Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த வரலாற்றுப் போக்கில் பிள்ளையான் ஒழுங்கமைப்பட்ட குற்றங்களுடன் தொடர்புபட்டவன். மற்றொருவரைக் கைகாட்ட முடியாத அதிகாரத்துடன், வன்முறை வடிவங்களுடன் பயணித்த பிள்ளையான், யுத்தம் முடிவுக்கு வந்தபின் அதை நிறுத்தவில்லை.

பிரபாகரனின் மனிதவிரோத தொடர் குற்றங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் முலாம் பூசிய பாலசிங்கம் போல், பிள்ளையானின் குற்றங்களுக்கு கிழக்கு மய்யவாத அரசியல் முலாம் பூசியவர் ஸ்ராலின் என்று அழைக்கப்படும் ஞானம்.

புலிக்குப் பிந்தைய பிள்ளையானின் கிழக்குப் படுகொலைகள், பணத்துக்கான கடத்தல்களும் கப்பங்களும், பாலியலுக்கான கடத்தல்களும் படுகொலைகளும், சொத்துக்களுக்கான படுகொலைகள், அதிகாரத்துக்கான படுகொலைகள் .. என்று எண்ணிலடங்காத குற்றங்கள் நடந்தேறின. இந்த வகையில் வவுனியாவில் சித்தார்த்தன், வடக்கில் டக்கிளஸ், இடைக்காலத்தில் பிரேமச்சந்திரன்.. தலைமையேற்ற மனிதவிரோத செயற்பாடுகள், புலிகளின் மனிதவிரோதத்தையும் மிஞ்சியிருந்தது. புலிகளுக்குத் தனிமனித நோக்கம் இருக்கவில்லை. அதாவது தனிநபர் பாலியல் நோக்கமும், தனிநபர் சொத்துக் குவிப்புக்கான நோக்கமும் குற்றங்களின் பின்னனியில் இருக்கவில்லை.       

குற்றங்கள் இனந்தெரியாத நபர்கள் என்ற பெயரிலும், புலிகளின் பெயரிலும் நடந்தேறியது. இதுவொரு உண்மை. இந்த உண்மையின் பின்னால் பிள்ளையான் இருந்ததும், பிடிபட்ட போது கையை விரித்ததும், சாட்சியங்களை அழிக்க சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கொன்றதும் என்று, எண்ணற்ற விடையங்களைக் கடந்த வரலாற்றுடன் இனம் காணமுடியும். 

இதற்கு கிழக்கு மய்யவாதம் பதில் சொல்வதில்லை. புலியின் பெயரிலும், யாழ் மய்யவாதத்துக்குள் புதைத்துவிடுவதும், அதை நியாயப்படுத்த புத்தகம் போடுவது – நூலகம் கட்டுவதன் மூலம் ஜனநாயக வேசம் போடுவதுமாக நடந்தேறியது.

வெளிவேசம் போட்ட பிள்ளையான், இரகசியமாக 2019 இல் ஈஸ்ரர் தாக்குதலை நடத்தக் கூடிய அடிப்படைவாதிகளை அடையாளம் கண்டு, அவர்களை தாக்குதலுக்காக பேரினவாத அரசியல் சூத்திரதாரிகளுக்கு இனம் காட்டிய தரகன். இது கிழக்குக்கு எதிரான கட்டுக்கதையுமல்ல, அவதூறுமல்ல, புலிக்கு எவ்வகையிலும் வக்காலத்து வாங்கும் புராணமுமல்ல.

தன் எஜமான் கோத்தபாயவின் தேர்தல் வெற்றிக்காக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஈஸ்ரர் தாக்குதலில், இடைத்தரகனாக பிள்ளையான் இருந்தான். இந்த உண்மை சட்டத்தின் முன் நிறுவப்படவும், இந்த தாக்குதலை திட்டமிட்டு இயக்கியவர்கள் ராஜபக்கச குடும்பமும் - அரசு இயந்திரமும் என்பது பொது உண்மை. இது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்தவுண்மை. இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்களா என்பது, இன்றுள்ள கேள்வி.

