லுவாய்
"நிக்கி இது எதிர்ப்புரட்சிகரமானதில்லையா ?"
சோபசக்தி 11.12.1998 எச்சில் 4 பக்கம் 11இல் "பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை குறித்த நினைவுக் கல்வெட்டு" இப்படித்தான் தொடங்குகின்றது. அ.மார்க்ஸ்சை இந்தியாவில் சந்தித்ததன் பின்பாக, ஈழப் போராட்டத்தில் புலிக்கும் - அரசுக்கும் எதிரான வர்க்க அரசியல் நிலைப்பாட்டை – செயற்பாட்டை தகர்க்க, பி.றயாகரன் முதலில் இலக்கு வைக்கப்பட்டார். சோபாசக்தியும் வேறு சிலரும் இணைந்து கொண்டு, வர்க்கத்தை – வர்க்க அரசியலை கருவறுக்கும் எதிர்ப்புரட்சிக் கும்பல், கல்வெட்டுடன் களமிறங்கியது. இந்தக் கல்வெட்டு பல பக்கங்களைக் கொண்டது. இன்று அவர் தன்னை மூடிமறைத்துப் புலம்பும் சோபாசக்தி, அன்று தன் நோக்கத்தை மூடிமறைக்க உளறியது முதற்கொண்டு, அவரின் கற்பிதக் கோட்பாடுகளையும் இந்தக் கல்வெட்டில் காணமுடியும். இந்தக் கல்வெட்டு வெளிவந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழு, இதனால் இரண்டாக உடைந்ததுடன், ஒரே பெயரில் - ஒரே இலக்கத்தில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தது. இதிலொன்று பின்னால் தன்னை உயிர்நிழல் என்று மாற்றிக்கொண்டது.
