"சுதந்திரம்" குறித்த கலை - இலக்கிய அபத்தங்கள்
மனிதவியல் என்பது சமூகத்தன்மையிலானதே ஒழிய தனிநபரியமல்ல. மனிதனின் சமூகத் தன்மையை உயிர்ப்பூட்டுவதும் ஒளியேற்றுவதும் தான், கலையின் சாரமாக இருக்க முடியும். தனிமனித ஆத்ம திருப்திக்கானதோ, செயலற்ற சுய நடத்தையை செயலாகக் காட்டுவதற்கான கவசமல்ல கலை. இப்படிப்பட்ட கலை தனிநபரியத்தை முன்னிறுத்தியதாகவும், பணம் புகழ் சம்பாதிக்கும் முதலாளித்துவக் கலையின் பொது சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டதே.
தனிநபரியவாத கண்ணோட்டத்தை முன்னிறுத்தி நிற்பவர்கள், கலைஞன் சுதந்திரமானவன் என்கின்றனர். கலை சுதந்திரமானது என்கின்றனர். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட "சுதந்திரம்" குறித்த இந்தப் பொது அளவுகோலானது, முதலாளித்துவக் கலை வரை பொருந்தும். இங்கு "சுதந்திரம்" குறித்தான தனிநபரியவாத அபத்தங்கள், கலையை உழைக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறையில் இருந்து பிரித்துவிடுவதையே "சுதந்திரமாகக்" கருதுகின்றனர்.
கலை இலக்கியத்தை வர்க்க சமூக அமைப்பில் இருந்து "சுதந்திரமானதாக" கருதி படைப்பது முதல் அதை தர்க்கம் செய்வது வரை, தனிமனித "சுதந்திரம்" குறித்த முதலாளித்துவ சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டதல்ல. "சுதந்திரம்" என்பது எதிலிருந்து என்ற கேள்வியை இயல்பாக எழுப்பிவிடுகின்றது.
அனைவருக்கும் "சுதந்திரம்" இருக்கும் போது, "சுதந்திரம்" என்பது பொருளற்றது. சுதந்திரத்தைப் பற்றி பேசும் போதும் - கோரும் போதும், அனைவருக்குமான சுதந்திரத்தை முன்வைப்பதும் - அதற்காகவும் வாழ வேண்டும். கலை இலக்கியம் "சுதந்திரமானது" என்று கூறுகின்றவர்களும் - கோருகின்றவர்களும், கலை இலக்கியம் அரசியல், வர்க்கம்.. அடிப்படையில் இருந்து "சுதந்திரமானது" என்ற பொருளில் தான் முன்வைக்கின்றனர். அதாவது சமூகத்தில் இருந்தும் சுதந்திரமானது என்று கருதுகின்ற அதேநேரம், இது கருத்துமுதல்வாத சிந்தனை முறையாகும். சாராம்சத்தில் நிலவும் சமூக அமைப்புமுறை சார்ந்த, தனியுடைமைவாத முதலாளித்துவக் கண்ணோட்டமாகும்.