2019 இல் நடந்த குற்றத்தையொட்டி சாட்சியங்கள் - ஆதாரங்கள் கடந்தகால அரசாங்கங்கள் திட்டமிட்டே சிதைத்து சின்னபின்னமாக்கியவர்கள், பற்பல கதைகளை புனைந்தனர். எது உண்மை எது பொய் என்பதை கண்டறிய முடியாத சூனியத்துக்குள் வைத்து, ஈஸ்ரர் குற்றங்கள் புதைக்கப்பட்டது. 

ஊழலுக்கு எதிரான, மனித ஈனத்துக்கு எதிரான மக்கள் ஆட்சியை நிறுவுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய ஆட்சியாளர்கள், தங்கள் தேர்தல் அரசியல் வெற்றிக்காகக் குற்ற விசாரiணையை மய்யப்படுத்தி நிற்பது, குற்றங்களுக்கு எதிரான உண்மையான சமூக அக்கறையீனத்தைத் தெளிவுபடுத்துகின்றது. வெறும் தேர்தல் அரசியல் என்ற எல்லைக்குள், இந்தக் குற்றங்கள் குதறப்படுகின்றது. மறுபக்கம் ஆளுக்காள் விசாரணைகள் குற்ற வாக்குமூலங்கள் பற்றி, அடிப்படை ஆதாரமின்றி தத்தம் சொந்த கட்டுக்கதைகள் மூலம், விசாரணை மழுங்கடிப்படுகின்றது.      

தேசிய மக்கள் சக்தி நவபொருளாதார நிதிமூலதன அரசியலை ஐ.எம்.எவ். வழியில் டுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முனனெடுப்பதில் தீவிரமாக இருப்பதை மூடிமறைக்க, நடந்த குற்றத்தை முன்னிறுத்தி தேர்தல் அரசியலை முன் நகர்த்துவது என்பது - பாதிக்கப்பட்ட மக்களின் பொது நலனில் இருந்தல்ல என்பது கண்கூடு.                    

இந்தச் சூழலில் பிள்ளையானை மய்யப்படுத்திய கேலிக்குரிய அரசியல், பிள்ளையானைச் சுற்றிய வரலாற்றுரீதியான பல குற்றங்களை மூடிமறைத்து - சிலவற்றை மய்யப்படுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கத்திலிருந்து, பிள்ளையான் இன்று பேசப்படவில்லை. பிள்ளையான் இன்று, தேர்தல் அரசியலில் வெற்றி தோல்விக்கான ஒரு அடையாளம், அவ்வளவு தான்.

இங்கு பிள்ளையானின் குற்றங்கள் வரலாற்று இடைவெளிகளாலானது. நீண்ட குற்ற வரலாறுகளுடன் தொடர்புபட்டவை. மக்களுக்கு எதிரான பொதுவான இந்தக் குற்ற வரலாறு, புலிகளுடன் பிள்ளையான் இருந்த காலத்தில், புலிகளால் முதலில் கற்பிக்கப்பட்டது. சிறுவனுக்கு வன்முறையையும் - மக்கள் விரோத செயற்பாட்டையும்,  சிறுவயதில் ஊட்டப்பட்டு, இதை முன்னின்று செய்யும் ஆற்றலைத் தியாகமாக வீரமாக புலிகளால் போற்றப்பட்டது. இந்த மக்கள் விரோத வக்கிரம் காலத்துக்காலம், அரங்கேறிய வன்முறைச் சூழலுடன் இணைந்து பயணித்தது. பிள்ளையானின் வரலாற்றுப் பாத்திரம் இப்படித் தான் நடந்தேறியது.         

1.    புலிகளுடன் இருந்த காலத்தில் நடந்தேறிய குற்றங்களும் - குற்றத் தன்மைகளும்  

2.    புலிகளிலிருந்து பிரிந்ததன் பின்னான குற்றங்களும் - குற்றத் தன்மைகளும்  

3.    அரசுடன் இணைந்ததன் பின்னால் நடந்தேறிய குற்றங்களும் - குற்றத் தன்மைகளும்  

4.    யுத்தம் முடிந்ததன் பின்பாக எஜமான்களுக்காக நடந்தேறிய குற்றங்களும் - குற்றத் தன்மைகளும். 
 
என வெவ்வேறு காலத்தில் அரங்கேறிய பிள்ளையானின் குற்றங்கள், பன்முகத்தன்மையானவை.  

