கொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...!
மனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று தன் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.