Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.

1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.

ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).

இலங்கையில் மரணதண்டனையை மீள அமுல்படுத்தும் யோசனைக்கு ஆதரவும் - எதிர்ப்பும் கட்டுரைகள், அறிக்கைகள், பேச்சுக்கள் வாயிலாக காட்டப்பட்டு வருகிறது. அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மறியல் பேராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் எதுவும் இன்று இலங்கையில் இல்லை. எதிர்காலத்திலும் அதற்குத் தேவையான துணிச்சல் படைத்த மனிதாபிமான சக்திகள் உருவாகக் கூடிய சாத்தியங்களும் மிக மிகக்குறைவு. குடிமக்களின் இன்றைய மனோநிலையில் அப்படியான சாத்தியம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இதற்கான காரணம் “லாபம்” என்ற ஒன்றுதான். “மரணதண்டனைக்கு” எதிராகப் போராடுவதனால் யாருக்கு என்ன லாபம்? என்று கேட்டால் “யாருக்கும் லாபம் எதுவுமில்லை” என்றே பதில் கிடைக்கும். மாறாக “மரண தண்டனை” இருந்தால் சில குற்றங்களைத் தடுக்கலாம் அல்லது குறைக்க முடியும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சிந்தனையே சாதாரண குடிமக்கள் மத்தியில் நிலவுகிறது.

1983 யூலை 25-27ல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அன்றைய ஆட்சியாளர்களால் நன்கு திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதே நாட்களில் நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரமும் அன்றைய அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டதேயாகும்.

இக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதற்கு முன்னரும் கலவரங்கள் இடம் பெற்றிருந்தன. கொலைகள் இடம் பெற்றிருக்கின்றன. 1977 ம் ஆண்டுக் கலவரத்திலும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் அரசியல் பயணம் வன்முறை வடிவத்தை அடையத் தொடங்கியிருந்த அன்றைய காலகட்டத்தில் வன்முறையானது தனியே இளைஞர்கள் மத்தியிலேயே முனைப்புக் கொண்டிருந்தது. மக்கள் இளைஞர்களின் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்தனர். ஏற்கனவே கலவரங்களுக்குப் பழக்கப்பட்டிருந்த சாதாரண பொதுமக்கள் 1983 கலவரத்தையும் வழமை போலவே சாதாரணமாகக் கடந்து போயிருப்பார்கள்.

ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை 

சி.கா.செந்திவேல் 

பொதுச் செயளாளர்.

நாட்டின் அனைத்து மக்களும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதேவேளை, அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல்களும் பெருகிநிற்கின்றன. பழைய திருடர்களைக் காட்டிப் பதவிக்கு வந்தோர் புதிய திருடர்களாக இன்று உருவாகி நிற்கின்றனர். போதைப் பொருட்களின் பரம்பலும் பாவனையும் அதிகரித்து தெற்கே பாதாள உலகக் குழுக்களும் வடக்கே வாள்வெட்டுக் கோஸ்டிகளும் மக்களின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தியும் சீரழித்தும் வருகின்றன.

இவ்வாறு கடந்த 03.07.2018 அன்று யாழ்ப்பாணம் கொக்குவிலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் 40 ஆவது ஆண்டையொட்டிய விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் "கொதிநிலையில்" உள்ளது. காரணம் காட்டுபுலம் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலை. 25 வருடங்களுக்கு மேலாக பல நூறு பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி, அவர்களைப் படுகொலை செய்த கட்சியின் தலைவர் தொடக்கம்,- தமது வீடு, வேலைத்தலம், பஸ், ரெயின், கோவில் என எல்லா இடங்களிலும் பாலியல் வன்கொடுமை புரியும் பெரும்பான்மையான யாழ்ப்பாணத்து ஆண்கள் இங்கு "கொதிநிலையில்" உள்ளனர். இவர்கள் ஒருபக்கம் "போராட", மறுபக்கம் தேசியம் பேசும் ஆண்களும், பல்கலைக்கழகத்தில் ராகிங் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை செய்வோரும், பாலியல் இலஞ்சம் கோரும் அரச பணியாளர் மற்றும் அரசியல்வாதிகளும், உயர்கல்வி நிலையங்கள், கடற்கரை ஓரம், பற்றை பறுகுகளில் பெண்களை ஏமாற்றிக் கைவிடுவோரும் கூட காட்டுப்புலக் கொடுமைக்காக கொடுக்கிழுத்துக் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் எல்லாம் நீதி கேட்கிறார்களாம் !!!!!!!!!

