Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மனித உரிமை தினத்திலே கடத்தப்பட்ட செயல் வீரர்கள்.

2011ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களது அரசியல் கடமைக்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்கள். அப்படி புறப்பட்டுச் சென்றவர்கள் இன்றுவரை திரும்பவில்லை. முதலாளித்துவ அரசாங்கத்தின் ஏவலாளர்கள் அவர்களை கடத்திச் சென்று விட்டார்கள்.

லலித் குகன் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விடயத்தை பார்க்கும்போது கடத்தப்பட்டவர்களில் இவர்கள் கடைசியானவர்களாகவும் இருக்கப்போவதில்லை. காணாமலாக்கப்பட்ட முதலாவது நபர்கள் இவர்களல்ல. நான் இப்படிக் கூறுவதனால் லலித் மற்றும் குகன் தோழர்கள் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகளையும் அவர்கள் செய்த தியாகத்தையும் குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது.

இந்த முதலாளித்துவ முறைக்குள், இவை அரிதான சம்பவங்களல்ல. லலித் - குகன் கடத்தப்பட்டது சம்பந்தமாகவும், மனிதர்கள் கடத்தப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது சம்பந்தமாகவும், அவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் இன்று பகல், கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவிட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆர்ப்பாட்டங்களை செய்வதனாலும், இப்படியான கூட்டங்களை நடத்தி எதிர்ப்பைக் காட்டுவதனாலும் இப்படியான சம்பவங்கள் நிறுத்தப்படப்போவதில்லை. இந்த முதலாளித்துவமுறை மாற்றுக் கருத்துள்ளவர்களை சகிக்காது. கொழும்பில் மாத்திரமல்ல இலங்கை பூராவுமுள்ள மக்களை அழைத்து மண்டபங்களை நிறைத்து வாய்கிழியக் கத்தினாலும், கோஷங்களை எழுப்பினாலும், ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் முதலாளித்துவத்தின் காதுகளுக்கு அது எட்டப்போவதில்லை. அந்த நம்பிக்கையோடு நாங்கள் இங்கு வந்து கூடவுமில்லை. இந்த முதலாளித்துவம் இவற்றையெல்லாம் நிறுத்திவிடும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

இந்த முதலாளித்துவ சிஸ்டத்திற்குள் இலங்கையைப் போன்ற பிற்போக்கு நாடொன்றில் மனிதர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள்? ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்? மாற்றுக் கருத்துள்ளவர்களை ஏன் கொலை செய்கிறது? இந்த சிஸ்டத்திற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கண்ணீர்ப்புகை குண்டுகளையும், குண்டாந்தடிகளையும், குண்டர்களையும் ஏன் பயன்படுத்துகிறது? அதுதான் இந்த முதலாளித்துவ முறையில் இயல்பு. தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு, தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு மக்களை ஆளப்பார்க்கிறது.

2011ம் ஆண்டு லலித் - குகன் கடத்தப்பட்டார்கள். காணாமலாக்கப்பட்டார்கள். இந்த கடத்தலுக்கு மாத்திரம் நாம் அவற்றை மட்டுப்படுத்த முடியாது. அத்தோடு சர்வாதிகாரத்தின் செயற்பாடுகள் நின்றுவிட்டனவா, இல்லை. குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது இராணுவத்தை ஏவி உயிர்ப்பலி எடுத்தது எதற்காக? தமது உரிமைக்காகப் போராடும் சானக போன்ற தொழிலாளிகளையும் மீனவர்களையும் ஏன் சுட்டுத் தள்ளுகிறது.? வடக்கு கிழக்கில் துன்பப்படும் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

வடக்கிலே துன்பப்படும் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின், வடக்கில் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கில் நடக்கும் அநியாயங்கள், சிறைபடுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் குடும்பங்கள் படும் வேதனைகள், அதைத் தவிர கடத்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் என ஏராளம். இந்த இடத்தில் தான் நான் நினைக்கிறேன், இந்த உரையாடலின் ஆழம் இருக்கிறது.

