25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது.

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 32 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.

தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

பழிக்கு பழி : பலர் பலியில் முடிந்தது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய திருநெல்வேலி சந்திப்பு ( இப்போதைய படம்)

ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

தூண்டப்பட்ட உணர்வுகள்

இக்கலவரத்தின் காரணமாக பலர் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர்இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள கணத்தையில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.

ஏரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டர்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.

இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

சிறையிலும் தாக்குதல்

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.

பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.