
மீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள் வீதியில் இறங்கி இதை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என ஆரம்பித்த மக்கள் செயற்பாடுகளை உள்ளூர் அரசியல் வாதிகள், அவர்களின் குண்டர்கள், போலீஸ், இராணுவம் என தமது அரசியல் பலத்தை பாவித்து தாக்கினர், அடக்கினர், செயற்பாட்டாளர்களை சிறை வைத்தனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல்வேறு கதைகளை கூறிச்செல்வர். குப்பையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கப்போகிறோம். ஒப்பந்தம் தயார், குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்போகிறோம், எரிபொருள் உற்பத்தி செய்யப்போகிறோம், டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது என பல்வேறு கதைகள்.