அவர்களைப் பற்றிய நினைவுகளை மட்டுமே கூறாத அதற்கும் அப்பால் சென்ற அரசியலைப் பற்றி நாங்கள் பேசவேண்டியுள்ளது. ஏன் அவர்களை அடக்குமுறை செய்கிறார்கள்? அதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. ராஜபக்ஷ இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்;கள். ராஜபக்ஷ ஆகட்டும், ராஜபக்ஷ சர்வாதிகாரத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இதற்குள் செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்த முடியுமா? பிரச்சினை எங்கிருந்து ஆரம்பிக்கிறது? ஏன் லலித் குகனை கடத்தினார்கள்? ஏன் அடக்குமுறை செய்கிறார்கள்? ஏன் கொலை செய்கிறார்கள்?

இது ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை. இந்நாட்டில் ஜனநாயகம் இல்லை. அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த முதலாளித்துவத்தினால் மக்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? வடக்கு கிழக்கு மத்திய மலைநாட்டு மனிதர்களுக்கு வாழ்க்கையைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? இவர்கள் எல்லோரும் கேட்பது வாழ்க்கையை. உரிமையை கேட்கும் மக்களுக்கு வேட்டுக்கள் கொடுக்கப்படுகின்றன. அப்படியாக போராடும் மனிதர்களை, பல்வேறு உரிமைகளைக் கேட்டு போராடும் மக்களை அணிதிரளச் செய்யும் செயற்பாட்டாளர்களை அமைதியாக்குவதற்கு வேட்டுக்களை பயன்படுத்த வேண்டும். அப்படியாகக் கொல்லப்படுபவர்கள் மத்தியிலிருந்து மீண்டும் குரல் எழும்பும்போது, அதற்கு பயப்படுகிறார்கள். ஆகவே முதலாளித்துவம் மனிதர்களை கொல்லவும் பயப்படுகிறது. ஏன்? அப்படி கொல்லப்படும் மனிதர்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடி அவ்வாறு கொல்லப்படும் மனிதர்கள் அந்த மக்கள் மத்தியில் மீண்டும் போராட்ட வடிவில் உயிர் பெறுகிறார்கள்.

எமது மண் சிறப்பு மிக்கது. வெட்டப்பட்டாலும் மீண்டும் மீண்டும் துளிர்க்கக் கூடியது. தனக்கு சவாலாக இருக்கும் மனிதர்களை கொல்ல முதலாளித்துவம் பயப்படுகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, அநீதிக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள வேண்டும் என்ற செய்தியை எடுத்துக் கொண்டு தான் லலித் வடக்கிற்குச் சென்றார். ஆகவே இந்த முதலாளித்துவம் நினைப்பதைப் போன்று அல்லது ஏற்றவர்கள் நினைப்பது போன்று அது தேவையற்ற விடயமாக இருக்கலாம். இநதச் செய்தியை எடுத்துக் கொண்டு தான் செய்த தொழிலையும் விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.

வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இநத அடக்கு முறைகளிலிருந்து விடுதலையடைய முடியும். இந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இளைஞர், ஒரு காலத்தில் ஆயுதக்குழுக்களோடு இணைந்து செயற்பட்ட இன்னொரு இளைஞரை சந்திக்கிறார். அவர் செயற்பட்ட ஆயுதக்குழுவில் நிலவிய இன, குல பேதங்களை எதிர்த்து அந்த ஆயுதக்குழுவிலிருந்து வெளியேறுகிறார். வெளியேறிய அவர் அரசாங்கத்தின் ஆயுதப்படைகளிடமிருந்தும், தான் இருந்த ஆயுதப்படையிடமிருந்தும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களிலிருந்து தப்பித்து பிழைத்த மனிதன். லலித்துடன் சேர்ந்து இந்தச் செய்தியை வடக்கிலும், கிழக்கிலும். எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்வதற்காக லலித்தோடு குகனும் சேர்ந்து கொண்டார்.

