![](/images/March2017/IndaTNA.png)
எம் மக்கள் உயிரை இழந்தனர். உயிரின் உயிரானவரை இழந்தனர். வாழ்வை இழந்தனர். எல்லாப் பக்கமும் வன்முறை சூழ்ந்து கொண்டது. வறுமை சூழ்ந்து வற்றிப் போனது வாழ்க்கை. ஒளித்துப் பிடித்து விளையாடிய குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயினர். பாடிய பாடல்கள் பாதியிலேயே நின்றது போல் வண்ணத்துப் பூச்சிகளாக சிறகடிக்கத் தொடங்கிய வாலிபத்திலேயே வாழ்வை இழந்தனர் நம் பிள்ளைகள்.
இந்த வன்முறைகளிற்கு, தமிழ்மக்கள் மீது சிங்கள பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளிற்கு இலங்கை அரச பேரினவாதிகளிடமிருந்து நீதியோ, நியாயமோ என்றைக்கும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்மக்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கும்பல் ஆணைக்குழு ஒன்றை அமைத்து கொலைகாரர்களை கண்டுபிடிக்க போகிறோம் என்று நாடகம் ஆடியது. மகிந்த ராஜபக்சவுடன் பங்கு போடுவதில் ஏற்பட்ட பகை காரணமாக வெளியேற்றப்பட்ட சரத் பொன்சேகா எதிர்க்கட்சி தொடங்கி மகிந்தாவின் ஊழல்களை மக்கள் முன் வைப்பேன் என்று வீர சபதம் இட்டார். ஆனால் தமிழ்மக்களின் இனப்படுகொலையில் மகிந்தாவிற்கும்,சரத் பொன்சேகாவிற்கும் எதுவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆம்,தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்படவில்லை என்று இரண்டு கொலையாளிகளும் ஒத்த குரலில் சொல்கிறார்கள்.