அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்
தற்போதைய கூட்டரசாங்கத்தின் மூன்றாவது வரவு-செலவு அறிக்கை நவம்பர் 09ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் வரவு- செலவு திட்டம்தான் அது. சம்பிரதாயபூர்வமாக வரவு- செலவு திட்ட உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் இதனை "நீலப்பசுமை வரவு-செலவு" அறிக்கையாகுமென வர்ணித்தார். நீலம் என்பதின் கருத்தானது சமுத்திரத்திலுள்ள சகல சாத்தியங்களையும் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாகுமெனவும், பசுமை என்பதன் கருத்தானது சுற்றாடல் சார்பான பொருளாதார முறையொன்றை முன்னெடுப்பதுமாகுமெனவும் குறிப்பிட்டார். அதேபோன்று அவர் தனது பொருளாதார அபிலாஷைகளை நுவெநசிசளைந ளுசi டுயமெய அல்லது தொழில் நிறுவனங்களை விருத்தி செய்யும் கொள்கை என்ற வகையில் பெயரிட்டார். நாம் முதலில் இந்த வார்த்தைகள் மற்றும் யதார்த்தத்திற்கிடையேயான வித்தியாசத்தை ஆராய்ந்து பார்ப்போம்.
நீல- பசுமை
அரசாங்கம் தனது பொருளாதார கொள்கையில் கடலுக்கு சொந்தமான மொத்த சாத்தியங்கள் சம்பந்தமாக அக்கறையுடன் சிந்திப்பதாகக் கூறினாலும் நவதாராளமய முதலாளித்துவ கொள்கை என்பது அதற்கு முற்றாக எதிரானது. நவதாராள முதலாளித்துவ கொள்கையில் உற்பத்தி மற்றும் உற்பத்தியோடு பிணைந்த சேவைகள் போன்ற உண்மையான மதிப்பை பெற்றுத்தரும் பொருளாதாரத்துறைகளுக்குப் பதிலாக நிதித்துறைகளுக்கு முதன்மையளிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடலின் பொருளாதார சாத்தியங்கள் குறித்து கூறப்படுபவை வெறுமனே வெற்று வார்த்தைகள்தான். உதாரணமாக, துறைமுக நகர திட்டத்தைப் பார்ப்போம். அத்திட்டம் காரணமாக கடலின் சாத்தியங்களை பயன்படுத்தும் இலங்கையின் பிரதான தொழிற்துறையான மீன்பிடித் தொழில் அழிகின்றது. ஆனால், அரசாங்கம் சீனாவின் வணிக மூலதனம் மற்றும் நிதி மூலதனத்திற்காக மீன்பிடித் தொழில்துறையை தியாகம் செய்ய தயாராக உள்ளது. துறைமுகம் என்பது கடல்வளம் ஆகக் கூடுதலாக பயன்படுத்தப்படும் துறையாகும். அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் அடிப்படை வசதிகளையும் கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறை உட்பட துறைமுக வளங்களையும் வெளிநாட்டு கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றது. இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரிப்பணத்தையும் இழக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விலைக்கு வாங்கும் சீன கம்பனிக்கு 25 வருட வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை வரவு-செலவு அறிக்கையில் 97வது முன்மொழிவின் கீழ், துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்கள் தலையிட ஏதுவாக வர்த்தக மற்றும் கடல்சார் சட்டமூலத்தை திருத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை வெளிநாட்டு பல்தேசியக் கம்பனிகளிடம் ஒப்படைக்கத் தயாராவது சிறு பிள்ளைக்குக் கூட புரியும்.