“சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” – மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன் மற்றும் வை. வன்னியசிங்கம்
இலங்கையின் தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்தது
-மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன்
இலங்கையில் ஆரம்பத்தில் இருந்து ஏகாதிபத்திய நலனுடன் கூட்டமைத்த, ஆளும் சாதித் தேசியமான தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்து வந்துள்ளது.
மேற்கண்டவாறு தமிழ்நாடு மதுரை இறையியற் கல்லூரியில் “சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு இறையியற் கல்லூரியின் பேராசிரியர் அறிவர். டேவிட் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் மிக வீறுடன் முன்னெடுக்கப்பட்டது. அதன் பேறாக இந்தியா விடுதலையடைந்த போது இலவச இணைப்பாக இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அரைக்காலனித்துவ நீடிப்புக்கு எதிராக பின்னர் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ஐ.தே.கட்சியில் இருந்து பிரிந்து உருவாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி சிங்கள தேசிய முதலாளித்துவக் கட்சியாக தோற்றம் பெற்றது. அகில இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து உருவாகிய செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி ஆரமபத்தில் தமிழ்த்தேசிய முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. பின்னர் பெருமுதலாளிய வர்க்க நலனை வெளிப்படுத்தி ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. இலங்கையில் உருவான இரு கட்சிகளும் தமிழ்-சிங்கள இனவாதத்தின் அடிப்படையான தந்திரோபாயங்களை முன்வைத்து தேர்தல் வெற்றிகளை ஈட்டின.