ஒரு தளராத உறுதிகொண்ட போராளி-தோழர் தங்கவடிவேல்

தரப்படுத்தல் கண்டு தனி நாடு கேட்டு ஆயுதத்தோடு கொதிந்தெழுந்த வடக்கிலே; தனிக்குவளை, சிரட்டையில் தேநீர், கிணற்றில் நீரைக் கூட வாளியால் மொள்ளக் கூடாது, உயர் சாதியினருக்கு முன்னால் தோளிலிருக்கும் சால்வையை மடித்து கமக்கட்டுக்குள் செருகியாக வேண்டும், விவசாயக் கூலிப் பெண்கள் மார்புகளை மறைக்க குறுக்குக்கட்டு அணிய வேண்டும், வள்ளியம்மை என்றோ அல்லது கந்தையா என்றோ பெற்ற குழந்தைக்கு பெயர் வைத்தால் வள்ளி என்றும் கந்தன் என்றும் சாதிக்குறியீட்டுக்காக பெயர்கள் மாற்றி பதியப்பட்டும், இன்ன இன்ன சாதி இன்ன இன்ன ஊர்களில் குறிச்சிகளில் என்றும், தப்பித்தவறி சாதிவிட்டு சாதி காதல் கொண்டால் கடலிலோ, குளத்திலோ கிணற்றிலோ அடித்தே கொலை செய்து வீசப்பட்டு, வழக்குகள் நீதிமன்றுகளில் அப்புக்காத்துக்களால் தள்ளுபடியாக்கப்பட்டும், ஆலயங்களும் அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்கள் கூட சாதிகளுக்கென்றும், பள்ளிக்கூடங்களில் நீ பள்ளனா பறையனா என்றும், முத்தன், கந்தன் என்ற பெயரைக் கண்டால் மூட்டை சுமக்கப் போகாமல் நீ எதற்கடா வகுப்பறையில் முன் வாங்கில் அமர வேண்டும் என பாடம் நடாத்தும் சாதித்துவேசம் மிக்க "முத்துக்குமாரசாமி" வாத்தியாயர்கள் என இன்னும் பற்பல சாதிக்கொடுமைகளை ஒடுக்குமுறைகளை தமிழ்த் தேசிய சாதிமான்கள் தங்கள் புறங்காலால் ஒதுக்கிவிட்டு தங்களது தங்கப் பிள்ளைகளின் பல்கலைக்கழக வாய்ப்பு பறிபோய் விட்டதே என்று வெண்கலக் குரல்களில் வீராவேச வசனம் பேசி அணிகளைத் திரட்டி ஆயுதப் போரினை மூட்டினர்.


