யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது
சொந்த உழைப்பை சமூக உழைப்பாக மாற்றாத, தன் உழைப்பில் இருந்து சமூகத்துக்கான பங்களிப்பைச் செய்யாதவர்கள், இலங்கையில் புலம்பெயர் உதவியைக் கையாள்வதும் - கோருவதும் நடந்து வருகின்றது. இதுவே சமூக நோக்குக்கு முரணானதாகவும் - இதனாலேயே இது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியாததாகி விடுகின்றது.
மறுபக்கத்தில் நடைமுறை வாழ்வில் சமூக சிந்தனையையும் அதற்கான உழைப்பையும் வழங்க முடியாதவர்கள் - பணத்தைக் கொடுப்பதையே சமூக உணர்வாக கருதுகின்றவர்களால் கொடுக்கப்படும் பணம், சமூகச் சீரழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.
இரண்டு பக்கத்திலும் சமூகம் சார்ந்த சிந்தனையும் - நடைமுறையும் இன்றிய பணச் செயற்பாடுகள் என்பது, சமூக அழிவுக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு வழிகாட்டல் இன்றியும், பணத்துக்கு என்ன நடந்தது என்ற சுயகேள்வியும் இன்றியும், அதனால் அந்தக் குழந்தைக்கு கிடைத்த நன்மை என்ன என்ற கேள்வியும் இன்றி, பணத்தைக் கொடுத்தால் என்ன நடக்குமோ, அதுதான் இங்கும் நடக்கும்.
யுத்தம் கூட கல்வியை இந்தளவுக்கு சீரழித்;தது கிடையாது. யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தை, புலம் பெயர் பணம் சீரழிக்கத் தொடங்கி இருக்கின்றது.
பணத்தைக் கொண்டு புலம்பெயர் சமூகத்தை வழிநடத்த முனையும் சுயநலவாதிகளாலும், பிரமுகர்களாலும், பதவி வேட்டை பேர்வழிகளாலும் புலம்பெயர் உதவியை சமூக நோக்கு உள்ளதாக்க முடியாது. ஆனால் அவர்கள் தான் இன்று இதைக் கையாள்வது நடக்கின்றது.
பணத்தைக் கொண்டே கல்வியின் இலக்கை அடைய முடியும் என்று கூறுவதும், பணத்தை பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள கல்வி சமூகத்தால், சமூகத்தை அழிவுக்கே வழிநடத்த முடியும்.
இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி, யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தின் கல்வியை அழிக்கின்றது.