பிரசன்ன விதானகே அவர்களின் "silence in tha courts" - " உசாவிய நிஹண்டாய்" - "நீதிமன்றத்தில் அமைதி" என்ற சிங்கள திரைப்படம் திரையிடலுக்கான அனுமதியை முன்னாள் நீதிபதி லெனின் ரத்நாயகவின் புகாரை அடுத்து நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. பிரசன்ன விதானகே இதனை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லெனின் ரத்தநாயக்காவின் வழக்கறிஞர் சமூகமளித்திருக்காத படியால் வழக்கு நாளை விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது வரை படத்தை திரையிடுவதற்க்கான தடையும் அமுலில் உள்ளது.
இந்த சினிமாவை திரையிட விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு முன்னால் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சினிமா துறையினர், இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், மாணவர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் அணிதிரண்டு பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கையின் நீதித்துறையில் இருள் படிந்த சம்பவங்களை ராவயின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்கள் தனது நொனிமி அரகலய என்ற நூலில் விரிவாக எழுதியிருந்தார். அதில் லெனின் ரத்நாயக என்ற முன்னாள் நீதிபதி மஹவ நீதிமன்றத்தில் கடைமை ஆற்றிய காலத்தில் ஒரு ஏழைப் பெண்ணிடம் அவளது கணவனை விடுதலை செய்வதாக கூறி, கட்டாயத்தின் பேரில் பாலியல் லஞ்சம் பெற்றதனை விவரித்திருந்தார். இந்த உண்மையினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட "உசாவிய நிஹண்டாய்" திரைப்படமே தடையை எதிர்கொண்டுள்ளது.