நேற்று 27-01-2017 வெள்ளி அன்று யாழில் மாலாபேயில் அமைந்துள்ள SITAM தனியார் மருத்துக் கல்லூரியை தடை செய்யக்கோரியும், இலவசக் கல்வியை உறுதிப்படுத்தவும் பேரணி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது. கடந்த 13ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தொடர்ச்சியான சத்தியாகக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், கல்லூரிகள் மற்றும் ரியூசன் நிலையங்களிற்கு சென்று தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் கல்வியில் தனியார் நுழைவதால் எதிர்காலத்தில் இலவசக் கல்விக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இவற்றின் தொடர்ச்சியாக நேற்று யாழ் வீதிகளில் "இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகளை பாதுகாக்க அணிதிரள்வோம்" என்ற முழக்கத்துடன் மக்களிற்கு விழிப்பை ஏற்படுத்தும் பேரணி இடம்பெற்றது.
பெரும் மழைக்கு மத்தியிலும், இந்தப் பேரணியில் யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களுடன் ஏனைய பீட மாணவர்கள், கொக்குவில் தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.