கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று (03) அதிகாலை 5மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :
வழமைபோன்று பத்திரிகைப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் - கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆட்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட குண்டர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.