இனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்
தமிழ் இனவாதமானது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கும் வண்ணம் முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. இன்று "சுயநிர்ணயம்" என்பது பிரிவினையாகவும் -தனிநாடாகவும் எப்படி முன்னிறுத்தப்படுகின்றதோ, அதே பொருளில் தமிழ் இனவாதம் இயங்குகின்றது.
தமிழ் இனவாதமானது ஒடுக்கும் தனது குறுகிய அரசியலால் தனிமைப்பட்டு அம்பலமாகி விடுகின்றது. அரசியல் ரீதியாக தன்னை முன்னிறுத்த வக்கற்றுப் போகின்றது. இந்த அரசியல் பின்னணியில் இனவாதமானது வன்முறை கொண்ட கும்பலாக மாறி, ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றது. இதுதான் புலிகளின் வரலாறு தொடங்கி தமிழீழம் (ஈழம்) கேட்ட ஈழத்து இயக்கங்களின் பொது வரலாறுமாகும். அதேநேரம் போலி இடதுசாரியமானது இதற்கு முண்டுகொடுக்கும், கோட்பாட்டு அரசியல் விபச்சாரத்தை செய்ததே எமது கடந்த வரலாறாகும்.
புலிகளின் அழிவின் பின் வன்முறை மூலம் அக ஒடுக்குமுறைகளை தொடரும் அதிகாரத்தை இனவாதம் இழந்து இருக்கின்றது. அக ஒடுக்குமுறையே தமிழனின் சமூக அமைப்பாக இருப்பதால், தமிழ் இனவாதம் புலிகளுடன் அழிந்துவிடவில்லை. இனவாதத்தை முன்வைத்து பிழைக்கும் இனவாதக் கும்பல்கள், தமிழ் இனவாதத்தை பாதுகாக்க போராடுகின்றது. இந்த பின்னணியில் தமிழினவாத போலி இடதுசாரியக் கும்பல்களும், பேர்வழிகளும் இனவாதத்தைப் பாதுகாக்கும் போலி இடதுசாரிய கோட்பாடுகளை வாந்தி எடுப்பது இன்னமும் தொடருகின்றது. இந்த வகையில் அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இரண்டு போலி தமிழ் இடதுசாரிய இனவாத தர்க்கங்களைப் பார்ப்போம்.
1.ஒடுக்கப்பட்டவனின் இனவாதம் ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானது என்கின்றனர். அதாவது இரண்டு இனவாதமும் ஒன்றல்ல. ஆகவே ஒடுக்கப்பட்டவனின் இனவாதத்தை ஒடுக்கபட்டவர்கள் ஆதரித்து அணிதிரள வேண்டும்.
2.நாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் இனவாதக் கோசமே ஒழிய, ஒடுக்கப்பட்டவர்களின் கோசமல்ல. ஆகவே நாம் இலங்கையர் என்பதை எதிர்த்து, நாம் தமிழர் என்பதை உயர்த்த வேண்டும்.
இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிராக சமவுரிமை இயக்கத்தின் அண்மைய நடைமுறைப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோசங்களை எதிர்த்து, தமிழ் இனவாத போலி இடதுசாரிகளின் பித்தலாட்ட தர்க்கங்களே இவை. தமிழ் இனவாதத்தை தங்கள் அரசியல் தெரிவாகக் கொண்ட போலித் தமிழ் இடதுசாரியமானது, புலிக்கு பிந்தைய வலதுசாரியத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த, இந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றது. இந்த வலதுசாரிய தமிழ் இனவாத தர்க்கத்தின் அரசியல் சாரத்தைப் பார்ப்போம்.
ஒடுக்கப்பட்டவரின் இனவாதமானது ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானதா!?