சில "சர்வ சாதாரணமான" அனுபவங்கள் 

வித்தியாவுக்கு நடந்த கொடுமைக்காக மேற்கூறியவர்களில் பலர் போராடியதை நான் நேரடியாகப் பார்த்தேன். அப்போராட்டத்தில் பங்குகொண்ட நபர்கள், சில மணித்தியாலங்கள் கூட தமது பெண்கள் மீதான பாலியல்- மற்றும் சுரண்டல்களை நிறுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கான போராட்டம் நடந்தபோது, அப்போராட்டத்துக்கு பல பிரதேசங்களில் இருந்து போராட்டத்தில் பங்குகொள்ள வந்த பெண்களை - போராட்டம் முடிந்தபின், போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்து ஆண்கள் சமூகம் எப்படி நடத்தியது என்று அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் அறிவார்கள்!!! போராட்டம் முடிந்து பஸ்சில் பயணம் செய்த பெண்களை, காமவெறி பிடித்து உரசியதும், பெண்களின் உறுப்புகளில் அத்துமீறி கைவைத்ததும் நடந்தேறியது. 

அப்போராட்டத்தின் பின் நான் பயணித்த பேருந்தின் நடத்துனர், பஸ்ஸின் பின்பகுதிக்குப் போகுமாறு குழுவாக நின்ற சில இளம் பெண்களுக்கு கட்டளையிட்டார். அவரின் கட்டளையை கேட்டும் கேட்காதது போல அசையாது நின்றார்கள் பெண்கள். நடத்துனர் மறுபடியும் பின்னால் போகுமாறு கத்தினான். அப்போ, பெண்களில் ஒருத்தி "பின்னால இடமில்லை - அங்க பொடியள் நிக்கிறான்கள்" என பதிலளித்தார். அப் பதிலைக் கேட்ட நடத்துனர் "கொஞ்சம் பின்னால போனா உங்கட சாமான் ஒண்டும் தேஞ்சு போகாது, பின்னால போறியளா, இல்லாட்டி பஸ்ஸை விட்டு இறங்கிறீங்களா??? !" என்று கூச்சல்  போட்டான். பெண்கள் அடங்கிப்போனார்கள். இந்நிகழ்வை அந்த பஸ்ஸில் இருந்த- வித்தியாவுக்கு"போராடிய" எல்லாப் "போராளிகளும்" பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இலங்கையில் 1978 வரை “அவசரகாலச் சட்டம்” என்று ஒன்று இருந்தது. அந்தச் சட்டம் அமுலில் இருந்த காலங்களில் எல்லாம் அரசாங்கங்களின் அடாவடித்தனங்கள்-அடக்குமுறைகள்-மனித உரிமை மீறல்கள்-படுகொலைகள் யாவும் இடம் பெற்றுள்ளன. 

இலங்கையின் இனக் கலவரங்கள்-தென்னிலங்கை இளைஞர்களின் 1971 ஏப்ரல் கிளர்ச்சியினை அடக்க இடம் பெற்ற படுகொலைகள்(‘கதிர்காமம் அழகி’ பிரேமாவதி மன்னம்பெரிய கொலை உட்பட)-வழக்கு விசாரணையற்ற சிறைவாசங்கள்-சித்திரவதைகள் யாவும் இந்த “அவசரகாலச் சட்டத்தின்” பெயரிலே நடாத்தி முடிக்கப்பட்டன.

