நாம் என்ன செய்யப்போகின்றோம்!
எமக்காக மக்களா? மக்களுக்காக நாமா?
உருத்திரகுமார ஈழமோ, லாச்சப்பல் ஈழமோ மக்களுக்கானதல்ல!
இலங்கை அரசியல் எப்போது தனிமனித அரசிலாகியதோ, அன்றிலிருந்து “என்னகாக என் அரசியலுக்காகத்தான் மக்கள்” எனும் நிலை தோற்றுவிக்கப்பட்டது!
இலங்கையில் தனிமனித தேசிய அரசியலின் பிதாமகன் ஜெ.ஆர். ஜெயவர்த்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலான இப்பரிணாமத்தில் மைந்தன் மகிந்தாவும் வளர்த்தெடுக்கப்பட்டதில், அவர் அதன் முடிசூடா மன்னராகியுள்ளார்.
இம்மன்னன் தான் இந்நாட்டு அரசனான போது, தமிழ் மக்கள் தன்னாட்டின் “கொத்தடிமை”களாகத்தான் இருந்தார்கள், அவர்களை நாகரிக சமூகமாகவாக்குவதற்கு, இந்நாட்டு தேசிய இன மக்களாக்குவதற்கு, நான் பற்பல முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் என பற்பல பஞ்தந்திரக் கதைகள் சொல்கின்றார். இதை ஆமென்பதற்கும் அக்கம் பக்கத்திலும் சில நவீன அடிமைகள்.
ஆம் சிங்களப் பேரினவாதம் கொத்தடிமை மனப்பாங்கு கொண்டதாலேயே, தமிழர் தாயகத்தை திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கி, அதில் தமிழ்த்தேசிய இனத்தினை அடைத்து வைத்துள்ளது. பறிக்கபட்ட, இல்லாதாக்கப்பட்ட உரிமைகளை தர மறுகின்றது.
நீங்கள் கேட்பதையல்ல, நாம் தருவதைப் பெறுங்கள் என்கின்றது. நீங்கள் “பக்குவப்பாடற்ற நாகரிகமற்ற சமூகமாக உள்ளீர்கள்”. நீங்கள் கேட்பதைத் தந்தால் என்னை சிறையில் கூட அடைத்து விடுவீர்களென காரணம் சொல்கின்றது!
கடந்த காலங்களில் காணாமல்போனவர்களின் சொந்த-பந்த உறவுகள், தங்கள் உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டு, அதற்காக முன்னெடுக்கும் சாத்வீக வழியிலான, ஐனநாயகப் போராட்டங்களை கொடிய கரம் கொண்டு அடக்குகின்றது. அதை தலைமை தாங்கி முன்னெடுக்கும் மனிதவுரிமை ஐனநாயகவாதிகள் கடத்தப்படுகின்றார்கள். மொத்தத்தில் எமது நாட்டின் நடப்பு ருஸ்ய ஜார் மன்னனின் ஆட்சியை நினைவுபடுத்துகின்றன.
இந்நிலை கொண்ட எம்நாட்டின் தமிழ் மக்களின் நாட்டு நடப்பு இப்படியிருக்கின்றது. இந்நடப்பு விளங்காது, புலம்பெயர்வின் எம்மவர்களும், “என் தமிழ் ஈழ அரசியலுக்குள் தான், என் தமிழ் ஈழப் பிரகடனத்துக்குள் தான் தமிழ் மக்கள் வர வேண்டும் என “புலன் பெயர்ந்து” புலம்புகின்றார்கள். வராவிட்டால் நடப்பதே வேறு… எனவும் வெருட்டுகின்றார்கள்.