Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அடிப்படையான ஆதாரங்களற்ற, எந்தத் தரவுகளுமற்ற, சமூகக் கண்ணோட்டமற்ற, கற்பனையிலான அவதூறுகள், அடிப்படை உண்மைகளைப் புதைக்கின்ற பொதுச் செயற்பாடாக இருக்கின்றது. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள்.. மூலம் ஜனநாயகம் என்ற பெயரில், எந்தச் சமூக அறமுமற்ற அவதூறுகள் விதைக்கப்படுகின்றது. செய்திகளின் பெயரில், கண்டுபிடிப்பின் பெயரில், ஊகத்தின் பெயரில் அவதூறுகளுக்குப் பஞ்சமில்லை.     
 
இத்தகைய அவதூறுகள்

1.    ஒருபுறம் உண்மைகளைப் புதைக்கின்றது.

2.    மறுபக்கம் பொய்களை விதைக்கின்றது.

இவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். எது உண்மை, எது பொய் என்ற வித்தியாசத்தை இல்லாதாக்குகின்றது.

இதன் மூலம் உண்மையான சமூகச் செயற்பாட்டை இல்லாதாக்குகின்றது. அவதூறு செய்பவர்களின் நோக்கம், சமூக நோக்கமாக இருப்பதில்லை. அதை அவர்களின் சொந்த நடைமுறையில் காணமுடியாது. ஆரசியற் கோட்பாட்டின் பெயரில் அவதூறுகளைச் செய்யும் போது, அந்த அரசியல் பொதுப்புத்தியிலான ஊகமான சொந்த காழ்ப்பிலான வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது.

பன்முகம் கொண்ட அவதூறுகளுக்கு மத்தியில் ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை, துர்க்காபுரம் குறித்ததான அவதூறுக்கும் பஞ்சமில்லை. இந்த அவதூறானது அங்குள்ள உண்மைகளையும், கேள்விகளையும் மூடிமறைக்கின்றது.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குளிக்குமிடம் கமராவின் கண்காணிப்பின் கீழ் இருந்ததான குற்றச்சாட்டு, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சட்டரீதியான அரச அனுமதியின்றி தங்க வைத்த குற்றச்சாட்டு, சிறுமிகள் தப்பியோடிய சம்பவங்கள்.. குறித்தான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணையறிக்கையை துர்க்காபுரம் இன்று வரை முன்வைத்தது கிடையாது

.நேர்மையானவர்கள் எனின் பக்கச்சார்பற்ற பொது விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த அறிக்கையை பொது வெளியில் முன்வைப்பது தான் சமூக அறம். ஆதைச் செய்யும் நேர்மை, தகுதி, தரம், அறம்..  துர்க்காபுரத்துக்கு கிடையாது என்பது இன்று வரையிலான பொது உண்மை.

பொது அவதூறுக்குள் தப்பிக்கொள்ளுதல். இந்துமதத்துக்கு எதிரானதாகக் காட்டி சாயம் பூசுதல், உதவிகளுக்கு எதிரான எரிச்சலாக வசைபாடுதல் .. மூலம், தம்மை அறம் சார்ந்தவராக காட்டிக் கொள்ளுதல் தொடர்ந்து அரங்கேறுகின்றது.

யாழ் அதிகார வர்க்கத்துடன் கூட்டணியமைத்துக் கொண்டு, சட்டரீதியான எந்த வரம்புக்குள்ளும் கண்காணிக்க முடியாத இடத்தில் தங்களை தக்கவைத்துக் கொள்ளுவதும்,  பொறுப்புக் கூறுவதற்கு எந்தச் சமூக நடைமுறையுமற்ற செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது தொடருகின்றது. சட்டத்திலுள்ள ஓட்டைகளை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல்.

பெருமளவில் புலம்பெயர் சமூகத்தின் நிதியாதாரங்களையும், அசையாச் சொத்துகளையும்… பொது சமூகத்தின் பெயரில் பெற்று வருகின்றனர். இவற்றைக் குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவுக்கு மட்டுமாக வரையறுத்துக் கொண்டு, அதை கட்டாயமான வெள்ளாளிய சமூக ஒழுங்குகளை திணிக்கும் ஒரு அதிகார மய்யத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

இங்குள்ள பெண்கள் மனிதனுக்குரிய சுதந்திரமான சிந்தனைக்கு எதிராக வளர்க்கப்படுகின்றனர். அவர்களின் வறுமையையும், அவர்களின் தனிமையையும் தமது நோக்கத்துக்கான மூலதனமாக்கியுள்ளனர். சமூகத்தின் பொது வளர்ச்சிக்கு எதிராக, மனிதனின் பகுத்தறிவுக்கு முரணாக, மனிதர்களை மதத்தில் புதைக்குமிடமாக இருக்கின்றது. அவர்கள் எதை உண்ணக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு, உணவுமுறை திணிக்கப்படுகின்றது. ஒழுங்கின் பெயரில் தனிமனித மதநம்பிக்கைளைப் பின்பற்றுமாறு கோரப்படுகின்றது.
 
