தோழர்களே!
உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் தேசம், இனம் என எல்லாவற்றையும் கடந்து ஒன்றுபட்டு தமது உரிமைக்காக உலகளவில் திரண்டெழும் இம் மேநாளில் சமவுரிமை இயக்கம், உங்களை இவ் உழைப்பாளர் தினத்தில் வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு எள்ளளவும் வேறுபாடின்றிய அதேவழிகளில் இன்றைய மகிந்த அரசு நம்நாட்டு மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை நசுக்கி வருகின்றது. உண்மையாக நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து இனவெறிப் பிரச்சாரங்கள் மூலமாய் மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை இந்த அதிகாரப் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். வடக்கு வாழ் மக்களுக்கு வசந்தம் வழங்குவோமென்ற இந்த அரசானது வடக்கு மக்களை முன்னெப்போதையும் விட மோசமான இராணுவ ஆட்சிப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. வடக்கு மக்கள் இராணுவ ஆதிக்கப் பிடிக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.