25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னே அக்கொடியைப் பிடித்தவர்கள் இறந்து விட்டார்கள்

கடலின் அடியில் மடிந்தார்கள்

கழனி கங்கையின் கரையில் எரிந்தார்கள்

வன்னிக் காட்டில் கரைந்து போனார்கள்

தூரத்து வெளிகளில் சிலர் மூச்சடங்கிப் போனார்கள்

எனினும் இன்னும் கைகள் பிடித்திருக்கின்றன

செங்கொடியை வர்ணத்தில் வரையவில்லை

வழிந்தோடிய குருதியில் வரைந்தார்கள்

 

காலம் ஒரு நாள் வரும்

எரிந்த மரங்கள் துளிர் விடும்

சரிந்த முரசங்கள் எழுந்து முழங்கும்

சாகும் வரை போரிட்ட சரித்திரம்

தேசம் எங்கும் சத்தமாக முழங்க

அவர்கள் வருவார்கள்

 

வெளிறிய வானத்தில் வெள்ளி முளைக்கும்

தூறிய மழையில் தூக்கம் கலைந்து

சுதந்திரத்தின் பாடலைப் பாடியபடி

பசியிலும் பிணியிலும் மெலிந்த உடல் நிமிர்த்தி

அவர்கள் வருவார்கள்

 

வழிந்தோடிய குருதியில்

வரைந்த செங்கொடியை

தாங்கிப் பிடித்து வருவார்கள்

தாடிக்காரன் சொன்னது போல

வரலாறு எம் தோழரை அன்று விடுதலை செய்யும்