மனித பிணங்களின் மேலான மூலதனத்தின் கொண்டாட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பன்னாட்டு மூலதனமானது, மனிதர்களை பலியெடுக்கின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட, மூலதனம் சுரண்டுவதற்காக மக்களை கொல்லுகின்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலதனம் சூழலை நஞ்சாக்கி, உழைக்கும் மக்களைச் சுரண்டும் மூலதனத்தின் குவிப்புக்காக, போராடும் மக்களையே அரசு கொன்று வருகின்றது.
சுரண்டும் வர்க்க உணர்வுடையவர்கள், மக்களை கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றனர். மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூலதனத்தை பாதுகாப்பதே, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்கின்றனர். இப்படி கொல்வது அரசின் சட்ட உரிமை என்கின்றனர். வர்க்க அரசின் மெய்நிலைத் தன்மையை முன்னிறுத்தி, மக்களை மூலதன ஆட்சிக்கு அடங்கி போகக் கோருகின்றனர்.
இப்படி சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் வர்க்க சர்வாதிகாரமே அரசு என்பதை, தூத்துக்குடி சம்பவம் உலகறிய பறைசாற்றி இருக்கின்றது.
அமைதியாக 100 நாட்கள் ஜனநாயக வழிகளில் போராடிய தமிழ்நாட்டு மக்கள், தங்கள் வரலாற்றில் காணாத அரச வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். மக்களைப் பிளக்கும் சாதி – மதம் - இனம் - பால் கடந்து தமது சொந்த வாழ்வுரிமைக்காக, சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக அணிதிரண்டு நின்ற போராட்டத்தை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்தை, அனுபவ ரீதியாக எதிர்கொண்டு நிற்கின்றனர்.
குறி பார்த்துச் சூடும் மூலதனத்தின் கூலிப்படைகள் நடத்திய வெறியாட்;டத்தில், பலர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்னணியாளர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டு இருக்கின்றனர்.