ஏப்ரல் 1971ல் தென்னிலங்கை சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியின் போது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்ட 22 வயது யுவதியான பிரேமாவதி மன்னம்பெரிய அவரது தாய் தந்தை முன்னிலையில் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் பலாத்காரம் சித்திரவதை ஆகியவைக்கு உட்படுத்தப்பட்டு பட்டப் பகலில் பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் நிர்வாணமாக நடக்க வைத்து அடிவதைகளுக்கு ஆளாகியபடி இராணுவத்தினரால் 17 ஏப்ரல் 1971ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக இந்தப் படுகொலையைத் தனது பிரச்சாரத்தின் போது பயன்படுத்தியே 1977 பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார். பாராளுமன்றத்தில் தனக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மாற்றி எழுதினார். நாட்டின் குடிமக்களின் உழைப்பைச் சுரண்டி அதன் வளங்களை கொள்ளையடிக்கும் பொறிமுறையான திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.

“தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உண்டு. ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைப்பேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்தார். அதேநேரத்தில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் தளபதி திரு அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். அதனை சகித்துக் கொள்ளமுடியாத ஜே.ஆரின் சிங்களத் தேசியம் 77ல் ஒரு இனக் கலவரத்தை நடாத்தி முடித்து தனது இன வெறியை தணித்துக் கொண்டது. இனக் கலவரத்தின் கொடூரங்களால் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய வெறுப்பையும், கோபத்தையும் பயன்படுத்தி தமிழ்த் தேசியம் வன்முறை அரசியலை முன்நகர்த்திய போது ஜே.ஆர். ஜெயவர்த்தன 19.05.1978ல் “புலிகள் அமைப்புக்கும் அதனைப் போன்ற ஏனைய அமைப்புக்களுக்குமான தடைச் சட்டத்தை” அமுலுக்குக் கொண்டு வந்தார். இச் சட்டமே புதிய வடிவம் பெற்று 1979ல் “பயங்கரவாத தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்று வரை அமுலில் இருந்து வருகிறது.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்தது நமது நாடு. மூளை வளமும் நமது நாட்டில் தாராளமாகவே உண்டு. காலனித்துவ ஆட்சியின் போதும் சரி அவர்கள் நாட்டை விட்டுப் போன பின்னரும் சரி நமது நாட்டின் வளங்களையும் குடிமக்களின் மூளை வளங்களையும் வைத்து இன்று வரையும் பிழைப்பு நடத்துபவர்கள் காலனித்துவ எசமானர்களே.

நாட்டை விட்டுப் போனாலும் காலனித்துவ ஏகாதிபத்தியம் நாட்டின் வளங்களை சுரண்டும் அரசியலை இங்கே விதைத்து வளர்த்து விட்டே சென்றது. அதாவது இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க மோதல்களை வளர்க்கும் அரசியல்வாதிகளை உருவாக்கி வைத்து விட்டே சென்றது. அதே காலனித்துவ எசமானர்கள்தான் இன்று வரை எமது மூளை வளங்களை உறிஞ்சி எடுத்தபடியும் இலங்கை இனவாத அரசுக்கு கடன், நன்கொடை கொடுத்தபடியும் அதன் அடக்குமுறை ஆட்சிக்கு ஆயுத உதவி வழங்கியபடியும் சர்வதேச சமூகம் என்ற பெயரில் வந்து நின்று சமாதானம் நல்லிணக்கம் பற்றி போதிக்கின்றனர்

'வாதம்' என்ற உடல் நோய் மனிதனை வாழ விடாது. அதே போன்றே சமூக சிந்தனை மட்டத்திலும் இந்த வாதம்(மனநோய்) நம்மை பீடித்திருப்பதாலேயே குடிமக்களாகிய நாம் அழிவை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்-தமிழர்-தமிழ்த் தேசம்-பாரம்பரியம் என்றெல்லாம் கதையாடல்கள் செய்கிறோம். உலகின் முதல் தோன்றிய மொழி தமிழ் என்கிறோம். “கடுகைத் துளைத்து கடலைப் புகுத்திய” குறள் என்கிறோம். முதல் கப்பல் ஓட்டிய தமிழன் என்கிறோம். தமிழ் சாம்ராச்சியங்கள் இருந்ததாக வரலாறுகளை காட்டுகிறோம். “பசுவைக் கொன்றதற்காக மகனையே தண்டித்த மனு நீதிச் சோழன்” பரம்பரை நமது என மார் தட்டுகிறோம். “முல்லைக்குத் தேர் ஈந்த பாரி”யை காட்டி பெருமிதம் கொள்கிறோம். இன்னும் இன்னும் எத்தனையோ பெருமைகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்.

