மக்கள் சார்ந்த ஜனநாயகத்திற்காக போராடுவது என்பது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் அல்ல. மக்களுக்கு துன்பம் கொடுப்பதை, வதைப்பதை நிறுத்தும் முறையில் அமைந்த செயற்பாடுகளே சரியான பாதையாகும்.
ஒரு ஒடுக்குமுறை இயந்திரத்தில் அங்கம் வகித்துக் கொண்டு சுதந்திரமாக விமர்சிக்கும் செய்திகள் மூலம் ஒடுக்குமுறை இயந்திரத்தில் அங்கம் வகிப்பதை நியாயப்படுத்துகின்றார். மேலும் விமர்சிப்பதன் ஊடாக நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக மறைமுகமாக பிரச்சாரம் செய்கின்றார் இந்த முதியவர். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே இதனை யாரும் மறுக்க இயலாது என ஆளும் கட்சி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ள நிலையிலேயே வாசுதேவ நாணக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும். எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போனவர்களின் விபரங்கள், உறவினர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பதிவாகியுள்ளது. இதில் யார் கூட்டிச் சென்றது? எப்போது சம்பவம் இடம்பெற்றது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை பொய் எனக் கூறக்கூடாது. நியாயமான சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளை அரசாங்கம் கண்டறிய வேண்டும்.
மன்னார் ஆயர் அவர்கள் பேட்டியொன்றில் முன்னைநாள் பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் மைக்கல் பிரான்சிஸ் அடிகளார், ஜிம்பிறவுண் அடிகளார் ஆகியோர் இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டதாகவும், இதனை பலர் கண்ணுற்றதாகவும் தெரிவித்திருந்தார். இவர்களைப் போல பலர் இராணுவவாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இறுதிப் போரின் போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த மக்களை முதலில் செஞ்சிலுவைச் சர்வதேசச்குழுவும், இந்திய வைத்தியசாலைகளுமே பொறுப்பேற்றன. அவையே பின்னர் அம்மக்களை படையினரிடம் அழைத்து வந்தன.
அவ்வாறு படையினரிடம் அழைத்துவரப்பட்டவர்கள் பதியப்பட்டே பொறுப்பேற்கப்பட்டனர். இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட எவரும் இதுவரையில் காணாமல்போகவில்லை. அவ்வாறு காணாமற்போயிருப்பார்களாயின், அது இந்திய வைத்தியசாலைகளிடமோ அல்லது செஞ்சிலுவைச் சர்வதேச குழுவிடமோ சரணடைந்த போதோ அல்லது அதற்கு முன்னரோ காணாமல் போயிருக்க வேண்டும் என உளறும் கோமாளித்தனமான மனநோயாளிகளின் இருப்பிடமாக இலங்கை அரச இயந்திரம் இருக்கின்றது.
மக்களுக்கான நியாயமான கோரிக்கைகளையும், உண்மையான ஜனநாயகத்தையும் அரச இயந்திரத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக வழங்கிவிடவோ, பெற்றுக் கொள்ளவோ முடியாது.