உயிர்ப் பலிகளினால்
இயற்கையை அழித் தொழிக்க
அறிவிலி அரசியலில்
கங்கணம் கட்டி நிற்கும்
பாரதத் தமிழ் நாட்டின்
கூடங்குள அணுமின்னிலை முன்
அல்லும் பகலுமாய்
ஆயிரம் மக்கள் கூடி
இலங்கை வரையான
பல்லாயிரம் மக்களின்
எதிர்கால இயல் வாழ்வை
மீட்கப் போராடும் நிலையில்...
இலங்கையில் பயங்கரங்களையும்
இனவெறி அரசியலையும் தகர்த்தழித்து
அனைத்து இன மக்களுக்குமான
"சம உரிமை" மலர்த்தும்
சுய இயல் வாழ்வை
மீட்கப் போராடும் நிலையில்...
உலகப் பெரும் பகுதி மக்களின்
அடிப்படை உரிமைகளை
போலிகளால் மூடி மறைத்து
மக்களின் சுய அரசியலை
மறுக்கின்ற கடப்பாட்டை
ஏற்றழியும் அரச இயந்திரத்தை
மீட்கப் போராடும் நிலையில்...
மக்களை ஒடுக்கி அடக்கி
சுரண்டும் சதிமூலப் போர்கள் செய்து
உயிர்களை வதைத்துத் தொலைத்து
இயற்கையை வக்கரிக்கும் வல்லரசார்
இரும்புக் கரங்களை
சிறுகச் சிறுக உடைத்தறுத்து
மக்களின் சுய வாழ்வை
மீட்கப் போராடும் நிலையில்...
வல்லரசார் விசம் குடித்து
அவர் காப்புரிமம் தாங்களான
புல்லுருவி விதைகள் சில
தம் ஆணவக் குறி நீட்டி
எங்கள் அத்தனை போராளியரிலும்
ஏறித்தான் தம் திமிர் அடங்குமெனும்
இவர் எத்தனப் புத்தி காண்க.
மாணிக்கம்