"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால்

தேர்ந்தெடுத்தவன் முட்டாள்" 

                                         -தந்தை பெரியார்.

“பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதையாகவே” நமது நாட்டில் இன்று  நடைபெறும் சம்பவங்கள் 1970ஆம் ஆண்டு அரசியல் சூழலை மறுபடி ஏற்படுத்தி உள்ளது. தற்போது . காலத்துக்குப் பொருந்தாத-நடைமுறைச் சாத்தியம் அற்ற-யதார்த்தம் புரியாத அரசியல் விளக்கங்களும், கோரிக்கைகளும், அறிக்கைகளும் 2009ல் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யுத்த வெற்றியை மூலதனமாக்கி நாட்டைக் கொள்ளையடித்தவர்களால் இன்று நாடு பகுதி பகுதியாக பிரித்து அளவை செய்யப்பட்டு விற்கப்படுகிறது. நாட்டின் வளங்கள் குத்தகைக்கு விடப்படுகிறது. பல நூறு தலைமுறையாக மக்களை வாழவைத்த சுய தொழில்கள் திட்டமிடப்பட்டு முடக்கப்படுகிறது. குடிமக்கள் அந்நிய நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்திற்கு உழைத்து உரிமைகளற்ற அடிமைகளாக உழைத்து உருக்குலைந்து மடியும் முறைமை கொண்ட புதிய உலக தாரளவாதப் பொருளாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சாதாரண குடிமக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக நடைமுறையில் இருந்து வந்த அரச சேவைகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. கல்வியும் சுகாதார சேவையும் இவற்றில் மிகவும் முக்கியமானவைகள்.

இனவாத முரண்பாடுகளை வளர்த்து அதில் குளிர்காயும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும், மஹிந்த காலத்து யாழ்ப்பாணத்து அமைச்சர் பெருமகனாரும்  இணைந்து நடத்திய அரசியலினால் தற்போது வடபகுதியின் மீன்வளம், மற்றும் கடல்வளம் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது.

மஹிந்த காலத்தில் கடலடி வளங்களான கடல் அட்டை மற்றும் சங்கு குளிக்கும் அனுமதிப்பத்திரம் சிங்கள மற்றும் முசுலீம் பெரும் பணமுதலைகளுக்கு வழங்கப்பட்டது. இம் முதலைகள் மஹிந்த காலத்து அமைச்சரின் ஆதரவுடனும், கடற்படையின் ஆதரவுடனும் வடமராட்சி தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்தில், 2009 பின்னான காலத்திற் சிறிது சிறிதாக கடலடி வளங்களை சுரண்டும் வேலையை ஆரம்பித்தனர். தற்போது இவர்களின் ஆதிக்கம் மண்டைதீவு வரை விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடல்வள அழிவு

கடல்வளத்தை சமுக அக்கறையுடன் பகிர்வதில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால், இன்று தமிழ் பிரதேசத்தில் நடைபெறுவது படுபயங்கரமான முறையில் கடல்சார் வளங்களை அழிவுக்குள்ளாக்கும்  செயற்பாடுகளாகும். பல நூற்றுக்கணக்கான படகுகளில் வந்து வடக்கின் கரையோரங்களில் தாணையம் அமைக்கும் மேற்படி முதலாளிகள், தமது கடற்தொழில் கூலியாட்களின் உதவியுடன் பகலின் Dynamite டைனமைட் பாவித்து மீன்வளத்தின் மீதான கொலையை - வள அழிவை மேற்கொள்கின்றனர்.

கார்ல் மார்க்ஸின் 200 வருட பிறந்தநாளை ஒட்டி மே மாதம் 31 ம் திகதி கொழும்பு புகையிரத கேட்போர் கூடத்தில் நடந்த கலந்துரையாடல் மற்றும்  «Karl Marx- Who is he, Who are We?» என்ற நூல் வெளியீடும் நடந்தது. நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பன்னாட்டு மூலதனமானது, மனிதர்களை பலியெடுக்கின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட, மூலதனம் சுரண்டுவதற்காக மக்களை கொல்லுகின்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலதனம் சூழலை நஞ்சாக்கி, உழைக்கும் மக்களைச் சுரண்டும் மூலதனத்தின் குவிப்புக்காக, போராடும் மக்களையே அரசு கொன்று வருகின்றது.