அவனின் ஆரம்பக் குற்றங்கள் புலிக்கு எதிரானவர்களுக்கு – புலிக்கு உடன்படாத மக்கள் மீது நடந்தேறியது. புலிகளின் ஜனநாயக மறுப்பு என்பது, தனக்கு எதிரான அனைத்தையும் ஒடுக்கியழித்த வரலாற்றுடன், பிள்ளையானின குற்றங்கள் தொடங்குகின்றது.   

தமிழ் சமூகத்தில் புலிக்கு வெளியில் சிந்திக்க – செயற்பட முற்பட்ட அனைவரையும் ஒடுக்கியதுடன் - அவர்களைக் கொன்று குவித்தனர். இது வரலாறு. எல்லைப்புற முஸ்லிம் மக்களில் தொடங்கி சிங்கள மக்களையும் கொன்று குவித்ததும் கடந்த வரலாறு. ஒடுக்கப்பட்ட மக்களை வாய்பொத்தி இருக்க வைத்தனர்  தாம் பிடித்த கைதிகளைக் கொன்று குவித்தனர். கப்பம் வாங்க, செல்வந்தர்களைக் கடத்தினர். பலர் கடத்தி காணாமலாக்கப்பட்டனர். இதுதான் விடுதலைப் போராட்டம் என்று நம்பவைக்கப்பட்ட தமிழினவாதத்தையும் – பாசிசத்தையும் அறிவாகக்கொண்ட பிள்ளையான், அதை முன்னின்று செய்தான். இதை கேள்வியின்றி செய்தவர்கள், புலிகளின் தளபதிகளானார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் (சிந்தனைக்) கிணற்றைத் தாண்டி சிந்திக்க முற்பட்டவர்கள், கிணற்றைத் தாண்டிச் செல்ல முற்பட்டவர்கள் உயிர் வாழ முடியாது. இதற்குள் வாழ்வதே தேசியமானது. இந்தக் கிணற்றைத் தாண்டினால் துரோகி. கொலை செய்யப்பட வேண்டியவர்கள். இன்று வரை புலியிசத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவாளிகளின் கொள்கையும் - கருத்துகளும்  இதுதான்.

அன்று இந்த மந்தைச் சூழலில் இருந்து தப்பிப்பிழைக்க முற்பட்ட கருணா அணி, தனியாக வெளியேறிய போது பிள்ளையானும் சூழலுடன் வெளியேறினான். பிள்ளையானின் இரண்டாவது குற்ற வரலாறு, இந்த முரண்பட்ட வரலாற்றுப் போக்குடன் தொடங்கியது. கிழக்கு மய்யவாதம் - வடக்கு மய்யவாதத்துக்கு நிகராக, பதிலுக்கு பதில் குற்றங்களுடன் அரங்கேறியது.      

தனித்துவமாகத் தப்பிப்பிழைக்க முனைந்த கிழக்கு மய்யவாதத்துக்கு எதிராக, புலிகளின் படுகொலை வேட்டை தொடங்கியது. இராணுவத்தின் மறைமுக உதவியை பெற்றுக்கொண்ட புலிகள், பாரிய படுகொலைகளை நடத்தினர். கிழக்குப் பெண்புலிகளை கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி புலிகள் அவர்களைக் கொன்றனர். கருணா ஆதரவாளர்களைக் கொன்றனர. இந்தக் காலத்தில் புலிகளையும், புலி ஆதரவாளர்களையும் .. கருணா – பிள்ளையான் தரப்பு, புலிகள் பாணியில் பழிக்கு பழியாகக் கொன்றனர். கிழக்கு மய்யவாதத்துடன் நடத்திய மனிதவிரோதத்தில், புலிகளிடம் தோற்றுப் போனார்கள்.

இதிலிருந்து தப்பிப் பிழைக்க கருணா – பிள்ளையான் தரப்பு வன்முறையானது, மூன்றாவது கட்டத்துக்குள் நகர்ந்தது. இராணுவத்தின் உதவியுடன், கூலிக்குழுவாக மாறி இயங்கத் தொடங்கினர். கருணா தப்பிச்செல்ல, பிள்ளையான் தலைமையில், புலி – புலி ஆதரவுக்கு எதிரான கிழக்கு மய்யவாதம் மனிதவிரோத வன்முறை செயற்பாடுகளைத் தொடங்கியது. இந்த செயற்பாடு புலி –புலி ஆதரவுகளை மட்டும் இலக்கு வைக்கவில்லை. புதிய கட்டத்துக்கு மாறியது. 

