எனக்கு ஆருயிர்க் காதலி
ஒருத்தி இருந்தால்
ஒரு இரவின் முடிவில் - அவள்
போலீஸ்காரர்களால்
படுகொலை செய்யப்பட்டாள்.
ஏ! காடே ! நீ என் ஆருயிர்க் காதலியாய் இரு !
நீயே என் மணப்பெண்.
என் இதயத்தின் அன்பு
வெளிச்சமிடுகின்றது, வெள்ளமாய் ஓடுகிறது.
அந்தக் காதல் வார்த்தைகளை- நான்
எப்போழுதும் சொல்லத்துணிந்ததில்லை !
ஆனால்.... அருமைக்காடே !
உன் செவிகளில் மெதுவாக உச்சரிக்கிறேன்.
அந்தி மாலைகளில்
உன்றன் மரக்கிளைகள்
மெல்ல அசைந்து - பச்சை இலைகளால்
முத்தம் படாத என் இதழ்களைத்
தடவிக் கொடுக்கின்றன !
என் அம்மாஅவளையும்
இந்தக் கசடர்கள்
கருத்த இருட்டில்-எங்கோ...
தூக்கிச் சென்றார்கள்.
ஏ! காடே ! நீயே என்-
அன்பான ஆதரவான அம்மாவாக இரு !
அவனின் அரவனைப்பு இல்லாமல்
வாழவே இயலாது!
காலைப் பனித் துளிகளால்
வலிக்கும் என்
போர்க்கள விழுப்புண்களை
கழுவிக் குளிப்பாட்டு !
அணி வகுத்துச் செல்லும் போதும்
அபாயத்துடன் விளையாடும் போதும்
அன்பான உன் ஆசைப் பார்வையால்
கவனித்துக்கொள் !
எனக்கும்.... ஒரு
ஒட்டைக் குடிசை இருந்தது.
காற்று ஏந்தி வந்த
புகை மண்டலத்தால்- அது
சாம்பலாகிப் போனது!
ஏ ! காடே ! நீ என் குடிசையாய் இரு !
கயமையின் களங்கக் கரங்கள்
உன்னைத் தீண்டவே அஞ்சுகின்றன!
போராட்டங்களின் முடிவில்- அந்தக்
குழப்பமான இரவுகளில்
களைப்புற்று உன் மடிமீது அணைந்தபடி
தவழ்ந்து ஊர்கின்ற பொழுது
உன் கனத்த இலைகளால்
கட்டி அணைத்துக்கொள் !
உறங்கும் பொழுது பணிவிடை செய் !
எனக்கம் ஒரு தாயகம் இருக்கின்றது.
ஆனால்.... கொடுங்கோலர்களின் கீழ்
அடிமையாய்,
துண்டாடப்பட்டு
உடைந்து கிடக்கிறது.
ஏ! காடே ! நீ என் புகலிடம் !
ஆனால்...
என் நெஞ்சில் இருக்கும் தாயகமாக
நீ ஆக முடியாது
நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை.
அம்மாவை விட
அன்பு மனைவியை விட
அழகுக் குடிசையை விட
அன்னை பூமியை
அளவு கடந்து நேசிக்கிறோம் !
ஏ! புரட்சிக்காடே ! எங்களைப் பாதுகாத்திடு !
எங்களைக் கவனித்துக் கொள் !
தாயகத்திற்காக - அந்தச்
சாவையும் சவாலுக்கு அழைப்போம் !
டோப்ரி ஜோடாவ். ரஸியக் கவிஞரின் கவிதை தமிழாக்கம்