சுரண்டும் வர்க்க உணர்வுடையவர்கள், மக்களை கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றனர். மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூலதனத்தை பாதுகாப்பதே, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்கின்றனர். இப்படி கொல்வது அரசின் சட்ட உரிமை என்கின்றனர். வர்க்க அரசின் மெய்நிலைத் தன்மையை முன்னிறுத்தி, மக்களை மூலதன ஆட்சிக்கு அடங்கி போகக் கோருகின்றனர்.

இப்படி சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் வர்க்க சர்வாதிகாரமே அரசு என்பதை, தூத்துக்குடி சம்பவம் உலகறிய பறைசாற்றி இருக்கின்றது.

அமைதியாக 100 நாட்கள் ஜனநாயக வழிகளில் போராடிய தமிழ்நாட்டு மக்கள், தங்கள் வரலாற்றில் காணாத அரச வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். மக்களைப் பிளக்கும் சாதி – மதம் - இனம் - பால் கடந்து தமது சொந்த வாழ்வுரிமைக்காக, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக அணிதிரண்டு நின்ற போராட்டத்தை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை, அனுபவ ரீதியாக எதிர்கொண்டு நிற்கின்றனர்.

குறி பார்த்துச் சூடும் மூலதனத்தின் கூலிப்படைகள் நடத்திய வெறியாட்;டத்தில், பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்னணியாளர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!

டென்மார்க் சம உரிமை இயக்கத்தினால் சனிக்கிழமை (19.05.2018) கொல்ஸ்ரபோ நகரில் ஒன்று கூடல் ஒன்று நடாத்தப்பட்டது. இந்த ஒன்று கூடல் நிகழ்வில் பல தமிழ், சிங்கள மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையினையும் வளர்தெடுப்பதே இந்த ஒன்று கூடலின் முக்கிய நோக்கமாகும். கலை நிகழ்வாக சிங்கள தமிழ் பாடல்கள் இடம்பெற்றன. 

சுவையான உணவு, தேனீர், சிற்றூண்டிகள், சிறுவர்களின் விளையாட்டு என ஒன்று கூடல் நிகழ்வு கூடியிருந்த மக்களுக்கிடையிலான நல்ல புரிந்துணர்வோடு சிறப்பாக நிகழ்ந்தது. 

 

சமஉரிமை இயக்கம்

டென்மார்க்.

 

படங்கள் இணைப்பு

படங்களின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்

இலங்கையின் அரசியல் வரலாறு என்பது அதன் குடிமக்கள் வாழ்வில் ஆழமாக வேரூன்றி நிற்கும் சாதியத்தின் வரலாறாகவே இன்றைய தினம் வரை காணப்படுகிறது. உயிரைக் கொடுத்தேனும் சாதியத்தைக் காப்பாற்றுவோம் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே நாட்டின் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

காலனியவாதிகள் இலங்கைக் கரையோரங்களில் தரையிறங்கி பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது அந்தந்தப் பகுதிகளில் நாட்டாண்மை(ஆதிக்கம்) செலுத்திய சாதிகள் அவர்களுடன் சமரசம் செய்து தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

காலனித்துவ - ஆக்கிரமிப்பு வாதிகள் நல்லெண்ண வருகையாகவோ அன்றி நட்பு ரீதியாகவோ அன்றி மனிதாபிமான நோக்கமாகவோ நமது நாட்டுக்கு வந்திறங்கவில்லை. திரைகடல் ஓடித் திரவியம் தேடியே வந்தார்கள். நாட்டை ஆக்கிரமித்தார்கள். தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டி அவர்கள் மேற்கொண்ட பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக ஆதிக்க சாதிகளை முன்னிறுத்தி அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டனர். இந்தக் கட்டமைப்பின் போது சாதியம் முதலாவது இடத்தையும் மதம்; இரண்டாவது இடத்தையும் பிடித்துக் கொண்டது. அவர்களால் வரையப்பட்ட சட்டங்கள் கூட சாதியத்தையும் மதத்தையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருப்பதனை இன்றைய இலங்கையின் சட்டமூலங்களை ஆராய்வதன் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும். உ-ம் வடக்கில் “தேசவழமைச் சட்டம்.” கிழக்கில் “முக்குவர் சட்டம்”. தென்னிலங்கையில் “பௌத்த மத ஆதனக் கட்டளை” போன்றவை ஆகும்.

