இன்று மாலை 3 மணியளவில் கொலன்னாவை பிரதேசத்தில் அமைந்துள்ள மீதொட்டமுல்ல மக்கள் குடியிருப்புகளிற்கு அருகே உள்ள குப்பைமேடு சரிந்து வீழ்ந்து, பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் பலத்த காயங்களிற்கும் உள்ளாகி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக மீதொட்டமுல்ல வாழ் மக்களும், சமூக அமைப்புகளும் குடியிருப்புகளிற்கு அருகே கொட்டப்பட்டு வந்த குப்பை கழிவுகளை அகற்றிடக்கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த குப்பை மலை மேட்டால் மக்கள் இந்த பகுதியில் குடியிருக்க முடியாதவாறு துர்நாற்றம் வீசுவதும், இதிலிருந்த வெளியேறும் நச்சுக்கள் காரணமாக மக்கள் நோய்களுக்கு உள்ளாகி வந்ததன் காரணத்தால் இங்கு வாழும் மூவின மக்களும் கூட்டாக பல போராட்டங்களை நடாத்திய போதெல்லாம் அரசு அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை பாராமுகம் கொண்டு படையினரை கொண்டு அடக்கி வந்திருந்தது. இன்று புத்தாண்டு தினத்தில் மக்கள் ஆட்சியாளர்களின் அசண்டை, பாராமுகம் காரணமாக இந்த துன்பமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆட்சியாளர்களே பொறுப்பாளர்கள்.
குப்பை மேட்டை அகற்றி தமது வாழ்விடத்தை பாதுகாக்க போராடிய மக்கள் மீத 2012 இல் பொலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. 2014 இல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. 2015இல் அரச குண்டர் படை தாக்குதல் மேற்கொண்டு பல போராட்டக்காரர்களிற்கு உயிராபத்து நிலை ஏற்பட்டது. இன்று 100 இற்கு மேலான வீடுகள் அழிந்துள்ளதுடன் பலர் பாரிய காயங்களிற்கும் உள்ளாகி இருக்கின்றனர்.
பொலிஸ் இந்த இடத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொணடு வந்து வெளியில் இருந்து மனிதாபிமான உதவிகள் வருவதனை தடுத்துள்ளதுடன் எவரையும் உள்செல்ல விடுகின்றார்கள் இல்லை. ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை புரியம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மீதொட்டமுல்ல மக்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராகி உள்ளனர்.