பல்கலைக்கழகங்களை அரசு ராணுவ மயமாக்குகின்றது. இதை என்னவிலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்த தயாராகவுள்ளோம் என தேசிய மாணவர் ஒன்றியச் செயலாளர் அசங்கபுளேகொட தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது!.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை யாழ். பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது வன்முறை தாக்குதலை நடாத்திய இராணுவத்தையும் அதனை பின்னால் இருந்து செயற்ப்பட்ட அரசினையும் கண்டித்தும் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தேசிய மாணவர் ஒன்றிய மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர்!
பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை அரசு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து "ரட்ணா லங்கா' என்னும் தனியார் பாதுகாப்புப்பிரிவிடம் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பைக் கையளித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் விளைவையே தற்போது இங்கு பயிலும் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள். இதன் ஒருபகுதியாகவே யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் அத்துமீறிப் பாய்ந்தாகும்.
எனவே மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். இதன் முதற்கட்டமாகவே இன்றைய போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இப்போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களாக நாடு முழுவதும் விரிவடையும் எனவும் குறிப்பிட்டார்.
இனவாத மதவாத வெறியூட்டி இனியும் சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது. புதிய சந்ததியினர் புதிய சிந்தனைகளுடன் புறப்படுகின்றார்கள். நீண்ட இருண்ட பாதையில் ஒரு நம்பிக்கை ஒளி தென்படுகின்றது.