மேலும் அவர்களின் அதிகாரக் கட்டமைப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அன்று சமூகங்களை கட்டி ஆட்டிப் படைத்து ஆண்டு கொண்டிருந்த ஆதிக்க சாதியினருக்கே மக்களை நேரடியாக ஆளும் அதிகாரத்தை “முதலியார்” “உடையார்” “மணியகாரன்” “விதானை” என்ற பதவிகள் ஊடாக வழங்கினார்கள்.

1833ல் உருவாக்கப்பட்ட இலங்கைச் சட்டசபை 1912 வரைக்கும் ஆங்கிலேயர்களால் நியமனம் செய்யப்பட்டவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இப்படி ஆங்கிலேயர்களால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து இலங்கையர்களும் ஆதிக்க சாதியினராகவே இருந்தனர். 1912ல் தேர்தல்(படித்த இலங்கையர்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை) மூலம் ஆதிக்க சாதியினரான சேர்.பொன்னம்பலம்; இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

1931ல் நடைமுறைக்கு வந்த சட்டசபைக்கான சர்வசன வாக்குரிமைத் தேர்தலை “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” பகிஸ்கரிக்க கோரியதால்(டொனமூர் அரசியல் யாப்பு இனவாத அரசியலுக்கு வழி வகுக்கும் என்பதால்) யாழ் மாவட்டத்தில் எவரும் போட்டியிடவில்லை. அதனைத் தொடர்ந்து படித்த பணக்கார ஆதிக்கசாதி அரசியல் பிரமுகர்கள் தங்களைத் தெரிவுசெய்து அனுப்பினால் சட்டசபையில் இருந்து கொண்டு ஆங்கிலேயரின் அரசியல் யாப்பை மாற்றி எழுதுவோம் என்று வாக்குறுதி வழங்கியதன் பேரில் 1934ல் இடம்பெற்ற சட்டசபைக்கான இடைத்தேர்தலில் “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸின்” ஆதரவுடன் அருணாசலம் மகாதேவா(யாழ்ப்பாணம்) ஜி.ஜி.பொன்னம்பலம்(பருத்தித்துறை) எஸ்.நடேசன்(காங்கேசன்துறை) நெவின் செல்வதுரை(தீவு) ஆகியோர் தெரிவாகினர். இவர்களேதான் சர்வசன வாக்குரிமை அறிவிக்கப்பட்ட போது (1927 – 1931)ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் ஆண் வர்க்கத்தினரால் மிதிக்கப்படும் பெண்களுக்கும் வாக்குரிமை தேவையில்லை என ஆங்கிலேயரிடம் கூறியவர்கள். வாக்களிக்கும் தகைமை அவர்களுக்கு இல்லை என வாதிட்டவர்கள்.

இவர்கள் சட்டசபைக்கு சென்றதும் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையும், நம்பி வாக்களித்த மக்களையும் மறந்து தாங்கள் சார்ந்த பணக்கார-படித்த-சாதி ஆதிக்க வர்க்கத்தினரின் நலன்களிலேயே அக்கறை செலுத்தி தங்கள் அரசியல் பாதையை வகுத்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியதிகாரத்தின் கீழ் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற போட்டியில் இனத்தின் அடையாளத்தை-இனவாதத்தை அரசியல் கோசமாக பாவித்துக் கொண்டனர்.

