வசந்தத்தை தேடிச் செல்வோம்!
இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு அழிக்கின்றது என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும் நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.
அதற்காக எமக்கு மத்தியில் இருக்கும் வேறுபாடுகளை விரோதமாகக் காட்டி உண்மையான விரோதத்தை வேறுபாடாக நிலைநிறுத்த இந்த நவதாராளச் சமூகமுறை முயற்சிக்கிறது. நாம் சிங்கள மொழியைப் பேசுவதும், தமிழ் மொழியைப் பேசுவதும் வித்தியாசமே அன்றி விரோதமல்ல. நாம் பௌத்த தர்மத்தையோ, இந்து தர்மத்தையோ, இஸ்லாத்தையோ, கிறீஸ்துவத்தையோ வழிபடுவது எமது நம்பிக்கைகளின் வேறுபாடேயன்றி விரோத மனப்பான்மையாலல்ல. ஆனால் அதனை விரோத மனபான்மையாகக் காட்டவே அதிகாரத்தில் உள்ளவர்கள் முயல்கின்றனர். பேசும்மொழி, வழிபடும் சமயம் அல்லது காலாச்சாரத்தின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் சாகடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளவே அதிகார சக்திகள் முயல்கின்றனர். அப்போதுதான், உண்மையான எதிரிகள் அல்லது மிதிப்பவர்களின் மீதான மிதிக்கப்படுபவர்களின் எதிர்மனப்பான்மை,- சுரண்டுபவர்கள் மீதான சுரண்டப்படுபவர்களின் எதிர்மனப்பான்மை,- ஒடுக்குபவர்கள் மீதானா ஒடுக்கப்படுபவர்களின் எதிர்மனப்பான்மை மறைக்கப்பட்டுவிடும். இலங்கை மக்களான நாம் பலசகாப்தங்களாக இந்த மாயையில் சிக்கிகுண்டு ஆயிரக்கணக்கானவர்களின் உதிரம் சிந்தப்பட்டுள்ளது. நாம் இந்த உண்மையை நாம் உணர்வோமானால், இந்த இழப்புகள் இனியும் தொடர முடியாது!
பாரிய அழிவைத் தந்த யுத்தத்தின் பின்னர், ஒற்றுமையைப் போதிக்கும் ஆட்சியாளார்களின் பூரண அனுக்கிரகத்துடன் இனவாத்ததினதும், மதவாதத்தினதும் கோரப்பற்கள் சமூகத்தின் பக்கம் நீண்டிருக்கும் அதேவேளை, முகமாற்றம் - நல்லாட்சி - தேசிய அரசு - தேசிய பிரச்சனைக்கு தேசிய அரசால் தீர்வு - அதற்கு ஒத்துழைப்பு என்று எல்லா இன ஆதிக்க அரசியல்வாதிகளையும் ஓரணியில் கொண்டு வந்து நவதாராள வாத மயமாக்கலை மேற்கு உலகம் முனைப்புடன் முன்னெடுக்கும் இச்சந்தர்பத்திலாவது அதனை உணராவிட்டால், எமது இந்தத் தவறுக்காக மேலும் பல தலைமுறைகள் நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சமவுரிமை இயக்கத்தின் நோக்கம் இவ்வாறான அழிவுகள் மீண்டும் ஏற்படாதவாறு தடுப்பதேயாகும். ஒற்றுமையைப் போதிப்பதால் மாத்திரம் மேற்படி இன - மதவாதம் சார்ந்த அழிவுகளை நிறுத்திவிட முடியாது. அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் ரீதியில் ஒன்று பட்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் இலங்கை மக்கள் மத்தியிலும் இதனை எடுத்துச் செல்வது இந்த நோக்கில் தான்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் சமவுரிமை இயக்கக்கிளைகள் சேர்ந்து கடந்த வருடம் ஏற்பாடு செய்திருந்த "வசந்தத்தை தேடுகின்றோம்" தொனிப் பொருளிலான கலை விழா மேற்படி நோக்கதிற்கு பாரிய கடைமை ஒன்றை நிறைவேற்றி இருந்தது. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருப்பினும், இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள அரசியற் சவால்கள் சம்பந்தமான கண்ணோட்டத்தோடும், அவற்றை வெல்வதற்கான செயற்பாட்டுடனும் புலம்பெயர்ந்துள்ள இலங்கை மக்கள் இக்கலை விழாவை வண்ணமயமாக்கினார்கள். சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆகிய கலாசாரங்களின் பன்முகமும், அவற்றின் தனித்தன்மையும் இந்த விழாவில் உறுதி செய்யப்பட்டிருந்தன. இவ்விழா கலாச்சாரங்களின் பன்முகத் தன்மையையும் தனித்துவத்தையும் ஒன்றிணைத்து எதிர்கால உலகை கட்டி எழுப்ப எமக்கு நம்பிக்கையும் ஊக்கத்தையும் எமக்கு அளித்திருந்தது.
எமது மேற்கூறிய நோக்கங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் நோக்கத்துடன், இந்த வருடமும் சமவுரிமை இயக்கத்தின் ஜரோப்பிய கிளைகள் அனைத்தும் ஒன்றிணைந்து டென்மார்க் கொஸ்ரப்பரோ நகரில் "வசந்தத்தைத் தேடுகின்றோம்" கலை மாலைப்பொழுது நிகழ்வினை எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமை, ஒக்டோபர் 2015, நடாத்துகின்றனர். இந்நிகழ்வும் கடந்த முறை போன்று வெற்றி பெற உங்கள் அனைவரினதும் ஆதரவையும், ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம்.
-சமவுரிமை இயக்கம் - ஜரோப்பா