26.01.2013- அன்று சுவிஸ்ட்சர்லாந்தில் சமஉரிமை இயக்கத்தின் ஆரம்பமும் கொள்கை விளக்க கூட்டமும் நடைபெற்றது. சிங்கள, தமிழ் மக்கள் என கிட்டத்தட்ட நாற்பது பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர் குமார் குணரட்ணம் (மு.சோ.க) சிங்களத்திலும் தமிழிலும் விசேட உரையாற்றினார். தோழர் றயாகரனும் சிறப்புரையாற்றினார்.
இனவாதத்தை தந்திரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களையும் அனைத்து சிங்கள, தமிழ், கட்சிகளின் இனவாதத்தில் குளிர்காயும் போலித்தனங்களையும் அம்பலப்படுத்தினார். அங்கு சமூகம் தந்திருந்தவர்கள் இனவாதத்திற்கு எதிரான ஆதரவையும், இவ்விடயம் வளர்த்துச் செல்லப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர். மேலும் சம உரிமை இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" என்னும் பத்திரிகையை அனைவரும் பெரும் ஆர்வத்துடன் வாங்கிப்படித்தனர்.
அத்தோடு சுவிஸ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரால் "இணைந்த வாழ்வும் அரசியலும்" என்னும் விடயம் குறித்த பேச்சு பாராட்டைப் பெற்றது. அவர் தனது கருத்துக்களையும் அங்கு பகிர்ந்து கொண்டார்.
பங்குபற்றியவர்களிடம் இருந்து எழுந்த கேள்விகள் இன ஒற்றுமையை கட்டியமைப்பது சம்பந்தமாகவே அமைந்திருந்தது. சிங்களத் தோழர் ஒருவரின் கருத்து இவ்வாறு அமைந்திருந்தது.
"இவ்வளவு கொடுமைக்கும், அழிவிற்கும் இனவிரிசல் நிகழ்திருந்தும் நாம் ஒன்றாக உணவருந்தி கொள்கிறோம், தேனீர் பருகிக்கொள்கிறோம் என்ற விடயம் மகிழ்சியானது.அத்தோடு இது ஒரு உதாரணம் நாம் இனவாதத்தை தோற்கடிக்க அணிதிரள்வோம்"¨!. பங்கேற்றவர்கள் கைதட்டி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இவ் அரங்கில் மேலும் இன்று 27.01.2013 மக்கள் கூட்டத்தை சந்தித்து கருத்துக்ளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது விசேட செய்தியாகும்.