அன்று ஆரம்பித்த இந்த தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி செயற்படும் கட்சிகளை இன்று வரை வழிநடத்தும் ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டவர்கள் அனைவருமே தமிழ் மேட்டுக்குடி ஆதிக்க சாதியினரே. இவர்கள் கடந்த 70 வருடங்களாக முன் வைக்கும் அரசியல் கோசம் தமிழ் தேசியம் மட்டுமே. இவர்களுடைய அரசியலில் தமிழ் பேசும் மக்களைப் பற்றி-அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி எதுவும் இருந்தது கிடையாது. இவர்களுடைய அரசியலில் சாதி வாசம் வீசும். தமிழ் பொங்கி வழியும். மதம் தழைத்தோங்கும்.

நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.

புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.

அரசாங்கத்திற்கு சொந்தமான தபால் திணைக்களம் எங்களைத் தவிர சகல இலங்கை மக்களுக்கும் அவர்களது விலாசத்திற்கு கடிதங்களைக் கையளிக்கின்றன. தமக்குரிய வீட்டில் இருந்தாலும், வாடகை வீட்டில் குடியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் விலாசம் உண்டு. தபால் திணைக்களம் அந்த ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயருக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும் அவர்களதுகைகளிலேயே ஒப்படைக்கின்றது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்கு விலாசம் இல்லை. ஆகவே, எமது பெயருக்கு வரும் கடிதங்கள் தோட்ட நிர்வாகியின் மூலம் அவரது விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

விலாசமும் கிடையாது, இலங்கையில் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் குறைந்தபட்ச சிவில் உரிமைகளும் கூட தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களுக்குக் கிடையாது. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் அந்த உரிமைகளில் எதையும் எங்களுக்கு வழங்காதது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான சிவில் உரிமைகளை இலங்கை அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவுமில்லை.

ஆகவே, துன்பப்பட்டது போதும். இது, எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய காலம். தனித் தனியாக அல்ல சேர்ந்து போராட வேண்டும். அதற்காக தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையத்தோடு இணையுங்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியும் வீடும் மாதாந்த சம்பளமும் வென்றெடுக்கப் போராடுவோம்! 

தோட்டத் தொழிலாளர்களுக்கான சிவில் உரிமைகளை வழங்கு! 

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர மாதச் சம்பளத்தை வழங்கு!

தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!

அன்புத் தோழரே, தோழியரே,

சுகாதார நல உதவியாளர், பணிவிடையாளர், சிறு சேவைகள் நிர்வாகி என்ற ரீதியில் எமது சேவைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான எம் அனைவரினதும் வாழ்வு ஒரேவிதமாகத்தான் கழிகின்றது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை. இனிய கனவுகளுடன் நாம் பணி செய்ய வந்தாலும், கனவுகளுடனேயே முதுமையடைந்து ஓய்வுபெறும் வரை வாழ்வில் நிம்மதியடைந்த ஒருவரை காண முடியாது. எதிர்வரும் வருடங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும்.

இந்த வாழ்க்கை தானாகவே மாறிவிடுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? காலம் கடத்திக் கொண்டிருந்தால் இந்த நிலையும் இல்லாமலாகி மோசமான நிலை உருவாகிவிடும். அப்படியானால், தற்போதைய வாழ்க்கை நிலையை மாற்றுவதற்காக போராடத்தான் வேண்டும். கடந்த வரலாற்றில் எந்தவொரு வெற்றியையும் போராடித்தான் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் கருணையால் கோரிக்கைகள் கிடைக்கப் போவதில்லை. அதனை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். தனித்தனியாகப் போராடுவதற்குப் பதிலாக சேர்ந்து போராடுவோம். அதேபோன்று அந்த வரலாற்றில் நடந்த தவறுகளையும், காட்டிக் கொடுப்புகளையும் நாம் அறிந்திட வேண்டியுள்ளது. அந்த நிலைமையை உணர்ந்து எமது வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய பயணத்தை தொடங்குவோம்.

அதற்காக நாம் கையாளக்கூடிய பல வழிமுறைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொழிற் சங்கத்துடனாவது செயற்பட்டு பொது தொழிலாளர் அமைப்பொன்றில் நாம் செயற்பட வேண்டும். அது மட்டுமல்ல, தனித் தனியாக போராடுவதனால் நாம் பிளவுபடுவோமேயன்றி வெற்றி பெற முடியாதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சகல தொழிற் சங்கங்களும், சகல அலுவலர்களும் ஒன்றிணைந்து போராடுமாறு நாம் வேண்டுகின்றோம். அதற்காக எமது தொழிற்சங்கத்தின் தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு நாம் தயாராக இருப்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். 

