இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.
1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.
ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).