பொருளாதாரரீதியானதும், அரசியல்ரீதியானதுமான அகதிகளை உற்பத்தி செய்து கொண்டு, அந்த மக்களை கூட்டாகத் தண்டிகின்றதையே அவுஸ்திரேலியா நடவடிக்கை மூலம் காண்கின்றோம். எந்த மக்களும் தன் தாய் நிலத்தையும், சொந்த பந்தங்களையும் விட்டு, நாடு கடந்து வாழ்வதை விரும்புவது கிடையாது. மக்கள் வாழக்கூடிய நிலை வகையில் நாட்டை ஆள முடியாதவர்கள், வாழப் புறப்படும் மக்களையே குற்றவாளியாக்கி தண்டிக்கின்றனர்.
இதற்கு துணையாக ரோந்துக் கப்பல், இலத்திரனியல் கடவுச் சீட்டு ... என்று இலங்கை பாசிசத்துக்கு ஏற்ப அவுஸ்திரேலியா தோளில் தட்டிக் கொடுக்கின்றது. இலங்கையில் மனிதவுரிமை மீறல் கிடையாது என்ற சர்வதேச அங்கீகாரத்தை கூட வழங்குகின்றது.
அவுஸ்திரேலியாவில் இன-நிற வாதத்தை முன்வைத்து ஆட்சியேறியவர்கள், தங்கள் இன-நிற வாதத்துக்கு உதவும் இன-மத கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து வருகின்றது. இரண்டு அரசுகள் இலங்கை மக்களுக்கு எதிராக வெளிப்படையாக கைகோர்த்து நிற்கின்றது.
ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனில் இருந்து தான் அனைத்தையும் அணுகும் என்பதற்கு, அவுஸ்திரேலிய நடத்தை மிகச் சிறந்த உதாரணமாகியுள்ளது.