காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் தொடர்பில் முன்னனி சோசலிச கட்சியின் நிலைப்பாடு.
காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் என்ற பெயரில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை செய்வதற்கான சட்டமொன்று 2016 ஆகஸ்ட் 23-ம் திகதி சபாநாயகரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது. இது 2016 மே மாதம் 24-ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, கெபினட் அனுமதியுடன் ஜூன் மாதம் 22-ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த சட்டமூலமாகும். இதற்கான வாக்கெடுப்பானது ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் இனவாத அடிப்படையிலான பலமான எதிர்ப்புக்களின் மத்தியில் நடந்தது. அன்றைய தினமே சட்டமூலத்திற்காக வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், அந்த விவாதம் தொடர்பான சட்டமுறையை அறிந்து கொள்வதற்கும் இன்னும் கால அவகாசம் தேவை என்பது எதிர்க்கட்சி அணியின் சில உறுப்பினர்களின் எண்ணமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியினரதும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினதும், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் ஆதரவுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.