மனநோயாளியான அம்சிதான், ஆசிரியரை பாலியல்ரீதியாக வன்முறை செய்தாள். இதுதான் மனநோயென்று கூறுகின்றவர்களின் குற்றச்சாட்டு.
அரசாங்கமே பாராளுமன்றத்தில் அம்சிக்கு மனநோயாளி என்று கூறியதைக் கேட்டு, மீண்டும் தற்கொலை செய்ய அம்சி இன்று உயிருடன் இல்லை. நாட்டில் சட்டமும், நீதியும்.. இப்படித் தான் இயங்குகின்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், இந்த நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு குரல் கொடுத்து நீதி வழங்கும் இலட்சணம் இது. பாராளுமன்ற பன்றிகள் (ஒரு சிலர் தவிர), சலசலப்பின்றி அமர்ந்திருக்கும் காட்சிகள். இனவாத, மதவாத உடையணிந்து பாராளுமன்றம் வந்த எதிரக்கட்சிகள், பதவி விலகக் கோரி வெளிநடப்புச் செய்யவில்லை.
மறுபக்கம் மக்கள் நீதி கேட்ட போராடக் கூடாதாம்! போராடுவது என்பது சட்டம் ஓழுங்கை கையிலெடுப்பதாம்! சமூக வலைத்தளத்தில் குரல் கொடுப்பது வன்முறையாம்! பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் வரவேண்டுமாம்! அரசாங்கத்திடம் வராவிட்டால் நீதியைக் கேட்கும் உரிமையில்லையாம்!
இவைதான் ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாக, ஆட்சிமுறையாக இருக்கின்றது. முந்தைய அரசாங்கங்களுக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு? அதே அதிகாரிகள், அதே கெடுபிடிகள்,.. முகம் பார்த்து சலூட் அடிக்கும் சட்டமும் ஒழுங்குகளும். பெருச்சாளிகள் மாலையும் கையுமாக திரிய, புதிய அரசாங்கம் மாலைக்காக, புகழுக்காக தலைகுனிந்து மண்டியிட்டுத் திரிகின்றது. அரசு நாள்தோறும் மாலையும் கையுமாக திரிகின்றனர்.
![]()
மதத்துக்கு வெளியில் இருக்க வேண்டிய அரசு. மதக் கொண்டாட்டங்களில் தம்மை முன்னிறுத்திக் கொண்டு சமூக ஊழலையும், அடிமைத்தனத்தையும் விதைக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும், கண்ட கண்டவனின் காலில் விழுந்து வணங்குகின்றது. அதிகாரத்தைக் கண்டு அஞ்சுகின்றது. அமைச்சார்கள் புடைசூழ, பழமைவாதங்களும், தனிமனித நம்பிக்கைகளும் பிஞ்சில் ஊட்டி வளர்க்கப்படுகின்றது. இந்த சமூக நஞ்சை சமூகத்தில் ஊட்டி வளர்க்கும் விதமாக, ஜனாதிபதி வியட்நாம் சென்று, பௌத்த கொண்டாட்டத்தில் தித்திக்கின்றார். மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கிய மதம், ஜனாதிபதியை தனி ஜெட்டில் பறக்க வைக்கின்றது. சொந்தச் சட்டையில் மட்டும் கம்யூனிச சிவப்பு வைத்திருக்கும் ஜனாதிபதி, மானவெட்கமின்றி மகிந்த தனி விமானத்தில் பறந்தது போல் பவனி வருகின்றார்.
மக்களோ தங்கள் சொந்தப் பிரச்சனைகளுடன் புதிய அரசின் அலுவலகங்களில் காத்துக் கிடக்கின்றனர். பொதுச் சிவில் சட்டம், மக்களுக்கு நீதியைக் கொடுக்கவில்லை.
இந்த அரசு மக்களிலிருந்து விலகியிருப்பதாலேயே நீதி கிடைக்காதவர்கள் தற்கொலை செய்கின்றனர். தற்கொலையையடுத்து விழிப்புறும் மக்கள் போராடுகின்றனர். போராடும் போது, அதை ஒடுக்கச் சட்டம், ஒழுங்கு.
அதிகாரத்துக்கு வருவதற்கு முன் போராடுவது. ஆனால் தாங்கள் அதிகாரத்துக்கு வந்த பின் மக்களை ஒடுக்குவது.
அதிகாரத்தினமும், பணத்தினதும் துணையுடன் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றது. அதிகாரிகளோ விலைபோகும் அளவுக்கு, அரசின் கொள்கைகள். எதுவும் மாறவில்லை.
