"இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது!" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக விசுவநாதன் ருத்ரகுமாரன் கூறுகின்றார். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் மனிதர்கள் வாழ முடியாது என்ற உண்மை, சிங்கள மக்களுடன் வாழ்வதற்கு தடையானதல்ல. இந்த உண்மையை இவர்கள் முன்வைக்க தயாராகவில்லை.
சிங்கள மக்கள் வேறு, பேரினவாதம் வேறு என்ற உண்மையை மறுக்கின்றதன் மூலம், பேரினவாதத்தின் அதே இனவாதச் சேற்றில் தமிழ் மக்களை புதைத்துவிடுவதே நடந்தேறுகின்றது. பேரினவாதத்தை, சிங்கள மக்களுடன் இணைந்து தோற்கடிப்பதற்கு பதில், அதை பலப்படுத்தி விடுவதே கடந்த வரலாறு என்றால், இன்று அதையே முன்வைப்பது தொடர்ந்து நடந்தேறுகின்றது.
இனவாதிகளையும் மக்களையும் பிரித்துப் பார்க்காத கொள்கை, அனைத்து இன மக்களை ஐக்கியப்படுத்த முனையாத கொள்கை, பேரினவாதத்துக்கு நிகரான சேர்ந்து வாழ மறுக்கும் இனவாதம் தான். இந்த இனவாதத்துடன் மனிதர்கள் ஒரு போதும் இணைந்து வாழ முடியாது என்பதே உண்மை. இது தான் மக்களை தொடர்ந்து தோற்கடிக்கின்றது.