யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று அதிகாலை 5.00 மணியளவில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கிருந்த ஊழியர்களை விரட்டிவிட்டு அச்சகத்திற்குள் நுழைந்து பெற்றோல் ஊற்றி அச்சு இயந்திரத்தை கொளுத்தியதாகவும், இன்று விநியோகிக்கப்படவிருந்த பத்திரிகைகளையும் தீயில் போட்டு கொளுத்தியதாகவும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பீ. பிரேமானந்த் கூறினார்.
கடந்த ஏப்ரல் 3ம் திகதியும் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தாக்குதல் 33வது தாக்குதலாகும். யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் பத்திரிகை மீது கடந்த காலம் பூராவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, மேற்படி தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் உத்தியோக மற்றும் உத்தியோகப் பற்றற்ற நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பது பரகசியமாக உள்ளது.