ஆகவே, அதற்காக எமது புதிய அமைப்போடு இணையுமாறு வேண்டுகின்றோம். அதனூடாக எடுக்கப்படும் பொது நடவடிக்கைகளுடன் இணையுமாறு வேண்டுகின்றோம். அதற்காக உங்களை அழைக்கின்றோம்.

அமைப்பாக ஒன்றுபடுவோம்! எழுந்து நிற்போம்! வெற்றி பெறுவோம்!

தோழமையுடன், 

அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் - தொடர்பாளர்- டொக்டர் ஆர்.எம்.டப்.ரணசிங்க- 0718046175

 

உயரும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவின்படி ஊழியர் சம்பளத்தை உடனே உயர்த்து!

மேலதிக வேலையை ரேட் முறையில் வழங்கு!

சகல பதிலீடான மற்றும் சமயாசமய சுகாதார ஊழியர்களையும் ஓய்வூதியத்தடன் உடனே நிரந்தரமாக்கு!

ஓய்வூதியத்தில் கை வைக்காதே – பங்களிப்பு ஓய்வூதிய ஏமாற்று வேண்டாம்!

சகல சுகாதார ஊழியர்களினதும் வேலை நாளை 6 மணித்தியாலங்களாக்கு!

சகல சுகாதார ஊழியர்களுக்கும் 5 நாள் வாரத்தை பெற்றுக்கொடு!

வைத்தியசாலை சேவைகள் விற்பனையை நிறுத்து!

   

----- அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம்

இலண்டன் இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட இலங்கையின் 70வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது, இந்த சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிராக, இலங்கையின் சுதந்திரதினம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கறுப்புதினம் என்றும், தமிழீழம் எங்கள் தேசம், பிரபாகரன் எங்கள் தலைவர் என்றும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஒன்றினை இலண்டன் புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடிகளையும் பிரபாகரனின் உருவப்படம் கொண்ட பதாகைகளையும் தாங்கிய வண்ணம் நடாத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலண்டன் இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான பிரியங்க பர்னான்டோ தூதரக வளாகத்தின் முன்னால் கூடியிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என்பதாக சைகை காட்டிச் சென்றது மீண்டும் தொடர்ந்து வந்த நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களை உருவாக்கியிருந்தது.

இலங்கையின் «நல்லாட்சி» அரசு காணாமலாக்கப்பட்டோர் பற்றியோ, அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை பற்றியோ, கேப்பாப்புலவு போன்ற இடங்களில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட குடிமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது பற்றியோ எழுந்த உள்ளுர் மக்களின் போராட்டங்களுக்கு உரியமுறையில் என்றும் செவிசாய்க்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, 

தமிழீழக் கொடியும் பிரபாகரனின் உருவப் படமும் காற்றிலாட ஒரு புறத்தாரும், இலங்கையின் சுதந்திரதினத்தில் இலங்கையரசின் தேசியக் கொடியின் கீழ் நின்று இராணுவப் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பர்னான்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து வெட்டப்படும் என சைகை செய்ததன் மூலம், ஒடுக்குமுறை அரசு என மறுபுறத்தினரும் நடந்து கொண்டமை ஊடகங்களுக்கு இனவாத செய்தியாக மட்டுமல்ல அதன் மூலம் சிங்கள, தமிழ் இனவாத அரசியல் சக்திகளுக்கும் தீனிபோட்டு உருவேற்றியிருந்தது.

இந்தக் குறிப்பிட்ட தூதரக பாதுகாப்பு இராணுவ அதிகாரியின் செயலைக் கண்டித்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து நலிந்த குரலாயிருந்தாலும் உறுதியான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன. ஆனால் அவைகளை என்றும் இனவாதச் சகதி ஊடகங்கள் பிரபலப்படுத்துவதில்லை, முன்னிலைப்படுத்துவதில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE