மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்
மூலதனத்தின் கட்டற்ற சுதந்திரத்தை முன்வைத்து, பொருளின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்று கூறி உருவானது உலகமயமாதல். இந்த அடிப்படையில் உருவான புதிய உலக ஒழுங்கில், நாடுகளின் "சுதந்திர" இறைமையானது மூலதனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. உலக மூலதனத்தின் சுதந்திரத்துக்கு ஏற்ப, நாடுகளின் இறைமைகள் அழிக்கப்பட்டது. மூலதனத்தின் கட்டற்ற இந்தச் சுதந்திரமே, நவதாராளவாதமாகியது.
தேசங்களின் எல்லைக்குள் தப்பிப்பிழைத்த சிறு மூலதனங்களையும், அரச மூலதனங்களையும், பெரு மூலதனங்கள் விழுங்கி கொள்வதற்கு இருந்த தடைகளை உலகமயமாதல் அகற்றியது. இதன் மூலம் பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும் தமக்குள்ளான போட்டியை மட்டுப்படுத்திக் கொண்டு கொழுக்க முடிந்தது. பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும், ஏகாதிபத்திய யுத்தமாக மாறுவதை பின்போட்டது.
உலகெங்கும் சிறு மூலதனங்களை அழித்து பெரும் மூலதனங்கள் கொழுப்பதற்கான உலகமயமாக்கமானது, பெரும் மூலதனத்துக்குள்ளான முரண்பாட்டை தணித்து விடுவதில்லை.
மாறாக சிறு மூலதனங்களை அழித்து கொழுக்கும் பெரும் மூலதனம், தமக்கு இடையில் ஒன்றையொன்று அழிப்பதற்கு தயார் செய்தது. இதிலிருந்து அமெரிக்க மூலதனங்கள் தப்பிப் பிழைக்க, ஏகாதிபத்தியம் என்ற தனது சொந்த தேசிய அரணுக்குள் சரணடைகின்றது. தனது நாட்டிற்குள் பிற மூலதனங்களுக்கு தடையை ஏற்படுத்தி, உலகைச் சூறையாடும் உலக ஒழுங்கை அமெரிக்க மூலதனங்கள் கோருகின்றது. அமெரிக்க மூலதனத்தின் இந்த தற்காப்பு நிலையானது, உலகத்தை புதிய யுத்த சூழலுக்கு வித்திட்டு இருக்கின்றது.