இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 22
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 22
டிராட்ஸ்கியம் என்பது, அரசியல் சதிகளை மூலமாக கொண்டது
டிராட்ஸ்கியும், நான்காம் அகிலமும் தமது அரசியல் உள்ளடக்கத்தில் சோவியத்யூனியன் பற்றி கூறும் போது “சோவியத் யூனியனை சீரழிந்த தொழிலாளர் அரசு” என்றனர். டிராட்ஸ்கி தனது தொடர்ச்சியான எழுத்ததுகளில் “ஸ்டாலின் அதிகாரத்துவத்துக்கும் அதன் மூலம் உலக ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார். ஆனால் அவர் அதிகாரத்துவம் தனது சொந்த நலன்களின் பேரில் சுரண்டும் சமூக அடிப்படைகளை பேனாமல் அதிகாரத்துக்குச் சேவை செய்ய முடியாது. அந்தளவுக்கு ஸ்டாலின் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துக்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்தும் அதிகாரத்துவத்தின் பொறுமையிழந்ததும் பேராசை கொண்டதுமான தட்டினரிடமிருந்து கூடப் பேணுகின்றார். எவ்வாறெனின் அவர் இந்த பாதுகாப்பினை சோவியத் சமுதாயத்தினை பொதுவாக ஒழித்துக் காட்டும் தயாரிப்பு நடவடிக்கைகளுடனேயே இதை அழுல் செய்கின்றார். சரியாக இதன் காரணமாகவே ஸ்டாலினிசக் கும்பல் தூக்கிவீசப்படவேண்டும்” என்று எழுதுகிறார். சீரழிந்த தொழிலாளர் அரசு என்று கண்மூடித்தனமாக புலம்பிய போது, அதன் வர்க்கத் தன்மையை பற்றி மூடிமறைக்கிறார். மறுபுறத்தில் முரண்பாடாக தனது தலைமைய அதன் மேல் நிறுவ, சோவியத் அமைப்பை பாட்டாளி வர்க்கத் தன்மை உடையது என்கின்றார். ஆனால் சீராழிந்த பாட்டாளி வர்க்கத் தன்மை என்கின்றார். இப்படி முரண்பாடான, மார்க்சியமல்லாத புலம்பல் ஒரு முதலாளித்துவ மீட்சிகான ஒருமுயற்சியே. இப்படி பிதற்றும் டிராட்ஸ்கியம் பற்றி லெனின் “மார்க்சியத்தின் முக்கியப் பிரச்சனை எதிலும் டிராட்ஸ்கி ஒரு போதும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்ததில்லை. எந்தக் கருத்து வேறுபாட்டிலும் உள்ள விரிசல்களில் நுழைந்து கொள்ள எப்போதும் அவர் கடும் முயற்சி செய்கிறார். ஒரு சாராரைக் கைவிட்டு இன்னொரு சாராருடன் சேர்ந்து கொள்கின்றார்” என்றார். டிராட்ஸ்கிய கோட்பாடு இப்படி முரண்நிலையாகவும், தனது தனிப்பட்ட நலன்களை சார்ந்து விளக்கம் பெறும் போது, “சோவியத்யூனியனில் சீராழிந்த தொழிலாளர் வர்க்க அரசு” ஒன்று நிலவுவதாக கூறுவது, அடிப்படை மார்க்சியத்தையை மறுப்பதாகும். வர்க்க சமுதாயத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது. இருக்க முடியாத நிலையில் அதை இருப்பதாக கூறுவது தான் டிராட்ஸ்கியமாக உள்ளது. எதார்த்தத்தின் உண்மையை யாரும் மறுத்து புனைய முடியாத நிலையில், முரண்நிலையில் புலம்புவது தொடங்குகின்றது. சோவியத் ஆட்சி பாட்டாளி வர்க்க ஆட்சியாக அல்லது முதலாளித்துவ அரசாக, இரண்டில் ஒன்றுதான் இருக்கமுடியும். இரண்டுமாக அல்லது இரண்டும் அல்லாததாக இருக்க முடியாது. இது வர்க்க அமைப்பு பற்றி அடிப்படையான மார்க்சிய ஆய்வுரையாகும். இதை மறுத்து தான் ஸ்டாலின் ஆட்சியை அகற்றி தனது தலைமையை நிறுவ டிராட்ஸ்கியம் கொள்கை விளக்கம் அளிக்கின்றது.