சமூகத்தில் பலவீனமான இடத்தில் வாழ்ந்த சிறுமி, தனக்கு நடந்த குற்றத்தையடுத்து துணிச்சலாக முறைப்பாடு செய்திருக்கின்றார். அந்தக் குற்றப் பாதிப்பில் ஏற்படும் மனரீதியான அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு மனநல மருத்துவரை நாடுவதை, மன நோயாளியாக்கி சித்தரிக்கின்ற அளவுக்கு ஒரு அமைச்சர். வெட்கக்கேடு, இதுவொரு குற்றமென்பதையும், அவரை அமைச்சர் பதவியை விட்டு விலக்க வேண்டும்.
நடந்த குற்றத்தால் ஏற்படும் பாதிப்பை, அதாவது மனரீதியான அழுத்தத்தை மனநோயாளியாக சித்தரித்தல், எப்படிப்பட்ட கிரிமினல் குற்றம்;. மனநோயாளி என்று வைத்திய அறிக்கை கொடுத்திருந்தால், அவர்கள் வைத்தியராக இருக்கத் தகுதியற்றவர்கள். கூட்டுக் களவாணிகளின் மோசடி. இந்த மோசடிகள் மீது சட்டம் நீதி செல்லாது என்றால், எப்படிப்பட்ட நீதி. இப்படியிருக்க தங்களிடம் வந்து மீண்டும் முறையிடக் கோருகின்ற வக்கிரம்.
எப்படி பிணை கிடைக்கின்றது. வெளியில் வந்து சாட்சிகளையும், குற்றப் பின்னணியையும் இல்லாதாக்க பிணை. அவதூறுகளைப் பரப்பவும், அந்தக் குழந்தையின் மனதைச் சிதைக்கவும் பிணை. தொடர்ந்து குற்றவாளிகள் அதே தொழில் மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியாக சிதைக்கப் பிணை. தொடர்ந்து குழந்தைகளைக் கையாளும் அதிகாரம்.
பாலியல்ரீதியாக வன்முறைக்குள்ளாக்கிய ஆசிரியர், அதை பாதுகாத்த அதிபர், பெண் குழந்தை மீது குற்றம்சாட்டி அவமானப்படுத்தும் தனியார் மாபியா கல்வி நிறுவனங்கள், அதே குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் மீள முன்வைத்த அமைச்சர் .. ஒரே சங்கிலித் தொடர். இவர்கள் யாரும் எதிர்காலத்தில் குழந்தைகளுடனான எந்தத் தொழிலிலும் இருக்கத் தகுதியற்றவர்கள். இந்தக் குற்றங்களுக்காக தண்டனை பெற வேண்டியவர்கள். பிணை, மீண்டும் கல்வி கற்பிக்கும் தகுதி, தனியார் கல்விக்கூடங்களை வைத்திருக்கும் தகுதி, தேர்தலில் நிற்கும் தகுதி, அமைச்சர் அதிகாரம் ... எப்படிப்பட்ட அரசாங்கம்?.
கம்யூனிசக் கொள்கைகளை எல்லாம் காயடித்தபின் உருவான தேசிய மக்கள் சக்தி, முதலாளித்துவ சமூக அறத்தைக் கூட பின்பற்ற முடியாத தற்குறிகளைக் கொண்டு ஆட்சி அமைத்திருக்கின்றது. சட்டமும், நீதியும் பழைய அதே அதிகாரவர்க்கத்திடம் இருப்பதாக சத்தியம் செய்யும் அரசு. சட்டமும், நீதியும்.. இந்த நாட்டில் நிலவுதாக சத்தியம் செய்து ஒடுக்குகின்றது.
ஊழல் ஒழிப்பு, சிக்கனமான அரசு… மூலம் கிடைக்கும் பணத்தைக் கூட மக்களுக்கு கொடுப்பதைக் காட்ட முடியாதளவுக்கு, அந்தப் பணத்தையும் ஜ.எம்.எப்.க்கு கொடுக்குமளவுக்கு அரசியல் வங்குரோத்தில் சிக்கியிருக்கின்றது. அரசாக மக்களுக்கு என்ன செய்யப்போகின்றோம் என்பதைக் கூட கூற முடியாதளவுக்கு, வெட்கம் கெட்ட, மானம் கெட்ட தேர்தல் பிரச்சாரம்.
உப்பின் பெயர் முக்கியமல்ல ருசிதான் முக்கியம் என்று, இனவாதத்தைப் பூசி மெழுகுகின்ற சுய வக்கிரம். மற்றவனை இனவாதியென்று குற்றம் சாட்டுவதன் மூலம், இனவாத அமைப்புமுறையை உறைநிலைக்குள், சட்டம் மூலம் கொண்டு வர முனைகின்ற அரசு. புலிகள் சாதியை உறைநிலையில் வைத்து சாதிய சமூக ஒடுக்குமுறை அமைப்பைப் பாதுகாத்தது போல், இனவாதத்தை உறைநிலையில் வைத்து இனவாத அதிகார அமைப்பையும், அதன் அதிகாரத்தையும் தக்கவைக்க முனைகின்றனர். இனவாதம் அரச அதிகாரமாக கடந்தகாலத்தில் நீடித்ததையும், தொடர்ந்து நீடிப்பதையும் மறுக்கின்ற இனவாத அரசியல்.
