சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.
கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் தலைமை) மூத்த உறுப்பினரான தோழர் இக்பால் அவர்கள், சமவுரிமை இயக்கத்தின் இணைப்பாளர் ரவீந்திர முதலிகே, அகிலன் கதிர்காமர் ஆகியோர் தமது சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.
அழைக்கப்பட்ட பேச்சாளர்களின் உரைகளின் பின் நடந்த விவாதத்தில், பங்குகொண்ட பொதுமக்களும், இனவாதத்துக்கு எதிராக இயங்கும் அனைத்து இனத்தையும் சேர்ந்த களப்பணியாளர்களும் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். விவாதத்தில் இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைக்கு எதிராக பற்றிய காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
சமவுரிமை இயக்கத்தின் இன - மதவாதத்துக்கு எதிரான தற்போதைய வேலைத்திட்டம் தென்-இலங்கையை மையமாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு தென் இலங்கையில் இன- மதவாதத்துக்கு எதிரான வேலைகளை முன்னெடுப்பதே இன்று மிக முக்கியமானதெனக் கூறும் சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள், வருங்காலத்தில் ஏனைய பகுதிகளுக்கும் தமது போராட்டங்களும் வேலைத்திட்டங்களும் விரிவாக்கப்படுமென தெரிவிக்கின்றனர்.