அவ்வாறு வெளியேறிய மக்களுக்கு அரசாங்கம் பயப்படுகிறது. அடக்குமுறை இராணுவம் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் அப்படியான மனிதர்களுக்கு இந்த முதலாளித்துவ அரசாங்கம் பயப்படுகிறது. ஆகவே தான் அவர்களை கடத்திச் சென்று கொலை செய்யப் பார்க்கிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போன்று இது ஜனநாயத்திற்கும் அப்பால் சென்ற ஒரு பிரச்சினை. முதலாளித்துவ முறையில் இந்தப் பிரச்சினைக்கு பதில் கிடைக்காவிட்டால், அதற்கு ஒரே பதில் தான் இருக்கிறது. அதாவது அவர்களைக் கொன்றுவிட வேண்டும்.

ஆகவே, முதலாளித்துவ முறை இருக்கும் வரை இந்த அடக்குமுறை அப்படியே இருக்கும். இன்று மனித உரிமைகள் தினம், மக்களின் உரிமைகளுக்கான போராட்டமொன்று இருக்கின்றது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் திரளாக போராடும் போது அடக்குமுறை இயந்திரத்தை கொஞ்சம் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். வெளிப்படையான ஜனநாயகமொன்று கிடையாது. ஆகவே, அதைப்பற்றி நாங்கள் பேசுவோம். அப்படி பேசிக்கொண்டே இருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனாலும் அதைப்பற்றி பேசுவதும் இந்த சிஸ்டத்திற்குள் ஒரு தொழிலாகத்தான் இருக்கிறது.

மூன்று வேளை சாப்பாட்டையும் பூர்த்தி செய்யக் கூடிய நல்ல தொழில். ஆகவே முதலாளித்துவத்தை கவிழ்க்க முயற்சி செய்யாமல், முதலாளித்துவ முறைக்குள்; மனிதர்களின் உரிமைகள் பிரச்சினைகள் சம்பந்தமாக, ஜனநாயகம் சம்பந்தமாக பேசிப் பேசியே இந்த முதலாளித்துவத்திற்குள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க முடியும். அது வாழ்வதற்கான நல்ல தொழில். பட்டினி கிடக்காமல் உண்டு குடித்து உல்லாசமாக இருக்க முடியும்.

அடுத்த விடயம் தான் இந்த முதலாளித்துவம் நெருக்கடிக்குள் தள்ளப்படும்போது, ராஜபக்ஷாக்களைப் போன்று சமாளிக்க முடியாத நிலை வரும்போது சிஸ்டத்தை நாசமாக்கும் நிலை வரும்போது இராணுவம் இதற்குள் நுழைந்து இந்த உருக்குலைந்த வண்டிக்கு வேறொரு ஓட்டுநரை தெரிவு செய்யப் பார்க்கிறது. ஆகவே ஓட்டுநரை தெரிவு செய்வதற்குப் பதிலாக சிஸ்டத்தையே மாற்றியமைக்க வேண்டும். அதற்காகத்தான் லலித், குகன் பாடுபட்டார்கள். வடக்கிற்கும் தெற்கிற்கும் இந்தச் செய்தியை எடுத்துச் செல்லும் பயணத்தின்போதே அவர்கள் கடத்தப்பட்டார்கள்.

அவர்கள் பயணித்த பாதை ஒடுக்கப்ட்டவர்களின் பாதை! பாட்டாளி வர்க்கத்தின் பாதை! சமத்துவத்திற்கான பாதை! சிஸ்டத்தை மாற்றியமைக்கும் பாதை! முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு சாவுமணியடிக்கும் பாதை! இந்த மனித உரிமை தினத்திலே அந்தப் பயணப்பாதையில் செல்ல நாங்கள் உறுதி கொள்வோம்.