தங்களது இந்து வெள்ளாளிய மதவாத ஆதிக்க அதிகாரக் கூத்தை மூடிமறைக்க, இனவாத தேசியத்தை மேடைக்கு மேடை அரங்கேற்றுகின்றவர் இந்த ஆறு திருமுருகன்.

ஏழைகளை மூலதனமாக்கி "உதவி" வீடியோ செய்யும் அதே பாணியில், உதவித் திட்டங்களைக் காட்டி தனக்கு பின்னால் கூட்டத்தைக் கூட்டி வைத்துக்கொண்டு, யாழ்ப்பாண வெள்ளாளிய சமூக அதிகாரங்களைக் கொண்டு வாயை மூடவைப்பவர். இதை மீறி நடைமுறையில், எந்த மனித அறத்தையும் அவர்களால் நிறுவமுடியாது.

சட்டத்திலிருந்தும், மனித அறத்திலிருந்தும் தப்ப, செயற்பாடுகள் வெளிப்படையற்றதாக மூடிய சிறைச்சாலையாக இருக்கின்றது.         

இந்தப் பின்புலத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் தனிப்பட்ட தனது மதநம்பிக்கையை முன்னிறுத்தி ஆறு திருமுருகன் உளறுவதை, சட்டத்துக்கு முரணான துர்க்காபுரத்தை சுற்றியுள்ள பொதுவீதிகள் எங்கும் ஒலிக்கின்ற வண்ணம், ஒலி மாசுக்களையும் - பகுத்தறிவற்ற நம்பிக்கை கருத்துகளாக திணிப்பதை, வரைமுறையின்றிச் செய்பவர்.

இன்று ஊழலுக்கு எதிரான அரசாகக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு மாலை போட்டு, மறைமுகமான அவர்களின் அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கின்றார். தேசிய மக்கள் சக்திக்கு மாலைபோட்டு மேடை ஏறுவது எதற்காக?

2025 தை மாதம் பொங்கல் விழா என்ற பெயரில், துர்க்காபுரம், இந்தியத் தூதரகம், அரசு அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இணைந்து, யாழில் இந்து வெள்ளாளிய பொங்கலை நடத்தினர். துர்க்காபுர கோயிலில் தொடங்கி யூனியன் கல்லூரி வரை, பெருந்தொகைப் பணம் இந்த வெள்ளாளியப் பொங்கலுக்காகச் செலவு செய்யப்பட்டது.
 
தைப்பொங்கல் என்பது உழவர் தினம் என்பதும், மதம் கடந்து உழைப்போர் தினம் என்பதை மறுதளிக்கும் வண்ணம், கூட்டு யாழ் வெள்ளாளியக் களவாணிகள் இந்து வெள்ளாளியக் கூத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தினர்.

பொங்கலுக்குரிய மண்ணில் (வன்னி, கிழக்கு ..) இது நடக்கவில்லை. உழுது உழைத்த விவசாய உழைப்பாளர்களின் தினத்தை, இந்து மதவாத வெள்ளாளியக் கூத்தை தமிழர் விழாவாக்கி, அதை தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் அரங்கேற்றினர்.

இந்து யாழ் வெள்ளாளியத்தின் காலடிகளில் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் அரசியல் பயணிப்பதையும், சமூக அறமற்ற ஆறு திருமுருகனின் வழிகாட்டலும் இருப்பதைக் காணமுடியும்.

அண்மையில் திருவள்ளுவருக்கு மாவிட்டபுரத்தில் மண்டபம் அமைத்தவர், மதமற்ற திருவள்ளுவருக்கு பார்ப்பனிய – வெள்ளாளிய காவியடித்து கொச்சைப்பபடுத்தியதை சமூக சேவையாக காட்டியவர் ஆறு திருமுருகன்.

"அறம்" குறித்து எழுதிய திருவள்ளுவருக்கே இந்து வெள்ளாளிய சாதியச் சடங்குகளுக்கூடாக காவிமயமாக்கமென்றால் மற்றவைகள் குறித்து!?

03.05.2025