Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுயதம்பட்டங்களையும், சுயபுராணங்களையும், பெண்கள் மீதான அவதூறுகளையும், பிற இனங்கள் மீதான இனவாதத்தையும்.. முன்வைத்து, சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்வது அர்ச்சுனாவின் பிழைப்புவாத வாக்கு அரசியலாகியது. இதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையையும், தணிக்கையற்று விளம்பரம் செய்யும் உரிமையையும் பயன்படுத்தி, தனது மக்கள்விரோத அலுக்கோசுத்தனத்தை தனது மனிதவிரோதத்துடன் மேடையேற்றி வருகின்ற அவதாறு மன்னன் அர்ச்சுனா.      

2009 முன் தாக்குதலையும், இராணுவத்தின் இறப்பையும் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித வாழ்வியலையும் புதைகுழியில் புதைத்த "தலைவன்" வழியில், "தலைவனின்" பெயரில் தன்னை மய்யப்படுத்தி மக்களை மீண்டும் புதைக்குழிக்குள் அழைத்துச் செல்ல முற்படுகின்றான்.

இதற்கான சுயதம்பட்ட விளம்பரங்களுடன், தேர்தல் எதிரியை போட்டுத் தள்ள அவதூறு ஊழல் ஒழிப்பு சமூக வலைத்தளங்கள் புடை சூழவே, தேர்தலில் களமிறங்கினான். இந்த கூட்டுக்களவாணிக்  கும்பலின் தேர்தல் மனுவானது, ஒரு இடம் தவிர மிகுதி அனைத்து இடங்களிலும் நிராகரிக்கப்பட்டிருகின்றது.

தலைக்கனம் கொண்ட "தலைவனின்" தலைமையில் வேட்பு மனுக்களைச் சரியாக சமர்ப்பிக்க முடியவில்லை. தேர்தல் மனுவில் கூட ஊழல். மோசடிகள், பொய்கள், பித்தலாட்டங்களை .. தனது "தலைவன்" வழியில் முன்வைத்து அம்பலமாகி நிற்கின்றனர்.

2009 முன் "தலைவன்" எப்படி மக்களைப் பார்வையாளராக மாற்றி, தனிநபர்களை படுகொலை செய்வதை விடுதலைப் போராட்டமாக்கினானோ, அதே பாணியில் சுயதம்பட்டங்களையும், சுயபுராணங்களையும் முன்வைத்து, தனது சுய இழிநடத்தைகளை தமிழ் மக்களின் விடிவிற்கான பாதை என்று கூறி, தன்னை மய்யப்படுத்தி பிறரை காலுக்கு கீழ் போட்டதன் பொது விளைவு இது.

தன்னையும், தனது தொங்கு தசைகளையும் கொண்ட சர்வாதிகாரத்தை பிரகடனம் செய்த "தலைவன்" வழியில், தமிழ்மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற முனைந்த லும்பன்களின் செயற்பாடு இப்படி தான் வரலாற்றில் முடியும்.

இவனின் தலைமையில் தேர்தலில் நிற்க முற்பட்டவர்களை மந்தைகளாக - அடிமைகளாக நடத்தி, தங்கள் விண்ணப்பதையே சுயமாக நிரப்பவும் - சரி பார்க்கவும் முடியாத தனிமனித சர்வாதிகார அராஜகத்துடன் நடந்து கொள்ளும் இடத்தில், பிழைகளைக் கூட சுட்டிக்காட்ட முடியாத இடத்தில், தேர்தலில் நிற்பதற்கான விண்ணப்பம் கூட சுயத்தை இழந்திருந்தது. 

மூன்று பல்கலைக்கழகத்தில் படித்து சுயதம்பட்டத்தை மனிதத் தன்மையாக வளர்த்துக் கொண்ட, அதையே தனது சுய நடத்தையாக்கி கொண்டு அவதூறுகளையும், இனவாதத்தையும் .. மூலதனமாக கொண்டவனின் சுய நடத்தையே, தேர்தலில் நிற்கும் தகுதியை புதைகுழிக்கு அழைத்துச் சென்றுள்ளது.       

இந்த அவதூறு கும்பலுக்கு முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தலைமை தாங்கப் போவதாக அர்ச்சுனா கூறியுள்ளான். மக்கள் விரோதிகளுடன் அவரும் அணிதிரட்டு வருவாரா! அல்லது அவரும் "தலைவர்" பாணியில் துரோகியாக்கப்படுவாரா! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மக்கள் விரோதிகளின் வரலாறுகளை மனித வரலாறு ஒருநாளும் மன்னிக்காது. 
       
22.03.2025

இதையொட்டிய பிற கட்டுரைகள்:

கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம்

முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்

ஊழல் ஒழிப்பு முகமூடி போட்ட புலிப் பாசிட்டுகளின் இரு வேறு முகங்கள்

சாதி குறித்து டொக்டர் அருச்சுனாவின் வெள்ளாளியக் கண்ணோட்டம்