சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.
கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.