பொய்யான பட்டங்களை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தலை எதிர்த்தும், கல்வியை தனியார் மயப்படுத்தலையும் எதிர்த்தும், பாடசாலைகளில் அநியாய கட்டண வசூலை எதிர்த்தும் நேற்று 27.07.2016 பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வல போராட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஹைலெவல் வீதி இருந்து தொடங்கி கொழும்பு நகரத்தின் ஊடாக நுகேகொட நோக்கி நடாத்தப்பட்டது. அதன் பின் பொதுக் கூட்டம் சமரக்கோன் வெளிப்புற திரையரங்கில் நடைபெற்றது.
இப் போராட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவாகள் குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மருத்துவ பீட மாணவர்கள, அவர்களது பெற்றோர்கள், விவசாயிகள் அமைப்புகள், மீனவ அமைப்புகள்,சிவில் ஆர்வலர், தொழிற் சங்கங்கள், இடதுசாரி செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.
தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை அமைக்க அனுமதியளித்து இலவச கல்விக்கு சாவு மணி அடிக்க முனையும் ஆட்சியாளர்களிற்கு எதிராக மாணவர்கள் தொமிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், இடதுசாரி கட்சிகள், மாணவ அமைப்புக்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த போராட்டத்தை இனிவரும் நாட்களில் முனைப்பாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.