அநியாயமான முறையில் அவதூறு செய்யப்பட்டு பழிசுமத்தப்பட்டவராக எவ்வித ஏதுக்களும் இன்றி உதறி எறியப்பட்டவளாக நான் இன்று உங்கள் முன்னிலையில் நிற்கிறேன். கடந்த சில வாரங்களாக என் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடும் நடவடிக்கைக்கு இந்தக் குடியரசின் ஒரு பிரதம நீதியரசர் மட்டுமல்ல எந்தவொரு குடிமகனும் உள்ளாகக்கூடாது என்று பதவி விலக்கப்பட்டுள்ள கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலம் எதேச்சதிகாரமாகவும் தன்னிச்சையாகவும் குற்றவாளியாக்கப்பட்டாலும், நான் சட்டரீதியானமுறைகள் மூலம் அதனை முகங்கொடுத்துள்ளேன்;
அரசமைப்பை வியாக்கியானம் செய்வதற்கு தனிமையானதும் புறநீங்கலானதுமான நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு என்பதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் கடந்த வியாக்கியானத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் அதன் நடவடிக்கை முறைகள் யாவும் சட்டவிரோதமானது எனவும் அரசமைப்புக்கு முரணானது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.