இந்த இனவாத அரச அதிகாரமானது யுத்தம் நடந்த பிரதேசத்தில் காணி சுவீகரிப்பு. இந்த சுவீகரிப்பு எதற்காக? ஏன்? எந்த விளக்கமும், கொள்கை முடிவுகளும், இனவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியாது. சுவீகரிப்பு குறித்த பிரதேசங்களில், இடங்களில் முன்வைக்கப்பட்டது கிடையாது. இரகசியமான மக்கள்விரோத இனவாத அதிகாரச் செயற்பாடுகள்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்த நிகழ்வு குறித்து ஜனாதிபதி, சட்ட ஒழுங்குக்கு எதிரான குற்றச்செயலாக மட்டும் குறுக்கி மூடிமறைப்பது என்பது, எப்படிப்பட்ட அரசு என்பதைக் காட்டுகின்றது. தனிநபர் குற்றமாக காட்டி வரையறுக்கும் ஜனாதிபதி, சமூகரீதியான அடிமைமுறைமையும், அதிகார வர்க்கத்தைக் கண்டால் கும்பிடக் கோரும் அதிகாரத்துடன், இக்குற்றம் தொடர்புபட்டிருக்கும் சமூக உண்மையை பூசிமெழுகி விடுகின்றார்.
இந்த அரசு சமூகத்துக்கு வெளியில் குற்றங்களை வெறும் தனிநபர் குற்றமாக மட்டும் குறுக்கி சிதைக்கும் அரசியல் பின்னணியில் ஈடுபடுகின்றது. அரசுக்கும், அரசு உருவாக்கியுள்ள சமூகத்துக்குமான தொடர்பை இருட்டடிப்புச் செய்கின்றது.
சிறுமி அம்சியின் தற்கொலைக்கு முன் அவரின் உளவியல் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்?. சிறுமி அம்சி சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில், சமூகம் கற்றுக்கொடுத்த கற்பிதங்களே அவளை தற்கொலைக்குத் தள்ளிக் கொன்றது.
1.சமூகம் குற்றமற்றவளைக் குற்றவாளியாக்குகின்றது. குற்றம் செய்தவனை கொண்டாடுவது.
2.அதிகாரவர்க்கம், சட்டம், நீதி.. குற்றம் செய்தவனை சுதந்திரமளித்து விடுவிக்கின்றது.
3.ஆணுக்கொரு சமூகநீதி, பெண்ணுகொரு சமூகநீதி. பெண் என்றால் ஆணின் அடிமை. ஆணை கேள்விக்குள்ளாக முடியாத சமூக ஒழுக்கவியல் கோட்பாடுகள்.
4.சமூகம் பெண் மீது குற்றம்சாட்டுவதை நம்புகின்றது. அவதூறு செய்கின்றது. நடத்தை குறித்து கேவலப்படுத்துகின்றது.
5.பாதிக்கப்பட்டவளை சமூகம், சுற்றம், நண்பர்கள்.. கைவிட்டு விலகிச் செல்லுகின்றனர். கைகொடுக்காமல் இருப்பதற்கு பின்னான சுயநலமும், சமூகம் குறித்தான அச்சமும்.
6.பாதிக்கப்பட்டவளை தனிமைப்படுத்தி கொசிப்பு அடிப்பது.
7.எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவரின் திருமணம் குறித்த கனவுகளை எல்லாம், சமூகம் சுக்கு நூறாக்கி விடுவது.
8.பாலியல்ரீதியாக வன்முறைக்குள்ளாகும் பெண்ணை சமூகம் நடத்தும் விதம்
9.பாலியல்ரீதியாக வன்முறைக்குள்ளாகும் பெண் குறித்த சமூகக் கண்ணோட்டங்கள்.
10.பாதிக்கப்பட்டவளை பாலியல்ரீதியான நடத்தை கெட்டவளாக கட்டமைக்கும் சமூக பொதுப் புத்தி
11.எதிர்காலத்தில் இயல்பான வாழ்க்கைத் துணையை அடையமுடியாத சமூக ஒடுக்குமுறைகள்
குற்றமற்ற சிறுமி அம்சியின் உளவியல், இந்தச் சமூகத் தற்குறித்தனத்துக்குள் சிக்கி திணறியிருக்கும். இதை எதிர்த்துக் கற்றுக் கொடுக்கும் கல்விமுறை இன்று கிடையாது. சமூக தற்குறித்தனங்களை அகற்றும் இடத்தில், இந்த அரசு இல்லை. சிறுமி அம்சியின் தற்கொலைக்கும், பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கும் அரசும், அரசின் கல்விக் கொள்கையும், சமூக நடத்தையும் காரணம்.
09.05.2025
சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode