Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அம்மாக்களினதும் - தாய்மார்களினதும் இழப்புகள்

எமது தோழர்களான கிளி, புபுதுவின் அம்மாக்களின் மரணச் செய்திகள் எமது தோழர்களின் துயரங்களாக, அது எமது தாய்மார்களின் இழப்பாகின்றது. தோழர்களுடன் இணைந்த எமது போராட்ட வாழ்க்கையானது - அவர்களின் துயரம், மகிழ்ச்சி.. அனைத்துடனும் எம்மையும் இணைத்து விடுகின்றது.  

தொப்புள் கொடியில் இருந்து தொடங்குகின்றது மனித உறவுகள். இந்த உறவுக்கு ஈடு இணையற்ற உறவுகள் எதுவும் கிடையாது. தாய்மை சார்ந்த உறவுகளின் எற்படும் இழப்பு உணர்வு பூர்வமானவை, உணர்ச்சிகரமானவை.    

தாயின் கருவில் இருந்த ஆரம்பிக்கும் மனித உறவுகள் - வாழ்வு சார்ந்து மனித வாழ்க்கைப் போராட்டத்துடன் ஆரம்பிக்கின்றது. தாய் தன்னை இயற்கையுடன் இணைந்த சமூக உயிரியாக தன்னை அர்ப்பணிக்கின்ற வாழ்க்கை தான் தாய்மையாக - சுயநலம் பிடித்த மனித வாழ்வில் எதிர்நிச்சல் போடுகின்றது. 

தான், தன் வாழ்க்கை என்று குறுகிய வட்டத்துக்குள் தாய்மை சுருங்கிவிட்ட உலகில் - நாம் இன்று வாழ்கின்றோம். தாயின் குழந்தைகள் இந்தச் சிறிய வட்டத்தை தகர்த்து - மனிதனை மனிதன் நேசிக்கும் சமூகத்தை உருவாக்கும் போராட்டத்தையே தாங்கள் வாழ்க்கையாகும் போது - எமது தோழர்களின் அம்மாக்களின் வாழ்வும் கூட போராட்டக் களமாகி விடுகின்றது.

இந்த பொதுவான வாழ்க்கைக்கான போராட்டத்தின் பின்புலத்தில் 1971, 1989, 1983-2009 களின் புதல்வர்களையும் புதல்விகளையும் இழந்த தாய்மையை - இங்கு இந்த இடத்தில் நினைவு கொள்ள முடியும்;. வரலாற்றுப் பக்கத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மையையும் - காணமல் போன தங்கள் குழந்தைகளைத் தேடி தாய்மை நடத்தம் இன்றைய போராட்டத்தையும் - வார்தைகளால் விளக்கிவிட முடியாது.

சமூக உயிரியன் தாயின் உன்னதமான இயற்கையான மனித நடத்தை உணரும் போதே - எம்மால் தாய்மையின் இழப்புகளை உணர்வு பூர்வமானதாக உணர்ந்து கொண்டு - அதை பகிர்ந்து கொள்ளவும் வைக்கின்றது.

சமூகத்தை நேசித்து, அதை மாற்ற எம்முடன் பயணிக்கும் தோழர்கள் கிளி, புபுதுவின் அம்மாக்கள் அனைவரும், தோழர்களான எமக்கும் தாயாக இருக்கின்றனர். அவர்களின் இழப்பு தோழர்களுக்கு மட்டுமல்ல - அவர்களுடன் இணைந்த எமக்கும் கூட்டு இழப்புத்தான். தோழர்களாகிய நாங்கள் இந்த மனித உணர்வை, சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
15.12.2015