அனைவருக்கும் இலவசக் கல்வியும், அனைவருக்குமான பல்கலைக்கழகக் கல்வியும் என்ற அடிப்படை
உரிமையே, மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியும். இதற்குப் பதில் தனியார் கல்விமுறை, அனைவருக்கும் கல்வியைத் தரமுடியுமா?
பணம் கொடுத்து கல்வியைக் கற்கக் கோருகின்ற கல்விமுறையானது, எப்படி அனைவருக்கும் கல்வியைத் தரமுடியும்? இங்கு பணம் கல்வியைத் தீர்மானிக்கும் போது, பணம் இல்லாதவன் கல்வியைப் பெற முடியாதாகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும், ஆணாதிக்கரீதியாகவும், பல்வேறு சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவோரில் பெரும்பகுதி, பணமின்றிய நிலவரத்தால் கல்வி கற்பதைக் கைவிடுவார்கள். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறை மூலம், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இலவசக் கல்வியானது, தனியார் கல்விமுறையால் வேட்டு வைக்கப்படும் என்பதே உண்மை.