தனிப்பட பணம் சம்பாதிக்கவும், தங்கள் பாலியல் வேட்டைக்காகவும் மனிதர்களைக் கடத்துவது - கொலைகளைச் செய்வது என்பது நடந்தேறியது. புலிகள் என்ற முத்திரை குத்தியும், தங்களின் கட்டற்ற அதிகாரத்தைக் காட்டியும் நடந்தேறியது. புலிகளுக்கு சார்பான அறிவுத்துறை – தங்கள் கிழக்கு மையவாத அரசியலுக்கு ஒத்துழைக்காத அறிவுத்துறையினரை - அரச அதிகார வர்க்கத்தை ஒடுக்கியதுடன் - பலரைக்  கொன்றனர். அரசின் ஆதரவுடன் - அரசின் துணையுடன் இவை நடந்தேறியது.

புலிகளின் மக்கள்விரோத அரசியலால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் (2009 பின்), தனது அரசியல் எஜமானுக்கான பதிய வன்முறையில் பிள்ளையான் கால் பதித்தான். ஆளும் ஆட்சியாளர்களின் நோக்கத்தை ஈடுசெய்யும் இடத்திற்கு பிள்ளையான் தரப்பின் கிழக்கு மையவாத அரசியல் மாறியது. ஆளும் தரப்பின் அரசியல் - பொருளாதார நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் இடத்தில், பிள்ளையானின் செயற்பாடுகள் மாறிச்சென்றது. 

புலிகளிடமிருந்து தத்தெடுத்த தனது எஜமான்கள் 2015 இல் தேர்தலில் தோற்றதால் கவலையுற்றுக் கிடந்த பிள்ளையான் தனது எஜமானர்களை மீள வெல்ல வைக்க 2019 இல் படுகொலை நடத்துவதற்கான தரகனாகச் செயற்பட்டான்.

இந்த குற்றப்பின்னணியில் இருந்து பிள்ளையானைப் பாதுகாப்பதன் மூலமே தம்மை பாதுகாக்க முடியும் என்ற உண்மை, பிள்ளையானை தேசியவாதியாகவும் - புலிகளைத் தோற்கடித்த தளபதியாகவும் முன்னிறுத்த, பேரினவாத சக்திகள் முனைகின்றனர்.

புலிகள் தோற்றது என்பதற்கு அவர்களின் சொந்த மக்கள் விரோத அரசியலே காரணம். இப்படி உண்மை இருக்க பிள்ளையான் செய்த புலிகளைப் போன்ற படுகொலைகள், கப்பங்கள், கடத்தல்கள், காணாமலாக்கல்களை. புலிகள் செய்ய முற்படாத பாலியல் வன்முறைகளைத் தலைமை செய்தவனையே சிங்கள தேசியவாதி என்று கூறுகின்ற அரசியல் பின்புலத்தில், குற்ற அரசியல் பரம்பரை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முற்படுகின்றது.  

இப்படியிருக்க இன்று இலங்கையில் நீதி என்பது பொது மக்களுக்கு கிடையாது என்பது, அனுபவ ரீதியான உண்மைகளாக தொடருகின்றது. சட்டம் முதல் நிர்வாகம் வரை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக தொடர்ந்து இருப்பதுடன், தேர்தல் ஜனநாயகம் வழங்கும் சட்டத்தின் ஆட்சி, இன்று வரை கிடையாது.

அரசியல்வாதிகளின், அதிகாரிகளின், காலை கையைப்பிடித்துத் தான்… எதையாவது பெறமுடியும் எனற நிலை தொடருகின்றது. இதை எல்லாவிடத்திலும் காணமுடியும். வாழ்வதற்கான தனிமனித உரிமை சட்டத்தால் உறுதி செய்வதை, தேசிய மக்கள் சக்தி உறுதிசெய்யவில்லை. அவர்களின் அலுவலகங்களில் இதற்காக மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.    

தேசியமக்கள் சக்தி அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசியல் பொருளாதாரத்தை முன்வைக்க முடியாததால், ஈஸ்டர் தாக்குதல் மீதான விசாரணை பற்றி தேர்தல் மேடையில் பேசுகின்றனர். இந்த அரசியலால் பொதுவான நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை, அரசியல் ரீதியாக உருவாக்குகின்றது.
                      
22.04.2025