ஆசிஃபாவைக் குதறியது நவபாசிச நவதாராளவாதமே
"ஒழுக்கமாகவும் - புனிதமாகவும்" பெண்கள் மேல் திணிக்கப்படும் ஆணாதிக்கமானது, மாறாத ஒற்றைப் பண்புவடிவம் கொண்ட ஆணாதிக்க வாழ்வியல் நெறியல்ல. ஆணாதிக்க பாலியல் வாழ்வியலானது மதத்தின் அல்லது மதங்களால் கட்டியமைக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமுதாய பண்பாட்டு எச்சமுமல்ல. மாறாக தனியுடமை சமூகப் பொருளாதார அடிப்படையில் தோன்றிய ஆணாதிக்கமானது, அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளுகின்றது. இந்த வகையில் நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் ஆட்சி முறையானது பாசிச வடிவத்தை எடுக்கும் போது, ஆணாதிக்கமானது வீரியமடைகின்றது.
நவீன நவதாராளவாத ஆணாதிக்கமே ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று போட்டு இருக்கின்றது. தைமாதம் நடந்த இந்தப் பாலியல் குற்றத்தையும், கொலையையும் மூடிமறைக்க, இந்தியாவை ஆளும் பார்ப்பனிய - இந்துத்துவ அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. குற்றத்தை சட்டரீதியாக முன்னெடுக்க பொலிசார் மறுத்தனர். குற்றத்தை பிறர் மீது சுமத்தி, திசைதிருப்ப முனைந்தனர். அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கி, சட்டத்தின் முன் கொண்டு வந்தனர். குற்றத்தை மூடிமறைக்கும் வண்ணம், சாட்சியங்களையே பொலிஸ் அழிக்கிறது. நடந்த குற்றத்துக்கு எதிராக நாடு தளுவிய மக்களின் போராட்டம், சட்டத்தை அமுல்படுத்தக் கோரிய சூழலில், குற்ற வழக்கு தாக்கல் செய்வதை இந்துத்துவ –பார்ப்பனிய வழக்கறிஞர் கும்பல் தடுக்க முனைகின்றது. இந்த குற்றவாளிக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞர் மிரட்டப்படுகின்றார்.
அதேநேரம் இந்தக் குற்றத்தை செய்த கும்பலைப் பாதுகாக்க, இந்துத்துவ தேசபக்தியும் - ஒடுக்கும் பார்ப்பனிய சாதி உணர்வும் ஆளும் தரப்பால் முடுக்கிவிட்ப்பட்டது. ஒடுக்கும் தங்கள் சாதிய உணர்வுடன், குற்றவாளிகளுக்காகக் குலைப்பது நாடு தளுவிய அளவில் பா.ஜ.க கட்சியின் அரசியல் உணர்வானது. பா.ஜ.க சட்டசபை உறுப்பினர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். பார்ப்பனிய ஊடகங்களின் துணையுடன், தங்கள் குற்றத்தை மூடிமறைக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் இறங்கினர். இந்திய தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள், இந்துத்துவ தேசபக்தி கோசங்களை எழுப்பினர்.